பரபர வாழ்க்கைச்சூழலில் பல பெண்களுக்கும் சருமப் பராமரிப்புக்கான நேரம் கிடைப்பதில்லை. காலை முதல் இரவு வரை சருமப் பராமரிப்பில் கவனம் தேவை. குறிப்பாக, பகலைவிடவும் இரவில் சருமப் பராமரிப்பு மிக முக்கியம். ‘உறங்கச் செல்வதற்கு முன் சில விஷயங்களைச்
செய்து பழகினால், சரும அழகைத் தக்கவைத்துக்கொள்ளலாம்’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் சந்தன்.
இருட்டறையில் தூங்கவும்
சரும ஆரோக்கியத்துக்கு முதல் தேவை, ஏழிலிருந்து எட்டுமணி நேரம் ஆழ்ந்த தூக்கம். இரவில் அலைபேசித் திரை, கணினித் திரை, நைட் லேம்ப் என எந்த ஒளியுமற்ற இருட்டான அறையில் தூங்க வேண்டும். ஏனெனில், இருளில்தான் ‘மெலட்டோனின்’ (Melatonin) ஹார்மோன் உருவாகும். மனிதர்களின் உறக்க – விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் முக்கிய ஹார்மோன் இது.
இரவில் நல்ல உணவு
பகல் நேரத்தில் முடியவில்லை என்றாலும், இரவில் பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். அது சருமத்துக்குப் பொலிவைத் தரும். பாதாம் போன்ற நட்ஸ் சாப்பிடுவதோடு, மருத்துவர் பரிந்துரையுடன் மல்டி வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
புரோபயோட்டிக்
புரோபயோட்டிக் என்பது, நன்மை தரும் பேக்டீரியாக்களாலான இணை உணவு. இது உடலுக்குத் தரும் ஆரோக்கியப் பலன்களில் சருமப் பொலிவும் அடக்கம். எனவே, விருப்பப்படுபவர்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பின் புரோபயோட்டிக் சப்ளிமென்ட்டுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாம்.
மேக்கப் நீக்கவும்
மேக்கப்பை நீக்காமல் இரவு அப்படியே படுக்கையில் சரிவது தவறு. ஃபவுண்டேஷன் முதல் பவுடர் வரை செய்துகொண்ட மேக்கப், சருமத் துவாரங்களில் அடைத்துக்கொண்டு சுவாசிக்கத் தடையாக அமையும். எனவே, முகத்தைக் கழுவிய பின்னரே உறங்கச் செல்ல வேண்டும்.
மிதமான மசாஜ்
இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் நைட் கிரீம் கொண்டு மென்மையாக முகத்துக்கு மசாஜ் செய்யலாம். இதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு செல்கள் புத்துணர்வு பெறும். ஆனால், முகத்துக்கு ஆயில் மசாஜ் கூடாது. ஒருவேளை சருமப் பராமரிப்புப் பரிந்துரையின் பேரில் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் என முகத்தில் பூச நேர்பவர்களும் 20 நிமிடங்கள் வைத்திருந்துவிட்டு பின்னர் முகத்தைக் கழுவிய பின்னரே உறங்கச் செல்ல வேண்டும்.
பால் நல்லது
உறங்கச் செல்வதற்கு முன்னர் பஞ்சில் சிறிது பால் தொட்டு முகத்தில் மென்மையாகத் தேய்த்தெடுத்தால், சரும அழுக்குகள் நீங்கும். தினமும் இந்த முறையில் க்ளென்ஸிங் செய்வது சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும். மேலும், பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தைப் பளபளக்கச் செய்யும்.
நைட் கிரீம்
இரவு உறங்கச் செல்லும் முன் வைட்டமின் இ, வைட்டமின் சி உள்ள கிரீம்களை முகத்தில் தடவிக்கொள்ளலாம். இவை சருமச் செல்கள் பாதிப்படையாமல் தடுத்து, காலையில் புத்துணர்வுத் தோற்றம் தரும்.
தியானம் செய்யலாம்
பொதுவாக, தியானத்துக்குச் சிறந்த நேரம் காலைதான். என்றாலும், மன அழுத்தத்தால் தூக்கம் தொலைப்பவர்கள் இரவில் தியானம் செய்வது எண்ண எழுச்சிகளை மட்டுப்படுத்தி விரைவில் உறக்கம் கிடைக்க உதவும். உடலும் மனமும் புத்துணர்வு பெறும். சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.