உலகின் அதிசய இடங்கள்!
கார்க்கி பவா
நம்ம பூமி கொஞ்சம் இல்ல, ரொம்பவே அதிசயம் நிறைஞ்சது சுட்டீஸ். அதிசயம்னு சொன்ன உடனே உங்களுக்கு உலகில் உள்ள ஏழு அதிசயங்கள் ஞாபகம் வருமே. ஆனால், நாம இப்போ பார்க்கப்போறது அது மாதிரி இல்ல. அதுக்கும் மேல. உலகத்துல இருக்குற நீங்கள் இதுவரைக்கும் கேள்விப்படாத விஷயங்களைப் பற்றிய ஒரு தொகுப்புதான் இது...
மழையே பெய்யாதாம்...
நம்ம பூமியில மழையே பெய்யாத பகுதி எதுன்னு கேட்டா உங்களுக்கு ஏதாவது ஒரு பாலைவனம் ஞாபகத்துக்கு வரலாம். சிலியில் இருக்கும் அட்டகாமா பாலைவனத்துல ஆயிரம் வருஷமா மழை பெய்யலைன்னு யாராவது சொல்லி நீங்க கேள்விப்பட்டிருக்கலாம். அப்படியே இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கோங்க. அண்டார்டிகாவில் இருக்குற மெக்முர்டோ (McMurdo Dry Valleys) பள்ளத்தாக்கில் 2 மில்லியன் வருஷங்களா மழையே பெய்யலை. இதுதான் உலகிலே மிக வறட்சியான இடமாம்.
உலகின் மிகப் பழைமையான வழிபாட்டுத்தலம்!
இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகின் பழைமையான வழிபாட்டுத்தலம் எதுவென்றால் தெற்கு துருக்கியின் கோபெக்லி டெப் (Gobekli Tepe) என்ற இடத்தைக் கைகாட்டுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 1963-ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்த இடத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த வழிபாட்டிடம் 11,500 வருடம் பழைமையானதாம். இங்கே கண்டறியப்பட்ட தூண்களில் கடவுள்களின் உருவங்களும் விலங்குகளின் உருவங்களும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
காற்றுக்கும் உண்டு எல்லை...
வானத்துக்கு எல்லையே இல்லைனு சொல்லியிருப்பாங்க. ஆனால், அங்க இருக்குற காற்றுக்கு ஒரு எல்லை இருக்குது. கர்மேன் எல்லை (Karman line) என்று அழைக்கப்படும் அது, கடல் மட்டத்துல இருந்து 100 கி.மீ உயரத்துக்கு இருக்குற காற்று மண்டலத்தை அடக்கியது. கர்மேன் எல்லைக்கு மேலேயும் காற்று இருந்தாலும், எல்லா நாடுகளும் இதை ஏத்துக்கிட்டதுனால இதுதான் காற்று மண்டலத்தின் எல்லையாக இருக்கு.
ஒரே பூமி... ஒரே கண்டம்!
உலகம் உருவானபோது ஒரே ஒரு நிலப்பரப்பு இருந்ததாகவும் அது பிரிந்து 7 கண்டங்களாக மாறியது என்றும் படித்திருப்பீர்கள். அந்த ஏழு கண்டங்களும் இன்னும் 250 மில்லியன் வருடங்களில் மீண்டும் பழைய மாதிரியே ஒரே நிலப்பரப்பாக மாறிவிடும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்பொழுது ஒரே பூமி ஒரே கண்டம்தான்.
எது உயரம்...
உலகின் மிக உயரமான சிகரம் எது என்று கேட்டால் உங்க எல்லோருக்கும் எவரெஸ்ட் என்று பதில் தெரிந்திருக்கும். அதுதான் உலகத்துல உயர்ந்த சிகரமா? இல்லவே இல்லை. அதைவிட உயரமானது ஹவாய் தீவுகள்ல இருக்குற கியா சிகரம்தான்.
இதோட மொத்த உயரம் 10,203 மீட்டர். ஆனால், எவரெஸ்டின் உயரமோ 8,848 மீட்டர்தான். எவரெஸ்ட்டைவிட 1,355 மீட்டர் உயரம் அதிகம் இருந்தாலும் கியா சிகரத்தோட பெரும்பாலான பகுதி பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கு. கடலுக்கு அடியில் இருக்குற அதன் அடி முதல் நுனி வரை அளந்தால் அது எவரெஸ்ட்டை விட உயரமா இருக்கும். ஆனால், சிகரத்தின் உயரத்தை அளக்கும்போது கடல் மட்டத்துக்கு மேல் இருக்குற உயரத்த மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதால் இப்போதைக்கு எவரெஸ்ட்தான் உயர்ந்த சிகரம்.
நிலவே திரும்பி வா...
‘‘நிலா நிலா ஓடி வா” என்று நிலாவைப் பார்த்துப் பாட்டுப் பாடுவீங்க இல்லையா. இப்போ நாம தூரத்துல பாக்குற நிலா பல வருடங்களுக்கு முன்னாடி பூமியோட ஒரு பகுதியா இருந்திருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. பல மில்லியன் வருடங்களுக்கு முன்னாடி பூமி உருவாகும்போது அது நாம இப்போ பார்க்கிற மாதிரி நிலையான அமைப்பில் இல்லை. ஒரு மிகப்பெரிய எரிமலை போலத்தான் இருந்தது. அப்போ பூமியோட வேகமான சுழற்சியால் ஒரு பகுதி பிரிந்துபோய் நிலாவா மாறியிருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
இப்போ தெரியுதா, நிலா நிலா ஓடி வா பாட்டோட அர்த்தம்