சத்குரு: மனிதன் தன்னுடைய வாழ்க்கையை படிப்படியாக புரிந்துக் கொள்வதற்காக இப்படி வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வரிசை என்ன சொல்கிறதென்றால், நமக்கு முதலில் உயர்ந்தது மாதா, அதற்கடுத்துபிதா, அவர் பின் குரு, கடைசியாக தெய்வம் என்கிறது. ஆனால் இது சரியான வரிசை முறை கிடையாது. இந்த வரிசையை நிர்ணயித்தது அவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று கணக்கு போடுவதற்காக அல்ல. மாறாக நாம் இந்த உலகை உணருவது இந்த வரிசையில் தான் நிகழ்கிறது என்பதை சொல்வதற்காக.
நாம் பிறந்தவுடன் அன்னையைப் பார்ப்போம், பின்னர் தந்தை யாரென்று தெரிந்து கொள்வோம். ஒரு வேளைநமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் குருவை உணர்வோம். இதற்கு மேலும் நமக்கு அதிர்ஷ்டம் அடித்தால் தெய்வத்தை உணர முடியும். மாதாபிதா என்ற இரண்டையும் தாண்டி வளர்ந்தால்தான் குரு என்பவரை உணர்ந்து கொள்ள முடியும். அவரையும் தாண்டும் போது தெய்வீகம் மலரும். அதனால் தான் குறிப்பால் இந்த முறையை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மாதா எல்லாவற்றுக்கும் அடிப்படையானவள். அவள் இல்லையென்றால் நாம் இந்த மண்ணிற்கு வந்திருக்க முடியாது. ஆனால் அவளே உச்சபட்ச சாத்தியம் என்று நினைப்பது தவறு. ஆனால், எது நம் பிறப்பிற்கெல்லாம் அடிப்படையானதோ அது மிகுந்த மரியாதைக்குரிய ஒரு விஷயம். அதற்கு தேவையான மரியாதையை நாம் செலுத்தித்தான் ஆக வேண்டும்.
அடுத்தது பிதா. அவர் இல்லாமலும் இந்த உலகத்திற்கு நாம் வர முடியாது. எனவே இந்த மாதா, பிதா இந்த இருவரும் நாம் இந்த மண்ணில் உயிர் வாழ்ந்திருப்பதற்கு மூலகாரணமாய் இருப்பவர்கள். ஆனால் நாம் இருக்கும் நிலை தாண்டி, இன்னொரு பரிமாணத்திற்கு போக வேண்டும் என்றால், நமக்கு குரு மற்றும் தெய்வத்தின் துணை வேண்டியிருக்கிறது.
மனிதனுடைய இயல்பான தன்மை எப்படி இருக்கிறதென்றால், அவன், தான் எந்த நிலையில் இருக்கிறானோ அந்த நிலையை தாண்டி வளர வேண்டும் என்னும் ஆர்வம் இயல்பிலேயே அவனுள் இருக்கிறது. அவன் இருக்கும் நிலையை தாண்டி ஒரு படியாவது எடுத்து வைக்கவில்லை என்றால், நான் எதற்காக பிறந்தேன் என்னும் கேள்வி அவனுள் எழுகிறது. அவன் படிப்படியாக தன் நிலை தாண்டி வளர்ந்தான் என்றால், தன் மாதாவிற்கும் பிதாவிற்கும் என்றென்றும் நன்றியுடன் திகழ்வான். அதை விடுத்து, தான் இருக்கும் நிலையிலேயே சிக்கி விட்டான் என்றால், எதற்குத்தான் என்பெற்றோர் என்னை பெற்றெடுத்தார்களோ என்னும் விரக்தியிலேயே வாழ்வான்.
நம்வாழ்க்கைக்கு மாதாவும் பிதாவும் அடிப்படையாக இருந்தாலும் குரு, தெய்வமே நம் வாழ்வின் நோக்கம். அப்படியென்றால், எந்த மாதிரி குரு எனக்கு தேவை? இந்தக் கேள்வி உங்களுள் எழலாம். உங்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாக யார்இருக்கிறாரோ அவர் உங்கள் குரு. ஒவ்வொரு மனிதருக்கும் குரு தேவை.
அவரையும் தாண்டி ஏதோ ஒன்றுடன் நமக்கு தொடர்பு ஏற்பட்டால் அதனை தெய்வீகம் என்போம். அதுவே வாழ்வின் நோக்கம். எனவே மாதாவும் பிதாவும் நம்பிறப்பின் அடிப்படை. குருவும் தெய்வமும் நம் வாழ்வின் அடிப்படை. இவை அனைத்தும் சேர்ந்தால்தான் நம் வாழ்க்கை நலமாக நடைபெற முடியும்.
அல்லது 12 வயது அடைந்தவுடன், அவன் தனக்குள் தெய்வீகத்தை உணர்வதற்காக பிரம்மப் பிரதிஷ்டையில் தீட்சை அளிக்கப்படுகிறது.