இறந்த பெண்ணுக்குத் திடீர் பிரசவம்! -
19 Jan,2018
அடக்கம் செய்ய வந்தவர்களை அதிரவைத்த சம்பவம்
தென் ஆப்பிரிக்காவில் தயிஸி என்னும் கிராமத்தில், பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த பெண், குழந்தையை பிரசவித்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிரிக்க ஊடகம் 'Dispatch live' வெளியிட்ட செய்தியில், `தென் ஆப்பிரிக்காவில் தாம்போ மாவட்டத்தில் தயிஸி என்னும் குக்கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் `டோயி’ கடந்த சில நாள்கள் முன்னர் திடீரென இறந்துபோனார். 33 வயது நிரம்பிய டோயிக்கு ஏற்கெனவே ஐந்து குழந்தைகள் உள்ளன. 10 நாள்களுக்கு முன்னர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு டோயி வீட்டிலேயே இறந்துபோனார். நிறைமாத கர்ப்பிணி திடீரென இறந்துபோனது அந்தக் கிராமத்து மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இறுதிச் சடங்குக்குப் பிறகு, சடலங்களைத் தகனம் செய்வோரிடம் (Funeral services) டோயியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது டோயியின் சடலம் பிணவறையில் வைக்கப்பட்டது. அனைத்துச் சடங்குகளும் முடிந்த பின்னர், டோயியின் சடலத்தைப் புதைப்பதற்காகப் பிணவறை ஊழியர்கள் வெளியே எடுத்தனர். டோயியின் கால்களுக்கு இடையே பச்சிளம் குழந்தை இறந்தநிலையில் கிடந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த பிணவறை ஊழியர்கள் அதிர்ந்துபோனார்கள். இறந்த பெண் எப்படி பிரசவித்திருக்க முடியும் என்று குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். குழந்தை ஆணா பெண்ணா என்பதைக்கூட அவர்கள் கவனிக்கவில்லை. டோயியின் கிராமத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. டோயியின் தாய், “இது தீய சக்தியின் வேலைதான். என் மகள் நிறைமாத கர்ப்பிணி. திடீரென இறந்துபோனாள். அதற்கும் தீய சக்திதான் காரணம். இரண்டு சடலத்தையும் எரித்துவிடுங்கள்” என்று கதறினார். இத்தகவல் கிராமம் முழுவதும் பரவியது. சடலம் எப்படி பிரசவிக்கும். இது கண்டிப்பாக அமானுஷ்யத்தின் வேலைதான்” என்று கிராம மக்களும் நம்பினார்கள்.
சடலங்களைத் தகனம் செய்யும் அமைப்பு இந்தச் சம்பவம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டனர். ‘ஆப்பிரிக்காவில் இதுவரை இப்படி நடந்ததாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இறந்த உடலில் நுண்ணியிரிகளின் செயல்பாட்டால் இது நடந்திருக்கலாம். அப்படியில்லை என்றால் இறந்த பின்பு நடக்கும் தசை தளர்வால் குழந்தை வெளியே தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், இது இயற்கையான ஒன்றுதான். அமானுஷ்யம் என்று ஏதுமில்லை’ என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் டோயியின் சடலம், குழந்தையின் சடலத்துடன் சேர்த்து சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்டது.