வளர்ப்பு தந்தை மீண்டும் கைது குழந்தை தொலைந்த விவகாரம்
25 Oct,2017
ஹூஸ்டன்: அமெரிக்காவில் மாயமான, இந்திய குழந்தையின் வளர்ப்பு தந்தையை, போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர், வெஸ்லி மாத்யூஸ். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், பீஹாரில் உள்ள, அனாதை இல்லத்தில் இருந்து, இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார். ஷெரீன் என, பெயரிடப்பட்ட இந்த குழந்தைக்கு, சரியாக பேச வராது.
கடந்த, 7ல், பால் குடிக்க மறுத்து, ஷெரீன் அடம் பிடித்ததால், வாசலில் குழந்தையை நிற்க வைத்து, மாத்யூஸ் கதவை மூடிவிட்டார். ௧௦ நிமிடம் கழித்து, கதவை திறந்து பார்த்த போது, குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது பற்றி போலீசில் புகார் செய்தார். குழந்தைக்கு தண்டனை கொடுத்ததற்காக, மாத்யூசை போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர். குழந்தையை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மாத்யூஸ் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள கால்வாய் அருகே, மூன்று வயது பெண் குழந்தையின் உடலை, நேற்று முன்தினம் போலீசார் மீட்டனர். அது, காணாமல் போன, ஷெரீனாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருந்ததுடன், உடலை நாய்கள் கடித்து குதறி விட்டதால், அடையாளம் காண முடியவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்கு, போலீசார் அனுப்பி உள்ளனர்.
இது பற்றி, மாத்யூசிடம் போலீசார் விசாரித்த போது, குழந்தை காணாமல் போனது குறித்து, முன் தெரிவித்த தகவலை மாற்றி, முன்னுக்கு பின் முரணாக கூறினார்; இதையடுத்து, போலீசார் சந்தேகமடைந்து, மாத்யூசை மீண்டும் கைது செய்தனர்.
இது பற்றி போலீசார் கூறுகையில், 'குழந்தை காணாமல் போனது பற்றி, மாத்யூஸ் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுகிறார். குழந்தைக்கு தண்டனை கொடுத்தது, தன் மனைவிக்கு கூட தெரியாது என, கூறுகிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் உடல் ஷெரீன் என, உறுதியாகி விட்டால், மாத்யூஸ் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்' என்றனர்.