குடிபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்துக் கொலை செய்த மனைவி!
23 Apr,2018
நெல்லையில், குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவனை, மனைவியே உலக்கையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்குப் பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், லட்சுமணன். கூலித் தொழிலாளியான இவர், தினமும் வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்பத்துக்குக் கொடுக்காமல் குடித்து வீணடித்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய மனைவி லட்சுமி தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், குடிபோதையில் வீட்டுக்கு வரும் லட்சுமணன், மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். வழக்கம்போல, நேற்று இரவு குடித்துவிட்டு வந்த அவர் லட்சுமியிடம் தகராறு செய்ததுடன், அடித்து உதைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், லட்சுமணனை சமாதானப்படுத்தி உள்ளனர். அதன் பின்னரும் தகராறு செய்த அவர் வீட்டில் இருந்த விளக்குகளை எல்லாம் அடித்து உடைத்து நொறுக்கியுள்ளார்.
பின்னர், அதிகாலை 3 மணிக்கு எழுந்த லட்சுமணன் மீண்டும் மனைவியை அடித்து உதைத்ததுடன், பாறாங்கல்லைத் தூக்கி வந்து அவர் மீது போட்டுக் கொலை செய்ய முயன்றார். அதைத் தட்டி விட்ட லட்சுமி, ஆத்திரம் அடைந்து அருகில் கிடந்த உலக்கையை எடுத்து லட்சுமணன் மீது அடித்துள்ளார். தலையில் அடி விழுந்ததால் சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக பனவடலி சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து லட்சுமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்