பனங்காய் பணியாரம்
தேவையானவை:
பனம்பழம்-2
கோதுமை மாவு-அரை கிலோ
சர்க்கரை-400 கிராம்
உப்பு-தேவையான அளவு
தண்ணீர்-தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்-பொரிக்க
செய்முறை:
பனம்பழத்தைத் தோல் உரித்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கி விட்டு சதைப்பகுதியை மட்டும் (நார் நீக்கி) ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அல்வா பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் தாச்சியை (இரும்பு கடாய்) வைத்து பிசைந்த பனம்பழம், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை கிளறி ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும், இதில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை குழைக்கவும். சூடான எண்ணெயில் இக்கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்தால்... ஆரோக்கியமான, சுவையான பனங்காய் பணியாரம் ரெடி. ஆற வைத்து சுவைக்கவும்.
பருத்தித்துறை வடை
தேவையானவை:
உளுந்து - அரை ஆழாக்கு
அரிசி மாவு - 1 ஆழாக்கு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - பொடியாக நறுக்கியது
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
உளுந்தை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் இட்டு மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதை ஒரு பவுலில் இட்டு மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும். இதை, சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாகத் தட்டி கடாயில் காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், பருத்தித்துறை வடை ரெடி.
மொளகூட்டல்
தேவையானவை:
சேனை, வாழைக்காய், பூசணிக்காய் - கால் கிலோ
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
அரைக்க:
தேங்காய்த்துருவல் - அரை கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் வற்றல் - 2
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை :
பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளைக் கழுவி மீடியம் சைஸில் நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அவை 90 சதவிகிதம் வெந்ததும், அரைத்த மசாலாவைச் சேர்த்து, மேலும் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளில் கொட்டிக் கிளறி... கொஞ்சம் தேங்காய் எண்ணெயை மேலே விட்டு இறக்கவும்.
சூடான சாதத்தோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். காய்கறிகளுக்குப் பதிலாக கீரையிலும் இதை செய்யலாம். பிரசவம் ஆன பெண்களுக்கு பத்திய உணவாக இதை சாப்பிடக் கொடுப்பார்கள்.
உளுத்தம் சுவாலை
உளுத்தம் சுவாலை எனப்படுவது ஈழத்து உணவுகளில் ஓர் இனிப்புச் சிற்றுண்டி. இது அதிக புரதச்சத்தைக் கொண்ட உணவு. காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கும், வேலைக்குப் போகிறவர்களுக்கும் ஏற்ற உணவு. இதை குறுகிய நேரத்தில் தயாரித்து விடலாம்.
தேவையானவை:
வறுத்த அரிசி மாவு - ஒரு கப்
வறுத்து அரைத்த உளுந்து மாவு - அரை கப்
வறுத்த பாசிப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
பனை வெல்லம் - கால் கப்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - கால் கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
உளுந்து மாவு, அரிசி மாவு, பாசிப்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, கையில் ஒட்டாத அளவுக்கு பிசையவும். இதை இடியாப்ப அச்சில் இட்டு இட்லித் தட்டில் பிழிந்து... இட்லி சட்டியில் வைத்து 20 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த இடியாப்பத்தை உதிர்த்து வெண்ணெய், தேங்காய்த்துருவல், பனை வெல்லம் சேர்த்தால், மணம் கமழும் சத்தான உணவு தயார்.
கோதுமை உசிலி
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
முழு உளுந்து - ஒரு கப்
கடலைப்பருப்பு - முக்கால் கப்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். உளுந்து மற்றும் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேக வைக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, எடுக்கவும். வாணலியில் கடுகு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை, அரைத்த பருப்புக் கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் அனைத்தையும் வதக்கி எடுத்தால், சுவையான கோதுமை உசிலி தயார்.