புகழ்பெற்ற திபெத் நாய்கள்சீனாவில் அனாதையான அவலம்
16 Sep,2017
பீஜிங், : சீனாவில், ஒரு காலத்தில், பணக்காரர்களின் செல்லப் பிராணியாக இருந்த திபெத் நாய்கள், இப்போது,தெரு நாய்களாக மாறிவிட்டன .அண்டை நாடான, சீனாவின், கட்டுப்பாட்டில், உள்ள திபெத்தை சேர்ந்த, மஸ்தீப் இன நாய்கள், ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக
இருந்தன. இந்த நாயை வளர்ப்பது, சீனாவில், பணக்காரர்களின் அடையாள சின்னமாக இருந்தது. மஸ்தீப் நாய்களை, காரில் ஓட்டிச் செல்வது, 'வாக்கிங்' செல்லும்போது அழைத்து செல்வது என, தங்கள் செல்வ செழிப்பை, பணக்காரர்கள் பறைசாற்றி வந்தனர். இந்த நாய்கள், ஒரு காலத்தில், மூன்று கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன.
மஸ்தீப் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்ததால், அவற்றின் மதிப்பு குறைந்து விட்டது.நாய்களின் பெருக்கம் அதிகமானதால், நாய் வளர்ப்பவர்கள், குட்டிகளை, தெருக்களில் அனாதையாக விட்டுச் செல்கின்றனர்.
இதனால், சீனாவின் பல பகுதிகளில், மஸ்தீப் நாய்கள், அனாதையாக சுற்றி வருகின்றன. இந்த நாய்கள், மக்களையும் கடிக்கின்றன. இதனால், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நாய் காப்பகங்கள், கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால், மஸ்தீப் நாய்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இது பற்றி சீன விலங்கின ஆர்வலர் கூறுகையில், 'பெருமைமிக்க, மஸ்தீப் நாய்களை பாதுகாக்க, தொண்டு நிறுவனங்களும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.