சே குவேரா சொன்ன கடைசி வார்த்தைகள் என்ன?
10 Oct,2017
வாஷிங்டன்: கியூபா புரட்சி வீரர் சே குவேரா, பொலிவியா வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட போது சொன்ன கடைசி வார்த்தைகள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்...
சர்வாதிகார ஆட்சியின் பிடியில் இருந்து கியூபாவை மீட்டதில், சே குவேராவின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதன் பிறகு அவர் பொலிவியா நாட்டில், புரட்சியை பரப்ப சென்றார். 1967 ம் ஆண்டு அக்., 9ம் தேதி அவர் பொலிவியா நாட்டு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது உடன் இருந்த பெலிக்ஸ் ரோட்ரிகஸ் என்ற அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் அதிகாரி பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியை, சி.ஐ.ஏ., தற்போது வெளியிட்டுள்ளது. சே குவேரா இறந்து 50 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் என்ன என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
சே குவேரா சொன்னது என்ன?
பேட்டியில் பெலிக்ஸ் ரோட்ரிகஸ் கூறியிருப்பதாவது: சே குவேராவின் கடைசி தருணங்கள் மிகவும் பரிதாபமாக இருந்தன. அவர் இருந்த அறைக்குள் சென்றேன். அவரின் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்டு இருந்தன. அவர் யாருடனும் பேச விரும்பாதது போல காணப்பட்டார். என்னை திமிரான பார்வையுடன் பார்த்த அவர், ' என்னுடன் யாரும் பேசவில்லை. என்னை யாரும் விசாரிக்கவில்லை' என்றார்.
மிகப்பெரிய புரட்சியாளர் என்ற அவரது பிம்பம் அங்கு காணப்படவில்லை. அவர் ஒரு பிச்சைக்காரர் போல காணப்பட்டார். அவரை உயிருடன் பிடிக்கவே, சி.ஐ.ஏ., விரும்பியது. ஆனால், பொலிவியா அரசு அவரை கொன்று விட முடிவு செய்தது. பொலிவியா ராணுவ தலைமை, சே குவேராவுக்கு - 500, கொல்ல வேண்டும் என்பதற்கு - 600, உயிருடன் வைத்து இருக்க வேண்டும் - 700 ஆகிய ரகசிய வார்த்தைகளை வார்த்தைகளை பயன்படுத்தியது.
பொலிவியா ராணுவ தலைமையிடம் இருந்து, 500, 600 ஆகிய ரகசிய வார்த்தைகள் உத்தரவாக வந்தன. அதன்படி அவர் 2 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர், ' நான் உயிருடன் பிடிப்பட்டு இருந்திருக்காவிடில் நன்றாக இருந்து இருக்கும். என் மனைவியிடம், மறு மணம் செய்து கொள்ளும்படி கூறுங்கள். மகிழ்ச்சியாக வாழும்படி கூறுங்கள்' என, அவர் கூறினார். இது தான் அவர் கூறிய கடைசி வார்த்தைகள்.இவ்வாறு பெலிக்ஸ் தன் பேட்டியில் கூறியிருந்தார்.