11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை நீடிப்பு
25 Oct,2017
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 11 நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் அகதிகளுக்கு 90 நாட்கள் தடையும், மக்களுக்கு 120 நாட்களுக்கு தடையும் விதித்து உத்தரவிட்டிருந்தார். மற்ற நாடுகளை சேர்ந்த அகதிகளும் 90 நாட்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.
இதேபோல் ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மறு உத்தரவு வரும்வரை அடுத்த 120 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும் அவர் தடை விதித்தார்.
தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் விதமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், பலர் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாட்டில் பாதுகாப்பு கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன என்பதை அடுத்த 90 நாட்களில் ஆய்வு நடத்தி அதை உறுதி செய்து கொண்ட பிறகு தடை நீக்கப்படும் என கூறியிருந்தனர்.
அகதிகள் அமெரிக்கா வருவதற்கான 120 நாட்கள் தடை முடிவடைந்த நிலையில், குறிப்பிட்ட நாடுகளுக்கான தடையை மேலும் நீட்டித்து டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, மாலி, வட கொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவிற்கு வருவதற்கு தடை தொடர்கிறது. இந்த 11 நாடுகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை இல்லை