அனாதனா குல்சா (கோவா)
தேவையானவை:
மைதா - 1 கிண்ணம்
பால் - 1/2 கிண்ணம்
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2
மாதுளை முத்துகள் - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
எலுமிச்சை சாறு- 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை: மைதா, பால், பேக்கிங் சோடா, சர்க்கரை, சிட்டிகை உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசிக்கவும். மாதுளை முத்துகள், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து உருண்டைகளாக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை அப்பளமாகத் திரட்டவும். மாதுளை உருண்டையை உள்ளே வைத்து, மூடி மேலும் திரட்டவும். சூடான கல்லில் போட்டு, இருபுறமும் திருப்பி நெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.
மிஸ்ஸி ரொட்டி (ராஜஸ்தான்)
தேவையானவை:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
பாசிப் பருப்பு - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - 1/2 கிண்ணம்
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தலா 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
நெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பாசிப் பருப்பை ஊற வைத்து நீரை வடிக்கவும். ஒரு தேக்கரண்டி எடுத்து தனியாக வைக்கவும். மீதமுள்ளதை உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, புதினா சேர்த்து அரைக்கவும். தனியாவை வெறும் கடாயில் சூடு செய்து, மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த விழுது, எடுத்து வைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா, பொடித்த தனியா, 2 தேக்கரண்டி நெய் சேர்த்து பிசையவும் (தேவையானால் மட்டும் தண்ணீர் சேர்க்கவும்). இதை சற்று கனமான சப்பாத்தியாகத் திரட்டி, சூடான கல்லில் போட்டு எடுக்கவும்.
கேசர் மாவா பராத்தா (காஷ்மீர்)
தேவையானவை:
மைதா - 1 கிண்ணம்
குங்குமப்பூ - 2 சிட்டிகை
பால் - 1/2 கிண்ணம்
நெய் - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
சர்க்கரை சேர்க்காத கோவா - 1/2 கிண்ணம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
பாதாம் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை: 2 தேக்கரண்டி பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். மைதாவுடன் ஊற வைத்த குங்குமப்பூ, சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, நெய் சேர்த்து பிசைந்து மூடி வைக்கவும். கோவாவில் (சுண்டக் காய்ச்சிய பாலைத் திரட்டிச் செய்வது) உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள், துருவிய பாதாம் சேர்த்து கலந்து, உருண்டைகளாக்கவும். பிசைந்து வைத்துள்ள மைதாவை அப்பளமாகத் திரட்டவும். உள்ளே கோவா கலவையை வைத்து மூடி, சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும். நான்கு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.
தவா பூரி (குஜராத்)
தேவையானவை:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
மைதா - 2 தேக்கரண்டி
நெய் - 5 தேக்கரண்டி
சமையல் சோடா - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை: ஒரு கிண்ணத்தில் நெய் சேர்த்து, தேக்கரண்டியால் நுரை வர அடிக்கவும். அதனுடன் சமையல் சோடா, மைதா கலந்து வைக்கவும். கோதுமை மாவுடன், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிசைந்து மூடி வைக்கவும். இதை அப்பளமாகத் திரட்டவும். மைதா, நெய் கலவையை இதன் மேல் பரவலாகத் தடவவும். அதற்கு மேல் மற்றொரு அப்பளம் வைக்கவும். இதே போன்று மூன்று அப்பளங்களை வைக்கவும். பாய் போல இறுக்கி சுருட்டவும். கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் கைகளால் அகலப்படுத்தவும். கல்லில் சுட்டு எடுத்து, காரமான சைட் டிஷ் உடன் சாப்பிடலாம்.
பட்டாணி ரொட்டி
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கிண்ணம்
உரித்த பச்சைப் பட்டாணி - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 4
தனியாத் தூள், சீரகத் தூள், மாங்காய்த் தூள் - தலா 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பட்டாணியில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூடி வைக்க வேண்டும். கோதுமை மாவுடன், சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாணியில் ஊற்றிய தண்ணீர் ஆறியதும் வடிகட்டி, அதனுடன் மிளகாய், வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் (தண்ணீர் சேர்க்காமல்) கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும். விழுது இறுகி வரும்போது அதனுடன் கொடுக்கப்பட்ட மசாலா தூள்களைச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மாவு உருண்டையை சின்ன வட்டமாக இட்டு, அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி தயாரித்து வைத்துள்ள பூரணத்தை சிறு உருண்டைப் பிடித்து மாவின் நடுவில் வைக்கவும். பூரணம் வெளியே தெரியாத அளவில் மாவைக் கொண்டு மூடி, போளி போன்று தேய்க்கவும். இந்த ரொட்டியை சூடான கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணய் விட்டு, நன்கு சிவக்க சுட்டு எடுக்கவும்.
நான் (தில்லி)
தேவையானவை:
மைதா - 1 கிண்ணம்
பால் - 1/2 கிண்ணம்
பிரட் துண்டுகள் - 2
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் கடாயில் வறுத்து வெண்ணெயை கலந்து ஒரு தட்டில் வைக்கவும். பிரட்டின் ஓரங்களை எடுத்துவிட்டு பால் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும். பின்பு கைகளால் நன்கு பிசைந்து, அதனுடன் மைதா, பேக்கிங் சோடா, சர்க்கரை சேர்த்து, நன்கு பிசையவும். இதை 4 மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு மாவை எடுத்து 1/4 அங்குல கனத்துக்கு திரட்டி, கத்தியால் பாதியாக வெட்டவும். ஒரு பக்கம் 1/4 தேக்கரண்டி தண்ணீர் தடவி, அந்தப் பக்கம் கல்லின் மேல் இருக்கும்படி போடவும். ஒரு கனமான பாத்திரத்தால் மேலாக அழுத்தி விடவும் (திருப்பிப் போட வேண்டாம்). வெந்ததும் எடுத்து, வெண்ணெய் உள்ள தட்டின் மேல் போட்டு, உடனே எடுத்து விடவும். சூடாகப் பரிமாறவும். உணவங்களில் கிடைக்கும் நான் போலவே இருக்கும்.