புகையை உமிழும் யானைஸ குழம்பிய விஞ்ஞானிகள்! – காட்டுத்தீ போல் பரவும் வீடியோ
27 Mar,2018
கர்நாடகா வனப்பகுதியில் யானை ஒன்று புகையை உமிழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் வினய் குமார்தான் இந்தக் காட்சியைப் பதிவு செய்தவர். இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த வினய் குமார், “கர்நாடக மாநிலத்தில் நாகர்ஹோல் காட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகளின் தடத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தோம்.
அதிகாலை நேரத்தில் புலிகளின் தடத்தை தேடிக்கொண்டிருந்த எங்களுக்கு ஒரு விசித்திரக் காட்சி தென்பட்டது. பெண் யானை ஒன்று மரத்துக்குக் கீழ் நின்று புகையை உமிழ்ந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். மரத்தின் அருகில் தீப்பிடித்து அணைந்திருந்தது.
அந்த இடத்தில் சிதறிக்கிடந்த கரி (Charcoal) துண்டுகளை யானை தன் தும்பிக்கையால் எடுத்து உட்கொண்டு, புகையை உமிழ்ந்துகொண்டிருந்தது.
எதற்காக அப்படிச் செய்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது. அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, யானை புகைபிடிப்பது போன்று இருந்தது.
கேமராவில் அந்தக் காட்சியைப் பதிவு செய்தோம். அந்த வீடியோ பற்றி நான் மறந்துவிட்டேன். இந்த வீடியோ பதிவு மார்ச் 23-ம் தேதி ஏதேச்சையாகக் கண்ணில்பட்டது. எனவே, இணையத்தில் பகிர்ந்தேன். இந்த வீடியோ விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது’’ என்றார்.
எதற்காக யானை, கரித் துண்டுகளை உட்கொண்டு புகைவிட்டது என்பது குறித்து சூழலியல் விஞ்ஞானி வருண் பேசுகையில், “கரித் துண்டுகளில் நச்சுத்தன்மை உள்ளது.
ஆனால், விலங்குகள் உடலில் செரிமானத்தை அதிகரிக்கும் திறன்பெற்றது. அதில் இருக்கும் ஒரு சில மருத்துவத் தன்மைகள் யானையை ஈர்த்திருக்கலாம்’’ என்றார்.