100 கோடி சொத்து, 3 வயது மகளை விட்டுவிட்டு ம.பி தம்பதி துறவறம்
16 Sep,2017
மத்திய பிரதேசம் நீமுச் பகுதியைச் சேர்ந்தவர் சுமித் ரத்தோர் (35). லண்டனில் ஏற்றுமதி நிர்வாகத்தில் டிப்ளமோ முடித்தவர். இவரது மனைவி அனாமிகா (34). இன்ஜினியரிங் பட்டதாரி. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். மேலும் இவர்களுக்கு ரூ.100 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன. இந்நிலையில் சுமித் ரத்தோர் துறவறம் செல்ல முடிவெடுத்தார். தனது விருப்பத்தை தந்தை ஆச்சார்யாவிடம் கூறியபோது, இதற்கு அனாமிகாவின் சம்மதம் பெற்று வரும்படி கூறினார். கணவரை மிகவும் நேசிக்கும் அனாமிகா, தானும் கணவருடன் துறவறம் செல்வதாக கூறினார்.
இவர்கள் வருகிற 23ம் தேதி குஜராத்தில் உள்ள சூரத்தில் சுதாமர்கி ஜெயின் ஆச்சார்யா ராம் லால் மகராஜ் முன்னிலையில் துறவறத்தின் முதற்படியான தீட்சா பெற்றுக் கொள்கின்றனர். இந்த தகவல் அவர்களது சொந்த ஊரான நீமுச்சில் உறவினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து அனாமிகாவின் தந்தையும், பா.ஜ பிரமுகருமான அசோக் சந்தாலியா கூறுகையில், ‘‘எனது பேத்தியை நான் பார்த்துக் கொள்வேன். துறவறம் செல்ல யாரும் வற்புறுத்தவில்லை. சொந்த நம்பிக்கையில் இந்த முடிவு எடுத்துள்ளனர்’’ என்றார்.