வடகொரிய ஜனாதிபதி உயிருக்கு குறி வைக்கும் 3 நாடுகள்:
02 Oct,2017
அணு ஆயுத போரினை தவிர்க்கும் பொருட்டு அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வடகொரிய அதிபரை கொல்லும் திட்டத்தில் மிக ரகசியமாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெல்டா படை, குறித்த திட்டத்திற்கு வியூகங்கள் வகுக்கும் எனவும் பிரித்தானியாவின் SAS (The Special Air Service) சிறப்பு அதிரடிப்படை முன்னின்று திட்டத்தை செயல்படுத்தும் என்றும், தென் கொரியாவின் எலைட் கமாண்டோ படை தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிய வந்துள்ளது.
அடுத்த சில மாதங்களுக்குள் வடகொரிய ஆட்சியாளரை மாற்றவும், குறித்த மூன்று நாடுகளும் அதிரடி வியூகம் அமைத்து வருவதாக குறப்படுகிறது.
இந்த மூன்று சிறப்பு அதிரடிப் படையுடன் அணு ஆயுத சிறப்பு படை, ரசாயனம் மற்றும் உயிரியல் சிறப்பு யூனிட் ஒன்றும் இணைந்து செயல்பட உள்ளது.
இவர்களின் முக்கிய குறிக்கோளாக கருதப்படுவது அதிக சேதாரமின்றி வடகொரிய ஆட்சியாளர் கிம் ஜோங் வுன் ஐ படுகொலை செய்யப்படுவதே என தெரிய வந்துள்ளது.
மேலும், வடகொரிய ஆட்சியாளருக்கு எதிர்ப்பாளர்களின் உதவியுடன் அந்த நாட்டில் அதிரடியாக கடல், தரை மற்றும் வான் வழியாக ஒரே நேரத்தில் உள்புகுந்து தாக்குதல் நடத்தவும் திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீப நாட்களாக அமெரிக்கா மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் இடையே வாக்கு மோதல் அதிகரித்துள்ளதை அடுத்தே அதிரடி திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வடகொரியாவுடன் அமெரிக்கா போர் தொடுக்கும் எனில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உறுதி. இதனால் உலக அளவில் பொருளாதார மாற்றம் ஏற்படும்.
மட்டுமின்றி கிழக்கு ஆசியாவில் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக ஆழமான தாக்கங்களை இந்த யுத்தம் ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே பிரித்தானிய உளவு அமைப்பினர் குழு ஒன்று கிம் ஜோங் வுன்-ஐ உயிருடன் சிறை பிடிக்க வியூகங்கள் அமைத்து வருகிறது. ஆனால் அது சாத்தியமே இல்லை எனவும் வடகொரிய அதிபரின் மாளிகையானது உலகின் மிக சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டது எனவும் உளவு பிரிவினரால் கூறப்படுகிறது.
மட்டுமின்றி அத்தகைய ஒரு வியூகமானது சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.