காதல் வானிலே - நித்திலா
12 May,2018
நீலப் போர்வை போர்த்தி துயிலில் ஆழ்ந்திருந்தாள் கடல்கன்னி. உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையாய் அலையோசை. தன் பிம்பத்தை கடல் கண்ணாடியில் சரி பார்த்த அம்புலி, வானவீதியில் தன் உலாவலைத் தொடங்கியிருந்த மாலை வேளை. எதிரில் இருந்த அழகில் மனம் லயிக்காமல் வெறுமனே கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிணி.
"இயற்கை அழகு சலிக்கிறதே இல்லை"
"ம்" தோழி சந்தியாவின் பேச்சு காதில் விழுந்ததற்கு அறிகுறியாக வெறுமனே உம் கொட்டினாள் தாரிணி.
"இங்க வந்தும் உம்முனுதான் இருப்பியா? அங்க பாரு! அவங்கதான் நீ சொன்ன பாட்டியா"
"ஆமாம் அவங்கதான்"
"இது என்ன புது பழக்கம் தாரிணி"
"வசந்த்தான் சொல்லிக் கொடுத்தார் சந்தியா”
"விசேஷமான நாட்கள்ல வருஷம் முழுக்க நமக்காக உழைக்கிறவங்களுக்கு நம்மால முடிஞ்சதை செய்யனும் தரூ. அவங்க முகத்தில தெரியற சந்தோஷத்தில நமக்கு ஏற்படற நிறைவு இருக்கே, அது அந்த நாளோட சந்தோஷத்தை பல மடங்காக்கிடும் தரூ"
கணவன் நினைவில் உள்ளம் உருகி விழிகள் தளும்பத் தொடங்கியது தாரிணிக்கு. தினசரி போடும் சிறுவனுக்கும், பூக்கார பாட்டிக்கும் தவறாமல் உதவி வரும் கணவனை நினைத்து பெருமிதம் கொண்ட மனது, சமீபமாக இருவருக்குள்ளும் ஏற்பட்டு விட்ட இடைவெளியால் வாடியது.
"வசந்த் பேச்சை எடுத்தாலே உருகிட்டு, எதுக்கு அவர் கூட எப்ப பார்த்தாலும் சண்டை போடறே தாரிணி"
“கெட்டூகெதர்" பழைய நட்புகளை சந்தித்து, ஆடிப்பாடி, பேசிக் களித்து அளவலாவது மகிழ்ச்சியான ஒன்று! என் வாழ்விலோ என் நிம்மதியைப் பறித்த ஒன்றாக மாறிவிட்டது!!
"தாரிணி"
"எல்லாம் அந்த சரிதாதான் சந்தியா! எப்ப பார்த்தாலும் போன் பண்றா! எனக்கு சுத்தமா பிடிக்கலை! அவளைப் பார்த்தா எனக்கு நல்லவளாவும் தெரியலை! இவருக்கு சொன்னா புரியவே மாட்டீங்குது"
"சண்டை போடறதை விட்டுட்டு, பொறுமையா, அன்பா சொல்லிப் பார் தாரிணி"
"ம். இன்னைக்கு இந்த விஷயத்தை பேசி முடிக்காம விட மாட்டேன்"
இன்று சீராகச் சுழலும் குடும்பத்தின் சக்கரங்கள் சகதியில் சிக்கி மீளாமல் தவிப்பதற்கு "கெட்டூகெதர்" இந்நிகழ்வும் ஒரு காரணம் ஆகி விட்டது!
ஆணோ, பெண்ணோ நட்பை புதுப்பித்து அளவு கடந்து அளவலாவி அல்லலுற்று நோகாமல், காதலைப் புதுப்பித்து தன் நிலை மறந்து அவல நிலை காணாமல் வாழ்ந்திருத்தலே முறையாகும்! உயர் நெறியாகும்!
"மல்லிப் பூ! மல்லிப் பூ! முழம் பத்து ரூவா!"
அந்தக் குரல் தாரிணியின் கவனத்தை ஈர்த்தது. அவரிடம் செல்வதற்காக எழுந்தவள் அவரே தன்னை நோக்கி வருவதைக் கண்டு மீண்டும் மணலிலேயே அமர்ந்தாள். வேக எட்டுக்களை வைத்து அவளிடம் வந்தவர் பூக்கூடையுடன் அருகில் அமர்ந்தார்.
"நல்லா இருக்கீங்களா பாட்டி, தாத்தா எப்படி இருக்கார்"
"எங்களுக்கென்ன நல்லாயிருக்கோம். நீயேன் ராசாத்தி வாடுன ரோசா பூவாட்டம் இருக்கே"
என் வசந்தன் என்னை நீங்கி நின்றால், வாட்டம்தானே என் விதி!!
"பாப்பா"
"நான் நல்லாதான் இருக்கேன் பாட்டி! உங்களை பார்க்கத்தான் வந்தேன்! இதை வாங்கிக்கங்க பாட்டி"
"என்ன பாப்பா! எதுக்கு ஸ்வீட்டு, புதுத்துணி எல்லாம்.. தீவாளிக்கு இன்னும் நாள் இருக்கே"
"எங்களுக்கு நாளைக்கு கல்யாண நாள் பாட்டி"
"பாட்டி இங்க வாங்க" யாரோ ஒருவர் அழைக்க.
"சித்த இரு கண்ணு! வந்துடறேன்"
யாரோ ஒரு கணவன் தன் மனைவிக்கு பூ வாங்கிக் கொடுக்க, தாரிணியின் மனதில் ஓர் ஏக்கம் விஸ்வரூபம் பெற்று நின்றது.
"மல்லிகைப்பூ ஒரு முழம் கொடுங்க பாட்டி"
"அஞ்சு முழம் கொடுங்க பாட்டி"
"அச்சோ வசந்த்! அவ்வளவு பூவை ஆபிஸ்சுக்கு வைச்சுட்டு போக முடியாது"
"அப்படியே ஒரு ரோஜாவும் கொடுத்துடுங்க பாட்டி"
"வசந்த்!! அடி வாங்கப் போறீங்க"
"உனக்கு பிடிச்ச யெல்லோ கலர்தான் வாங்குவேன் தரூ"
கலைந்து விட்ட தேன்கூடாய் சுழன்றெழுந்தது வசந்தனின் நினைவுகள்! மணலில் இருந்து எழுந்த தாரிணி ஆர்ப்பரிக்கும் அலைகளிடம் நெருங்கி நின்றாள்.
அலைகள் அவள் மனதை தேற்றத் தவறியது. இங்குதான் இருவரும் கை கோர்த்து கால் நனைப்போம், கதை பல பேசி, நிலவு வந்த பிறகே வீடு திரும்புவோம். யாரோ கை பற்றி இழுத்ததில் திடுக்கிட்டுத் திரும்பினாள் தாரிணி.
"வசந்த்!!"
"கடல்கிட்ட என்ன ரகசியம் பேசிட்டிருக்க" வசந்தனின் மலர்ந்த முகம் தாரிணியின் முகத்திலும் மலர்ச்சியை வரவழைத்தது.
“தூது சொல்லிட்டு இருக்கேன்”
“என்ன தூது” என்றான் அறியாதவன் போல்.
"கைபிடித்து காதல்
சொல்லியவன்
காணோமடி தோழி!
மருதாணி விழிகள்
மண் சேரும் முன்பு
எனை வந்து சேர
தூது செல்லடி தோழி!”
தாரிணி விளையாட்டாக எதுவும் சொல்வாள் என்ற வசந்தன் நினைப்பு பொய்யாக, அவள் தோள்களில் அழுந்தக் கரம் பதித்தான் வசந்தன்.
“சாரி தரூ! சாரிடா”
கணவன் முகம் வாடுவதைக் கண்டு தன்னையே திட்டிக் கொண்டாள் தாரிணி. காலந்தோறும் காதல் புரியும் விந்தை இதுவல்லவோ?
“எவ்வளவு நாளா நடக்குது வசந்த்”
“என்ன தரூ”
"என் ஃப்ரெண்டுனு சொல்லிட்டு ஒருத்தி உங்களுக்கு ஃப்ரெண்டா இருக்காளே! அது! சந்தியா சொல்லிதானே வந்தீங்க”
"ம். சந்தியாதான் நீ இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கேன்னு சொன்னாங்க”
"நாளைக்கு நம்ம முதல் கல்யாண நாள் வசந்த்! இப்ப இருக்கிற நிலைமைக்கு...”
"எப்படி இருக்குமோனு கவலைப்படறயா தரூ? நமக்குள்ள இனிமேல் சண்டையே வராது தரூ! வீட்டில போய் பேசிக்கலாம் வா"
"பாட்டியை சாப்பிடக் கூப்பிட்டு, சந்தியாவை அவ வீட்டில விட்டுட்டு, அப்புறம்தான் பேசமுடியும்"
"ஓகே பேபி" நெடு நாட்களுக்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
"என்ன டிபன் செய்யறே தரூ"
"அடை, வெங்காயச் சட்னி"
"நான் வெங்காயம் நறுக்கி தரட்டுமா"
"இல்லை வசந்த்! இன்னைக்கு வேலை எதுவும் இல்லை! நானே செஞ்சுக்கறேன்"
"தரூ"
"என்ன வசந்த்"
"சாரி"
"எதுக்கு"
"நீ சரிதாவை பத்தி சொன்னப்ப நான் கேட்கலை... உன்னை கஷ்டப்படுத்திட்டேன்.. சாரி தரூ"
வெங்காயத்தை வைத்துவிட்டு சமையலறை மேடையில் அமர்ந்திருந்தவனின் அருகில் தானும் அமர்ந்து தன் கரத்தை அவன் கரத்தோடு பிணைத்துக் கொண்டாள் தாரிணி.
"நாம எப்பவும் தானே சண்டை போடறோம் வசந்த்"
"அது வேற தரூ! அந்த சண்டை சுவாரஸ்யமா இருக்கும்! இப்ப மனசுல அமைதி இல்லாம.."
"விடுங்க வசந்த்! நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க! அதான் பிரச்சனைக்கு காரணம்! உங்க இளகின மனசை அவ தனக்கு சாதகமாக்கிட்டா”
"இன்னைக்கு அவ பிரெண்டு கிட்ட பேசிட்டிருந்ததை கேட்டதுக்கு அப்புறம்தான் அவளோட உண்மையான முகம் எனக்கு தெரிஞ்சுது! ஏதேதோ பொய் சொல்லி என்கிட்ட நிறைய பணம் வாங்கிட்டா தரூ"
"வாங்கிக்கலாம் வசந்த்! கவலைப்படாதீங்க"
"நான் உன் பேச்சை கேட்டிருக்கனும்"
"நான் உங்களை சந்தேகப்படறேன்னு நினைச்சிருப்பீங்க"
"இல்லை"
"அப்புறம்"
"நீ பொஸஸிவ் பிசாசாச்சே! அதான்.. கோபப்படறேன்னு நினைச்சேன்"
"நான் பிசாசா" என தாரிணி கண்ணை உருட்ட.
"ம். என்னோட அழகான காதல் பிசாசு"
"காதல் பிசாசுக்கு என்ன பரிசு கொடுக்கப் போறீங்க"
"இப்போதைக்கு இதை மட்டும் வச்சுக்கோ" என அவள் கன்னங்களில் முத்திரைப் பரிசளித்தான் வசந்தன். தாரிணி நிம்மதியோடு அவன் தோள்களில் சாய அவளை அணைத்துக் கொண்டான் அக்கணவன். இடையிட்ட மேகம் மறைந்து காதல் வானம் பளீரிட்டது.