ஐ.பி.சி தமிழ் வழங்கிய தங்கத்தமிழ் உலா நிகழ்ச்சி நேற்று மாலை டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருந்த நோட் வெஸ்ற் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடந்தேறியது.
இன்றைய இளைஞர்களுக்கு ஒரு தரமான நிகழ்ச்சியை எப்படி வழங்க வேண்டும், சமுதாயத்தை சரியான தடத்தில் சிந்திக்க வைக்க எத்தகைய கோணத்தில் நிகழ்வு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை சரியாகவே திட்டமிட்டு செய்திருந்தார்கள்.
முதலில்.. பாராட்டப்பட வேண்டியது, மேடை ஒழுங்கமைப்பானது, டென்மார்க்கில் தமிழர் நடத்தும் விழாக்களில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தைக் காட்டியது, மின்னலங்கார வெள்ளத்தில் வர்ணக்கடலில் படகாக ஆடியது அரங்கு..
மயக்கும் மாலைப் பொழுதினில் அபூர்வமான தரத்தில் இசைப்பாடல்களும், நடனங்களும் கலந்த ஒரு மாலைப் பொழுதானது, டென்மார்க்கில் குறிஞ்சி மலர் பூத்தது போல பூத்திருந்தமை இசை ரசிகர்களுக்கும், நடன ரசிகர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமானது..
டென்மார்க் மக்களுக்காக இதை வளங்கிய ஐ.பி.சியை எவ்வளவு பாராட்டினாலும் அது தகும்.
ஜேர்மனி இளம் சூரியன் இசைக்குழு பின்னணி இசையை இசைத்தது, ஜேர்மனி போன்ற ஒரு நாட்டில் இத்தனை சிறப்புடைய இளைஞர் இசைக்குழு உருவாகியிருப்பதை டென்மார்க்கில் முதற் தடவையாக அறியத்தந்தது பாராட்டப்பட வேண்டியதாக இருந்தது.
தங்கத்தமிழ் குரலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல டென்மார்க் உட்பட பல நாடுகளின் கலைஞர்களையும் இணைத்து நிகழ்வை மெருகேற்றியமை நிகழ்ச்சியின் தரத்தை எதிர்பார்த்ததை விட மேலும் ஒரு படி உயர்த்தியது.
ta-1
நிகழ்வில் இரண்டு உரைகள் மிகவும் கவனத்தைத் தொட்டன..
ஐ.பி.சி நிறுவனத்தின் தலைவர் திரு.பாஸ்கரன் கந்தையா அவர்கள் பேசும்போது ஐ.பி.சி வானொலி இப்போது தொலைக்காட்சியாக மலர்ந்து, ஐ.பி.சி சிறுவர் அலைவரிசை, பக்தி அலைவரிசை என்று பல புதிய அலைவரிசைகளுடன் மலர்ந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
நமது கலைகளையும், கலைஞர்களையும் நாமே முன்னேற்ற வேண்டும் என்ற பேரார்வத்துடன் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு இணையப்பக்கம், பத்திரிகை, சஞ்சிகை வரை வெகுதூரம் வந்துவிட்டது, ஆனாலும் நமது இலக்கு மேலும் இருக்கிறது என்றார்.
அத்தோடு போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விளையாட்டுக்களை விபரித்து, அதற்கான பிரதிநிதியையும் உரையாற்ற அழைத்தார், இதற்கான சீட்டிழுப்பு ஒன்றும் நடைபெற்றது.
ஐ.பி.சி எடுத்த அபார முயற்சி காரணமாக தங்கத்தமிழ் குரலாக தேர்வு செய்யப்பட்ட பாடகி இமானின் இசையில் பாடுவதற்காக சென்றுள்ளார், ஐ.பி.சி குறும்பட போட்டியில் வென்றவர்கள் முழு நீள திரைப்படத்தை தயாரிக்க உதவி வழங்கப்பட்டுள்ளது, தாயகத்திலும் அடுத்த ஆண்டு ஐ.பி.சி புதிய கலையகம் திறக்கப்பட இருக்கிறது.
இதைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய ஐ.பி.சி இங்கிலாந்து பணிப்பாளர் திரு. நிராஜ் டேவிட் கூறிய கதை சபையை கவர்ந்தது.
ta-2
ஒரு பிச்சைக்காரன் நீண்ட காலமாக பிச்சை எடுத்து வந்தான்.. அவன் அப்படியே ஒரு நாள் இறந்தும்விட்டான்.
அவன் குறித்த அந்த மரத்தடியிலேயே பிச்சைக்காக இருந்த காரணத்தினால் அதனடியிலேயே அவனை புதைக்க அங்கிருந்த மக்கள் முடிவு செய்து, நிலத்தை அகழ்ந்தபோது அங்கே பெரும் புதையல் ஒன்று மறைந்து கிடக்கக்கண்டனர்.
இந்தக் கதைபோலத்தான் இன்றைய தமிழர்களின் வாழ்வும் இருக்கிறது, தமிழ் என்ற அதிசமான புதையல் தமக்குக் கீழே கிடப்பது தெரியாமல் மரணித்த பிச்சைக்காரன் போலவே நம்மால் எதுவும் முடியாதென்ற எண்ணத்துடன் வாழ்வதுதான் பெரும் குறை.
தமிழ் மொழிதான் உலகத்தில் பேசப்பட்ட முதல் மொழியாக இருக்கலாம் என்று இன்றைய ஆய்வுகள் கூறுகின்றன..
தமிழ் வைத்திய ஓலைகளை திருடிச் சென்றவர்கள் இன்று அதை மேலைத்தேய வைத்தியமாக மாற்றி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உலகத்தின் மிகப்பெரிய கலாச்சார நாகரிகம் கொண்ட இனம், இன்று நாடுகள் என்று கூறிக்கொள்ளும் பெரிய நாடுகளை விட அதிகமான மக்களை இந்தப் பூமிப்பந்தில் கொண்டு நிற்கிறது.
சின்னச்சின்ன நாடுகள் எல்லாம் சில மில்லியன் மக்களோடு பெருமை பேசுகின்றன, ஆனால் இந்த உலகப் பந்தில் கோடான கோடி மக்களாக தமிழ் தன்னை நிலை நாட்டியிருக்கிறது.
இந்தப் பெருமை எல்லாம் தெரியாது அவலமாக வாழ்கிறோம்ஸ!!!
ta-3
தமிழ் போன்ற உயர்ந்த புதையல் உலகத்தில் எந்த இனத்திற்கும் கிடைத்தது இல்லை ஆனால் நமது சிற்றறிவால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இன்று நாம் நம்மிடம் எதுவும் இல்லையெனக் கருதி பிச்சைக்காரனின் மனோநிலையுடன் புதையலுக்கு மேல் இருந்தபடி பிச்சைக்காரன் போல கையேந்தி வாழ்கிறோம்.
ஐ.பி.சியின் நோக்கம் இந்தப் புதையலை தமிழினத்திற்கு அடையாளம் காட்டுவதுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மூத்த அறிவிப்பாளர் எஸ்.கே.ராஜென், எம்.பி.ஆரோக்கிய நாதர், சிவாகாமி விநாயகன், சுமதி சரேசன், சதீஸ் ஆகியோர் இனிய குரலில் தொகுத்து வழங்கினார்கள்.
ஐ.பி.சி கலைஞர் சாம்சன் தனியாக வழங்கிய நிகழ்ச்சி முத்திரை பதித்தது..
நடன ஆசிரியைகள் சுமித்திரா சுகேந்திரா, மாலா சத்தியமுர்த்தி, கௌரி வசந்தி தயாராஜன், வானவில் கலையகம், சயன் குழுவினரின் நடனங்கள் மனதைக் கொள்ளை கொண்டன, வஸந்த் செல்லத்துரை குழுவினரின் பாடல் நிகழ்வும் மனங்களை கொள்ளை கொண்டது.
ஏராளம் நிகழ்ச்சிகளை வரவழைத்து, அரங்கை நிறைத்தாலே போதுமென்று தரமற்ற நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களை நிறைத்துவிட்டோம் என்று மார்தட்டுவோர் உலாப்போகும் புலம் பெயர் தேசத்தில் தரத்திற்கு ஒரு மதிப்பு இருக்கிறது, அது காலத்தால் அழியாத பெருமையுடன் நிலைபேறுபெறுமென உறுதியுடன் நடக்கும் ஐ.பி.சி தங்கத்தமிழ் உலா நமக்கு சொல்லும் பாடமென்ன..
தமிழின் பெருமை தெரியாது தறி கெட்டுப்போகும் புதிய தலைமுறையின் தப்பான கலைப் பயணத்தையும், தமிழ் என்றாலே அது வயதானவர்களின் நிகழ்ச்சி என்று கருதும் மரத்தடியில் வாழ்ந்து மடியப்போகும் பிச்சைக்காரர் போன்ற புலம் பெயர் இளைய தலை முறையையும் பார்த்து நல்லதொரு செய்தி சொன்னது.
ta-4
டேனிஸ் மொழியில் பிரச்சாரம் செய்யவில்லை..
முகநூலில் பிரச்சாரம் செய்யவில்லை..
இளையோர் வர மறுக்கிறார்கள் என்று பலர் பல காரணங்களை கூறினார்கள், இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது தெரியாதென பலர் வேடமிட்டார்கள்..
ஆனால் அனைவருமே உண்மையை பார்க்க விரும்பாதவர்களே என்பதை ஐ.பி.சி வெளிச்சம் போட்டு காட்டி சென்றுள்ளதே விழாவின் வெற்றியாகும்.
தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாத தமிழகத்தின் பாடகர்களுக்கும், நடிகர்களுக்கும் சலாம் போடும், அவர்களுக்காக பல்லாயிரம் குறோணர்களை வழங்கி பெருமை கொள்ளும் தமிழ் பிச்சைக்காரப் போக்கு கலைஞர்கள் அதிகம் வாழும் டென்மார்க்கிலும் நடக்கக் கூடாது என்ற எச்சரிக்கை விளக்காகவும் ஐ.பி.சி வெளிச்சம் போட்டுள்ளது.
எதிர்காலத்தை காப்பது நம் கடனல்லவா..?
உண்மை சுடும் ஆனால் உண்மை உண்மைதான்..!!!
எவ்வாறாயினும் தமிழுக்கு தலை நிமிர்வு தந்த தரமான நிகழ்வு.
TKS.SK.DURAI