பாகற்காயில் கசப்பு நீக்க சில டிப்ஸ்,
11 Mar,2018
பாகற்காயை நன்றாகக் கழுவி மேற்புறத் தோலை உரசி எடுத்து விட்டு உட்புற விதைகளையும் நீக்கவும், பின்னர் 2 தேக்கரண்டி உப்பு கலந்த நீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துச் சமைக்கலாம். அதன் கசப்புத் தன்மை இப்போது நிச்சயம் குறைந்திருக்கும்.
வளையங்களாக நறுக்கப்பட்டு விதை நீக்கப்பட்ட பாகற்காயை குறைந்தது 1 மணி நேரமாவது மோரில் ஊற வைத்துப் பிறகு எடுத்து சமைத்தால் அப்போதும் அதன் கசப்புச் சுவை குறையும்.
பாகற்காயுடன் புளி சேர்த்தாலும் அதன் கசப்புச் சுவை குறையும்.
சிலர் பாகற்காயுடன் வெல்லம் கலந்து சமைப்பார்கள். சிறு கசப்பும் இனிப்புமான அந்தச் சுவை குழந்தைகளுக்கு பிடித்துப் போகும்.
எப்படிப் பார்த்தாலும் கசப்பு தான் பாகற்காயின் அடையாளம். அந்தக் கசப்பை நீக்கி விட்டு பாகற்காயை உண்பதால் அதன் சத்துக்களும் பலன்களும் குறையக் கூடுமோ என்று சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். கசப்பை நீக்குவதென்றால் இனிப்பில் முக்கி உண்பதில்லை. மொத்தமும் கசப்பு என்பதை மாற்றி சிறு கசப்புடன், அதன் கசப்பை சகித்துக் கொண்டு உண்பது எந்த விதத்திலும் கெடுதலான பலன்களைத் தரப்போவதில்லை. எனவே பாகற்காயின் கசப்பை இவ்விதமாகக் குறைத்து உண்பதில் தவறில்லை.
குழந்தைகளுக்கும் ஆரம்பம் முதலே இப்படிச் சமைத்து பாகற்காயை உண்ணப் பழகலாம்.
ஆந்திரா ஸ்டைல் காவரகாய புலுசு... (தெலுங்கில் காவரகாய என்றால் பாகற்காய், புலுசு என்றால் புளிக்குழம்பு)
தேவையான பொருட்கள்:
குருவித்தலை பாகற்காய் - 10 முதல் 15
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2]
நாட்டுத் தக்காளி (பெரியது) - 1
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் (துருவியது) - 1 சின்ன கப்
மசால் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
பாகற்காயை தோல், விதை நீக்கி சுத்தம் செய்து நன்றாகக் கழுவி நீரை வடிகட்டவும். அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, வெங்காயம் பொன்னிறமானதும் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு மசால் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாகப் பிரட்டி வதக்கி ஊற வைத்துக் கரைத்த புளித்தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு கொதி வந்ததும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து கொதிக்க விட்டு நன்கு கொதித்து வருகையில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும். குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் மிதக்க சுண்டி மேலே வரும் போது அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.
பாகற்காயை இப்படிச் சமைப்பதால் அதன் கசப்புச் சுவை பெருமளவில் குறைந்து விடும்.
குழந்தைகளுக்கு இந்தச் சுவையைப் பழக்கினால் அவர்களுக்கும் பிடித்துப் போகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்யத்துக்கு உறுதி தரக் கூடியது இந்தக் காவரகாய புலுசு.
பாகற்காயின் நன்மைகள்:
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க உதவுகிறது.
பளபளப்பான சருமம் மற்றும் கரும்பட்டுப் போன்ற கூந்தல் அழகுக்கு தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.
கல்லீரலைச் சுத்தப்படுத்த உதவுகிறது.
உடல் எடையைக் குறைப்பதிலும் உதவுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
கண்கள் நலம் பெறவும் பாகறகாய் உதவுகிறது.
ஆகவே வாரம் ஒருமுறையாவது இந்த ரெஸிப்பியை செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள்.