எட்டு மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை
21 Apr,2018
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 8 மாத குழந்தை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரை சேர்ந்த பலூன் வியாபாரி ஏழ்மை காரணமாக தனது மனைவி மற்றும் 8 மாத மகளுடன் நேற்று இரவு ராஜ்வாடா ஃபோர்ட் பகுதியில் உள்ள சாலையில் படுத்து உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது தனது 8 மாத குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வணிக வளாக உரிமையாளர் ஒருவர் தனது கடையின் கீழ்த்தளத்தில் குழந்தை சடலமாக இருப்பதைக் கண்டு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அது பலூன் வியாபாரியின் குழந்தை என்பது தெரியவந்துள்ளது. குழந்தையின் உடலில் காயம் இருந்துள்ளது, இதன் மூலம் பாலியல் வன்புணர்வுக்கு குழந்தை ஆளாகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுமார் காலை 4.45 மணிக்கு ஒரு வாலிபர் குழந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டு கடையின் கீழ்தளத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்ததில் சுனில் என்கிற இளைஞர் இரவில் பலூன் வியாபாரி உறங்கிய இடத்திற்கு அருகில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.