பெண்ணைத் தரதரவென்று இழுத்துச் சென்ற திருடன் கைது!
20 Feb,2018
சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறிப்பின்போது பெண்ணைத் தரதரவென்று இழுத்துச் சென்ற திருடனைப் போலீஸார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மேனகா, அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வள்ளலார் நகர் பாஞ்சாலியம்மன் கோயில் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை நோட்டமிட்ட திருடர்கள் இருவர், மோட்டார்சைக்கிளில் வந்து அவரின் கழுத்தில் இருந்த 13 சவரன் செயினைப் பறிக்க முயன்றனர். ஆனால், அந்த செயினை விட்டுக்கொடுக்காமல் மேனகா போராடினார். இதனால், செயினுடன் அவரை, சாலையில் தரதரவென்று திருடர்கள் இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்திய போலீஸார் கொள்ளையர்களில் ஒருவனைக் கைது செய்தனர். போலீஸார் விரட்டிச் சென்றபோது கீழே விழுந்ததில் காயமடைந்த அவன் பெயர் அருண்குமார் என்பது விசாரணையில் உள்ளது. திருவல்லிக்கேணியில் வசித்துவரும் அருண் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 6 சவரன் செயின் மற்றும் கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.