கடுகின் மணம் என்ன..?
13 Feb,2018
கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறுசெடி வகையைச் சேர்ந்தது. வெண்கடுகைவிட கருங்கடுகில் காரம் அதிகம் இருக்கும். குளிர்ந்த நீருடன்சேரும் போது தோல் அகற்றப்பட்டு மைரோசினேஸ் எனும் நொதி வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கும், மணத்திற்கும் ஒரு காரணம். மேலைநாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ, பேஸ்ட் வடிவிலோ தயாரித்து பின்பு உணவில் பயன்படுத்துகிறார்கள். இந்திய சமையலைப் பொறுத்தளவில் சூடான எண்ணெயில் தாளித்து பயன்படுத்தப்படுகிறது.
கடுகில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம். கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா3, கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கோடையில் ஏற்படும் கட்டிகளுக்கு இவற்றை அரைத்து பூசலாம். ஒற்றைத்தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. குறைந்த ரத்தஅழுத்தம், தோல்நோயை குணமாக்கும். ஜீரணக்கோளாறு உடையோர் கடுகு, மிளகுபொடியுடன் உப்புசேர்த்து காலையில் வெந்நீருடன் அருந்தினால் செரிமான சக்தி தூண்டப்படும்.
கடுகில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை வடஇந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். கருப்பை கட்டியை குணப்படுத்துவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. கடுகானது பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்கவல்லது. விஷம் அருந்தியவர்களுக்கு கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும். இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் விஷமானது வெளியேறும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப்போடலாம். கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.