அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் இந்தியரான சந்தீப் (வயது 42) என்பவர் தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் வசித்து வந்தார்.
சந்தீப், யூனியன் வங்கியின் துணைத்தலைவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இவரது பூர்வீகம், கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் தொட்டப்பள்ளி ஆகும்.
இந்த நிலையில் அவர் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு குடும்பத்தினருடன் சொகுசு காரில் சென்று இருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.
போர்ட்லேண்ட் நகர் பயணத்தை முடித்துக்கொண்டு, கடந்த 5-ந் தேதி வேலன்சியாவுக்கு அவர்கள் திரும்பிக்கொண்டு இருந்தனர். அவர்கள் வரும் வழியில் சான்ஜோஸ் நகருக்கு சென்று, அங்கு உள்ள உறவினர்களை சந்தித்துவிட்டு, ஊர் திரும்ப திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி சான்ஜோஸ் நகருக்கு வரவில்லை. வேலன்சியாவுக்கும் திரும்பவில்லை. அவர்கள் மாயமாகி விட்டனர். என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.இது குறித்து அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் அமெரிக்க போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அங்கு ஹம்போல்ட் நகருக்கு அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் ஒரு கார் அடித்துச்செல்லப்பட்டு உள்ளது.
அந்தக் கார், சந்தீப் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்த மெரூன் நிற ஹோண்டா பைலட் சொகுசு காரைப் போன்றே இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் இது குறித்து தகவல் அறிந்து போலீசார் சென்றபோது, அந்த காரை கண்டுபிடிக்க முடியவில்லை. பலத்த மழை பெய்து வந்த நிலையில், ஏல் நதியின் வெள்ளத்தில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அந்த கார் அடித்துச்செல்லப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தீப்பின் குடும்ப நண்பர் ஒருவர் கூறும்போது, “கடைசியாக அவர்கள் கிளாமத் அருகே ரெட்வுட் தேசிய பூங்கா அருகே இருந்து தொடர்புகொண்டு பேசினர். இந்தப் பயணத்தில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்” என்று குறிப்பிட்டார்.
சந்தீப் குடும்பத்தினரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து பேசுவதற்காக சந்தீப்பின் சகோதரர் வடக்கு கலிபோர்னியாவுக்கு விரைந்து உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன