23 அடி நீள மலைப்பாம்புடன் போராடி வெற்றிகொண்ட வீரர்!
04 Oct,2017
இந்தோனேசியாவில் 23 அடி நீளம் கொண்ட இராட்சத மலைப்பாம்புடன் போராடி வெற்றிபெற்ற நபர் குறித்த செய்திகள், அந்நாட்டு ஊடகங்களில் பிரதான இடம்பிடித்துள்ளன.
அந்நாட்டின், ரியாயு மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரொபர்ட் நெபாபன் (37) என்பவர், தனது கடமை முடிவடைந்து வீடு நோக்கிச் செல்லும் போது வீதியின் நடுவே இந்த மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனைக் கண்டு அஞ்சிய நிலையில் பாதசாரிகள் இருவர் அவ்விடத்தில் இருந்துள்ளனர்.
பாதசாரிகள் இருவரும் பெரும் ஆபத்தை நோக்கியிருக்கின்றனர் என்பதை அறிந்த ரொபர்ட், மலைப்பாம்புடன் போராடத் தயாரானார்.
இராட்சத மலைப்பாம்புடன் நீண்ட நேராமாகப் போராடி அதனைக் கொன்றுவிட்டார். எனினும் அவரது உடல் முழுவதும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“நான் பயமின்றிப் போராடத் துணிந்தேன். நான் அதனை இறுகப்பற்றும் போது எனது முழங்கைகளைக் கடித்துவிட்டது. அதனால் ஆரம்பித்திலேயே சிரமங்களை எதிர்கொண்டேன்” என ரொபர்ட் தெரிவித்துள்ளார்.
அந்த மலைப்பாம்பு உயிருடன் இருந்திருக்குமானால் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக, இராட்சத மலைப்பாம்பை வெற்றிகொண்ட வீரர் என, ரொபர்ட்டை அந்நாட்டு ஊடகங்கள் புகழ்ந்து பேசுகின்றன.