ஆரோக்கியமாக பிரசவத்திற்கு பின்பற்ற வேண்டியவை
18 Sep,2017
ஒரு பெண் தான் கருத்தரிப்பது பற்றி அறிந்ததும், ஒரு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும்.
ஒவ்வொரு பிரசவ காலமும் புத்தம் புதிய பொறுப்புக்களை ஒரு பெண்ணுக்கு கொடுக்கும். ஒரு தாய் தமது உடல் நலத்தில் விழிப்பாக இருந்து அதிக கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். அதனால் மட்டுமே கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கும். மேலும் மற்ற பிரசவ பிரச்சனைகளிலிருந்து தம்மை காக்கவும் உதவும்...
ஒரு பெண் தான் கருத்தரிப்பது பற்றி அறிந்ததும், ஒரு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும். அவர்களிடம் இருந்து கர்ப்பக்காலங்களில் தாம் உட்கொள்ளவேண்டிய உணவு மற்றும் மேற்கொள்ளவேண்டிய உடற்பயிற்சி போன்றவற்றை அறிந்து கொள்ளவேண்டும்.
கர்ப்பகாலங்களில் ஒரு பெண் உண்ணும் உணவு இரு உயிர்களுக்கு சென்றடைகிறது. ஆதலால் ஒரு தாய் தமக்கும், கருவில் இருக்கும் சிசுவிற்கும் எந்த ஒரு பாதிப்பும் வராத உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
ஊட்டச்சத்து உள்ள உணவை உண்பது மட்டும் இல்லாமல் நல்ல தூக்கமும் தாய் மற்றும் சேய் இருவரின் நலனை அதிகரிக்கும்.தாயின் நல்ல ஓய்வு வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இரவில் சராசரியாக 7-8 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். மதிய நேரங்களில் ஒரு குட்டி தூக்கம் அவசியம். தினம் தூங்குவதற்கான அட்டவணை மாறாமல் இருப்பது நல்ல தூக்கத்தை மேம்படுத்தும். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவது சரியான வழி இல்லை. கர்ப்பிணி பெண்கள் பொதுவாக இடது பக்கம் உறங்குவதையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உறங்குவதற்கு முன் ஒரு சிறிய நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது.
பிரசவத்திற்கு முன் ஒரு பெண் தனது வயதிற்கும், உயரத்திற்கும் ஏற்ற சரியான எடை உள்ளவறென்றால், பிரசவ காலத்தில் 12-15 கிலோ அதிகமாக இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். இரட்டை குழந்தை பெறுபவருக்கு இது மாறுபடும்.
உடல் தளர்வாக காணப்படும் நேரத்தில் மகிழ்ச்சி தரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டு உடல் தளர்ச்சியை மனதிற்கு கொண்டு போகாமல் இருக்கச் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலையும், குழந்தையின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்துடன் காப்பது அவசியம். மனதளவில் தன்னம்பிக்கையோடு இருப்பது எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம். உங்கள் வீட்டின் புது வரவை எண்ணி மகிழ்ச்சியாய் இருங்கள்..