நேச நிழலோரம்... - நித்திலா
12 May,2018
மாலை நேரம். இதமான காற்று மலர் பவனத்தை சூழ்ந்திருந்தது. தன் வீட்டின் முன் அறையையே அலுவல் அறையாக பயன்படுத்தி வந்தாள் மலர்விழி."மலர் எம்பிராய்டரீஸ்" என்ற பெயர்ப்பலகை அவள் செய்யும் தொழிலை பறைசாற்றியது. சிறு வயதில் பொழுதுபோக்காக கற்றுக் கொண்டதையே இன்று தன் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டுள்ளாள் மலர்விழி.
"நாளைக்கு காலையில கொடுத்துடறேன் மேம்" என வாடிக்கையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த மலர்விழியைக் கண்டு அறை வாசலிலேயே தயங்கி நின்றார் சௌந்தர்யா.
பேசி முடித்துவிட்டுத் திரும்பிய மலர்விழி, " அம்மா! ஏன் அங்கயே நிற்கறீங்க? என்ன விஷயம்மா"
"மலர்.."
"என்னம்மா"
"மாப்பிள்ளைக்கு குணமாயிட்டா திருச்செந்தூர் வர்றதா வேண்டியிருந்தேன்..."
"நீங்க அவ்வளவு தூரம் தனியா போக வேண்டாம்மா! எல்லாரும் சேர்ந்தே போகலாம்! நான் அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்மா"
"இப்பதான் குணமாயிருக்கார்.. அதுக்குள்ள எதுக்கு அவ்வளவு தூரம் மலர்"
"அப்ப..உங்க வேண்டுதலை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நிறைவேத்திக்கலாம்"
"இல்லைடா! நான் போயிட்டு வந்துடறேன் மலர்"
"அம்மா! உங்களை தனியா அனுப்பிட்டு என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாதுமா"
"இல்லை மலர்! நான்..."
"அம்மா!!!" என இரு மலர்ச் செண்டுகள் ஓடி வந்து மலர்விழியின் கால்களை கட்டிக் கொண்டது.
"என் இரண்டு இளவரசிகளும் ஹோம்வொர்க் முடிச்சுட்டாங்களா"
"முடிச்சுட்டோம்மா" முழங்காலி்ட்டு அமர்ந்த தாயின் கன்னத்தில் ரோஜா மொட்டுகள் இரண்டும் முத்தமிட்டது.
"வெரிகுட்! அம்மாவுக்கு வேலையிருக்கு! பாட்டி கூட பார்க்குக்கு போயிட்டு வர்றீங்களா"
"பாட்டியும், நீங்களுமே வர்றீங்க! அப்பா எப்பம்மா எங்க கூட விளையாட வருவாங்க?" குழந்தைகளின் கண்களில் தெரிந்த ஏக்கம் மலர்விழியின் உள்ளத்தை முள்ளாய் கீறியது.
"சீக்கிரமே வருவாங்க கண்ணா"
"மலர்! என்ன இது? புள்ளைக முன்னாடி கண்கலங்கிட்டு"
அவசரமாக கண்ணீரை உள்ளிழுத்த மலர்விழி," அவங்க கேட்கறதை வாங்கி கொடுங்கம்மா" என தனது கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து தாயிடம் கொடுத்தாள்.
"பாட்டிக்கு தொல்லை கொடுக்காம விளையாடனும்! சரியா"
"சரிம்மா" கையசைத்துவிட்டு பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு கதை பேசியபடியே சென்றன இருமலர்களும்.
முகில்களுக்குள் மறைந்திருந்த வெண்ணிலவு மெதுவாய் தலைநீட்டி தன் நட்சத்திரத் தோழிகள் வந்து விட்டதைக் கண்டு மகிழ்ந்ததில் அதன் ஒளிவெள்ளம் பூமியை முத்தமிட்டது. சிலுசிலுவென்று வீசிய குளிர்க்காற்றை பொருட்படுத்தாமல் வான் நிலவுக்குள் தன் காதல் நிலவை கண்டு கொண்டிருந்த தினகர் இதழ்கள் புன்னகை சிந்தியது. என்னுடைய நிலவு! சுடும் நிலவு!
"இந்த காதல், கத்திரிக்காய், கொத்தமல்லி பிசினஸ் எல்லாம் என்கிட்ட வேண்டாம் மிஸ்டர்"
"அப்ப நேரா கல்யாணத்துக்கு போயிடலாம்"
"அந்த கொடுமைக்கு நான் கிணத்துல குதிக்கலாம்" கோபத்தில் முகம் சிவக்க,கூந்தல் துள்ளி விழ பேசியவளின் மீது படர்ந்த மனதை மீட்க விரும்பவில்லை தினகர்.
"அம்மா! எனக்கு மலரை பிடிச்சிருக்குமா"
"எனக்கு பிடிக்கலை" தனது மகனின் காதலுக்கு ஒரே வார்த்தையில் சமாதி கட்டினார் அந்த தாய்.
"அம்மா!அவ ரொம்ப நல்லவமா..." முன்னர் மலர்விழி தன் காதலை ஏற்பதற்காக காத்திருந்த தினகர், தன் குடும்பத்தாரின் சம்மதத்திற்காக காத்திருக்கத் தொடங்கினான். நாட்கள் உருண்டோடி வருடங்களாக உருமாறியது. தினகரின் காதல் மாறாமல் இருந்தது போலவே அவன் வீட்டாரும் மலர்விழியை மறுப்பதில் உறுதியாக இருந்தனர். இறுதியில் வீட்டை விட்டு வெளியேறி தான் விரும்பிய மலர்விழியின் கரம் பற்றினான் தினகர்.
மொட்டை மாடியில் கைப்பிடிச்சுவற்றில் அமர்ந்தபடி நிலவை ரசித்தபடி நின்றிருந்த கணவனை ரசித்துக் கொண்டிருந்தாள் மலர்விழி. நான்கு மாதங்கள்! எத்தனை வலியும்,வேதனையுமாக கடந்தது! முடியாதோ என்றெண்ணிய ஒரு கொடிய கனவு முடிந்து விட்டது! கம்பீரமாய் நடப்பவன் பிறர் உதவியுடன் நடக்கும்படி நேர்ந்து விட்டதே! எல்லாம் விதி..இல்லை! மனிதன் ஒழுக்கமின்றி வாழ்வதற்கு விதி மீது எதற்கு பழி போட வேண்டும்??
தீவிர சிகிச்சைப் பிரிவில் தினகரைப் பார்த்த நிமிடம்! அம்மம்மா! இப்போது நினைத்தாலும் மலர்விழியின் தளிர்மேனி நடுங்கியது.தினகரின்றி ஒரு வாழ்வு.. சாத்தியமா.. நிச்சயம் முடியாது! அப்பா! அப்பா! பிள்ளைகளின் கதறல்... ஐய்யோ! கடவுளே! என் குழந்தைகள்...! மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அந்த இதயம் தன் துடிப்பை முற்றிலுமாக நிறுத்தியிருக்கும்! அம்மா! ஒரு குடிகாரனால் என் அன்பான குடும்பம் அழிந்து விட இருந்ததே!
அழகான வாழ்க்கையை குடிப்பழக்கத்தால் அலங்கோலமாக்கிக் கொண்டு, எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் அக்கறையின்றி தன்னைத்தானே அழித்துக் கொள்வதோடு, குடித்துவிட்டு வாகனத்தில் பறந்து சாலையில் பயணிப்பவர்களுக்கு காலனாகி அடுத்தவர் வாழ்க்கையையும் அழிக்கும் அரக்கர்களின் செவியில் பாதிக்கப்பட்டவர்களின் கதறல் என்றேனும் விழுமா? உறங்கும் மனசாட்சி எழுமா? சவுக்கடி தருமா?
"மலருக்கு என் மேல் என்னடி கோபம்? முள்ளாய் மாறியது"
"தன்னை வாழ வைக்கிற சூரியன் மேல மலர் கோபப்படுமா என்ன" அருகில் வந்து அமர்ந்த கணவனின் கைகளை மென்மையாக வருடிக் கொடுத்தாள் மலர்விழி.காயமனைத்தும் ஆறிவிட்டது!
"நான் உன்னை வாழ வைக்கலை மலர்! ராணி மாதிரி பார்த்துக்கனும்னு நினைச்சேன்! ஆனா,இப்படி கஷ்டப்பட விட்டுட்டு..."
"என்ன தினு..." அவர்கள் சம்பாஷனையில் குறுக்கிடுவது போல் சப்தமிட்டது தினகரின் கைபேசி.
"பாலா கூப்பிடறான் மலர்"
"பேசுங்க! நான் போய் உங்களுக்கு சூடா பால் கொண்டு வரேன்"
நிமிடங்கள் கடந்து செல்ல, நண்பனிடம் பேசிவிட்டு நிலவையே பார்த்தவாறு நின்றிருந்த தினகர்,மலர்விழியின் வருகையை உணர்ந்த பின்பும் சிலை போலவே நின்றிருந்தான்.
"என்ன தினு! உங்க பிரெண்டு என்ன சொன்னார்? ஆபிஸ்ல எதுவும் சொல்றாங்களா? பரவாயில்லை விடுங்க தினு! நாம வேற வேலை தேடிக்கலாம்! எதுக்கும் கவலைப்படாதீங்க தினு!"
"சென்னை போயிருந்தியா"
"இ...ம்.. அம்மாவை பார்த்தா உங்களுக்கு ஆறுதலா இருக்..."
"அவங்கதான் எங்களுக்கு ஒரே ஒரு பையன்தான்! தினகர்னு ஒரு பையன் இல்லவே இல்லைனு சொல்லிட்டாங்களே.. அதுக்கப்புறமும்.. அங்க போய்... ஏன் மலர்? எனக்கு எல்லாமே நீதான்! அது ஏன் உனக்கு புரியலை"
"இல்லை தினு..."
"வேண்டாம் மலர்! நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம்! நமக்கு, நாம மட்டும்தான்! நல்லா ஞாபகம் வைச்சுக்கோ" கோபத்துடன் சென்று அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டான் தினகர்.
நின்ற இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்த மலர்விழியைக் கண்டு தினகரின் உள்ளம் அசைந்தது. மெலிந்த உடல், கழுத்து எலும்புகள் தெரிய, நகைகள் எதுவுமின்றி.. பாவம்! என்னுடைய மலர்! வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் அலைந்தே தேய்ந்து போய் விட்டாள்! குழந்தைகளை சமாளிப்பதற்கு எத்தனை போராடி இருப்பாள்? அவள் தாயாரும் அத்தனை பலமானவரல்ல! சாய ஒரு தோளின்றி என் கண்மணி மனதிற்குள்ளேயே தவித்திருப்பாள்!
"மலர்" என தன் கரத்தை தினகர் நீட்ட, அதை ஓடி வந்து பற்றிக் கொண்டாள் மலர்விழி.
"சாரி மலர்! என்னால உனக்கு எவ்வளவு கஷ்..." மலர்விழி தன் ஒற்றை விரல் கொண்டு அவன் பேச்சிற்கு அணையிட்டாள்.
"தினு! அப்பா எங்களை விட்டுட்டு வேற ஒரு பெண்ணோட போனதுக்கப்புறம் நானும்,அம்மாவும் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கொடிய பாலைவனமா இருந்துச்சு. அதுல நடந்து நடந்து நான் சோர்ந்து போயிருந்தேன். அப்ப எனக்கு நிழல் தந்தது உங்களோட நேசம்தான்! அதுக்கப்புறம்,இப்ப வரைக்கும் என் வாழ்க்கை சோலைவனமாதான் இருக்கு! இனியும் இருக்கும்"
"எனக்கு வருத்தமெல்லாம் உங்களுக்கு இப்படி ஒரு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சேங்கிறது மட்டும்தான்! என்னால உங்க வலியை வாங்கிக்க முடியலையேங்கிறது மட்டும்தான்!"
"மலர்" என அவள் கைகளைப் பற்றி உள்ளங்கையில் இதழ் பதித்த தினகர்," இனிமேல் இந்த எம்பிராய்டரி வேலை எல்லாம் வேண்டாம் மலர்! இனிமேலும் நீ கஷ்டப்பட விடமாட்டேன்! நான் நாளையில இருந்து ஆபிஸ் போறேன் மலர்"
"கஷ்டம் எல்லாம் இல்லை தினு! இந்த எம்பிராய்டரி வேலை நான் சின்னதில் இருந்து செய்யறதுதான்,அப்ப என் அம்மாவுக்காக செஞ்சேன்! இப்ப என் குழந்தைக்காக செய்யறேன்! கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுங்க, அப்புறம் ஆபிஸ் போகலாம்"
தன் மடி சாய்ந்த தன் முதல் குழந்தையின் தலையை வாஞ்சையுடன் வருடினாள் மலர்விழி. அவள் உள்ளம் பாடும் காதல் தாலாட்டை கண்கள் பிரதிபலிக்க, காதலாகி கசிந்துருகினான் தினகர். விழிகள் பாதி பேச, இதழ்கள் மீதி பேச காதல் அலையங்கு பரவியது. அவர்கள் வாழ்வில் இனி வசந்தகாலம் மட்டுமே என சொல்லி கொடியில் பூத்திருந்த ஜாதிமல்லிப் பூக்களின் நறுமணம் இதமாய் பரவி காதல் உள்ளங்களை ஆசிர்வதித்தது.
வீழும் போது
மடியேந்தும்
காதலது
வரமாகும்!!