2007–ம் ஆண்டு நான் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அந்த ஆண்டின் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஒரு நாள்.
தீபாவளி முடிந்தும், அடை மழை ஓயாமல் பெய்து கொண்டிருந்தது.
நாகர்கோவில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். ‘சார்.. நேசமணி நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு வீட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து கிடக் கிறார்கள். இறப்பு சம்பவம் நிகழ்ந்து சில நாட்கள் ஆகியிருக்கும் போல் தெரிகிறது. இரண்டு உடல்களும் ஊதிப்போய் உள்ளன. துர்நாற்றம் வீசுகிறது. கொலைக்கான காரணமும், கொலையாளிகள் குறித்த விவரமும் தெரியவில்லை’ என்று தகவல் தெரிவித்தார்.
கொலை, கொள்ளை, இரு சமூகத்தினருக்கு இடையேயான மோதல் போன்ற முக்கியமான குற்ற நிகழ்வுகள் ஏதேனும் நெல்லை சரக எல்லைக்குள் நடந்ததாகத் தகவல் கிடைத்தால், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று புலன்விசாரணையின் போக்கைக் கண்காணிப்பது என்னுடைய வழக்கம்.
குற்ற சம்பவம் நிகழ்ந்த ஒரு சில நாட்களுக்குள் வழக்கில் துப்பு துலக்கி, குற்றவாளிகள் அடையாளம் காணப்படாவிட்டால், அந்த வழக்கைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிடும்.
சில சமயங்களில், வழக்கின் உண்மை தன்மை மறைக்கப்பட்டு, சம்பந்தம் இல்லாத கோணங்களில் வழக்கை திசை திருப்பிவிடும் முயற்சிகளும் நடைபெறும்.
மேலும் சம்பவ இடத்தில் நடத்தப்படும் முதல்கட்ட புலன் விசாரணையும், கைப்பற்றப்படும் ஆதாரங்களும் வழக்கின் மேல் விசாரணைக்குப் பெரிதும் பயன்படும் என்பதால், நான் சம்பவ இடங்களுக்கு உடனடியாகச் சென்று விடுவேன்.
மேற்கண்ட கொலை தொடர்பாக ஹமீது என்பவர் நேசமணிநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில், ‘என் சகோதரி கதீஜா பீவி (வயது 65), அவரது கணவர் டாக்டர் மாலிக் முகமது (75). இருவரும் நாகர்கோவில் நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி, சிலர் வெளியூரிலும், சிலர் வெளிநாட்டிலும் வசித்து வருகின்றனர். என் மாமா டாக்டர் மாலிக் முகமது, தினமும் என்னுடன் போனில் பேசுவது வழக்கம். கடந்த சில நாட்களாக அவர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. என் போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. இதனால் எனக்கு சந்தேகம் எழுந்தது. எனவே அவரது வீட்டிற்கு இன்று நேரில் சென்றேன். ஆனால் வீடு வெளியே பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் காவலாளியையும் காணவில்லை’ என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
பூட்டப்பட்டுள்ள வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்வையிட வேண்டிய சூழ்நிலை போலீசாருக்கு ஏற்பட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட வருவாய்துறை அதிகாரிக்குத் தகவல் தெரியப்படுத்த வேண்டும். பின்னர், வருவாய் துறை அதிகாரியின் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து, உரிய மேல் நடவடிக்கையை போலீசார் எடுப்பது நடைமுறையில் இருக்கும் வழக்கம்.
அதன்படி ஹமீதை அழைத்துக் கொண்டு, காவல்நிலைய உதவி ஆய்வாளரும், கிராம நிர்வாக அதிகாரியும் டாக்டர் மாலிக்கின் வீட்டிற்குச் சென்றனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்வையிட்டபோதுதான், டாக்டர் மாலிக் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அவர் அணிந்திருந்த லுங்கியைக் கிழித்து, அவரது கழுத்து, வாய் மற்றும் கைகள் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. கீழ் தளத்தில் உள்ள கழிப்பறையில் வீட்டு காவலாளியும் இறந்து கிடந்துள்ளார். அவரது வேட்டியைக் கிழித்து, கழுத்து, வாய் மற்றும் கைகள் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. ஆனால் ஹமீதின் சகோதரியும், இறந்து கிடந்த டாக்டர் மாலிக்கின் மனைவியுமான கதீஜா பீவியைக் காணவில்லை.
டாக்டர் மாலிக் – கதீஜா பீவி தம்பதியருக்கு 4 மகள்கள். ஐந்தாவதாக ஒரு மகனும் உள்ளனர். மகன் பொறியியல் படித்து வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது திருமணத்திற்கு அவரது மாமனார் அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்திருந்த விலையுயர்ந்த காரும், டாக்டர் மாலிக் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தது.
இந்த கொலை வழக்கில் புலன் விசாரணைக்கு உதவி செய்ய கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியும் பயன்படுத்தப்பட்டது.
கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து சந்தேகிக் கும்படியான சில கைரேகை தடயங்களைச் சேகரித்தனர்.
தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ வீட்டினுள் சில சிகரெட் துண்டுகளைக் கண்டெடுத்தனர். யாரும் சிகரெட் பிடிக்காத அந்த வீட்டினுள் எப்படி சிகரெட் துண்டுகள் வந்தன? என்பது புதிராக இருந்தது.
இந்த இரட்டைக் கொலை வழக்கு நேசமணிநகர் காவல்நிலையத்தில் பதிவாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, திண்டிவனம்– சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓலக்கூர் காவல்நிலையத்திற்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.
‘நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஓங்கூர் கிராம எல்லையில் உள்ள ஆற்றுப் பாலத்தின் வடகரை அருகே உள்ள முட்புதரில் 25 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஒரு பெண் பிணம் எரிந்த நிலையில் கிடக்கிறது’ என்பதுதான் அந்த தகவல்.
இது குறித்து ஓலக்கூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
எரிந்த நிலையில் கிடந்த உடலை, பிரேத பரிசோதனை செய்ய, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல இயலாத காரணத்தால், மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கே வந்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அடையாளம் தெரியாத பிணமாக இருந்த காரணத்தால், பின்னாளில் அடையாளம் காணும் பொருட்டு, அந்த உடலின் மண்டை ஓட்டைச் சேகரித்து, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
உறவினர்கள் யார் என்று தெரியாத காரணத்தால், பிரேத பரிசோதனைக்குப் பின்னர், அடையாளம் காணப்படாத அந்தப் பிணம், கிராம நிர்வாக அலுவலரால் ஓங்கூர் இடுகாட்டிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஓலக்கூர் காவல்நிலையத்தில் இந்த வழக்கு பதிவாகி, பிரேத பரிசோதனை முடிந்து, உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மறுதினம் தான், நேசமணிநகர் காவல்துறையினருக்கு கதீஜா பீவி காணாமல் போனது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
தந்தை கொலை மற்றும் தாய் மாயம் என்ற செய்தி அறிந்த டாக்டர் மாலிக்கின் மகன், வெளிநாட்டில் இருந்து உடனடியாக ஊர் திரும்பினார். தங்க நகைகள், கேமராக்கள், கைக்கடிகாரங்கள், செல்போன்கள் மற்றும் பல விலைஉயர்ந்த பொருட்கள் என மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வீட்டிலிருந்து காணாமல் போயிருப்பதாக அவர், புலனாய்வு குழுவிடம் தெரியப்படுத்தினார்.
இந்த கொலைக்கான காரணங்கள் குறித்து கண்டறிய மேற்கொண்ட விசாரணையில், குடும்பச் சொத்துகாக உறவினர்களால், கூலிப்படை உதவி கொண்டு நடத்தப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என்று ஒரு சாரார் செய்தியைக் கசிய விட்டனர்.
பல லட்சம் மதிப்புள்ள குடும்பச் சொத்து ஒன்றை, டாக்டர் மாலிக் சமீப காலத்தில் விற்பனை செய்துள்ளார் என்றும், உறவினர்கள் சிலர் அதில் பங்கு கேட்டு கிடைக்காத காரணத்தால், இந்தச் சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவியது. அந்த உறவினர்களின் பொறுப்பில்தான் காணாமல் போன கதீஜா பீவி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட புலன் விசாரணையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையில், காணாமல் போன டாக்டர் மாலிக்கின் செல்போன் குறித்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்குத் தெரியப்படுத்தி, அந்த செல்போனின் செயல்பாட்டினைக் கண்காணிக்க புலனாய்வு குழு ஏற்பாடு செய்தது.
சில தினங்களுக்குப் பிறகு, சேவை வழங்குநரிடம் இருந்து எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. டாக்டர் மாலிக்கின் செல்போனில் வேறு ஒரு சிம்கார்டு புதியதாகப் போடப்பட்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த புதிய சிம்கார்டு சென்னையில் வாங்கப்பட்டுள்ளது என்றும், அதை வாங்கியவர் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த அன்பரசு என்றும் தெரியவந்தது.
யார் அந்த அன்பரசு? அவருக்கு எப்படி டாக்டர் மாலிக்கின் செல்போன் கிடைத்தது? கொலையாளியோடு அவருக்குள்ள தொடர்பு என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை காண, தனிப்படை ஒன்று சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதே சமயம், அன்பரசு என்ற பெயரில் யாராவது டாக்டர் மாலிக் குடும்பத்தோடு தொடர்பில் இருந்துள்ளனரா? என்பது குறித்து மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
டாக்டர் மாலிக்கின் முன்னாள் கார் டிரைவரின் பெயர்தான் அன்பரசு. அந்த டிரைவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், மூன்று மாதங்கள் பணிபுரிந்த நிலையில் அவனை 2006 டிசம்பர் மாதம் பணியை விட்டு நிறுத்திவிட்டனர்.
டிரைவர் அன்பரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டவன் என்றும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவன் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
மற்றொரு தனிப்படையினர் ஓலக்கூர் காவல்நிலையத்தில் பதிவான வழக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பெற்று, டாக்டர் மாலிக்கின் மகள்களிடம் காண்பித்தனர்.
அந்த புகைப்படங்களில் எரிந்த நிலையில் கிடக்கும் பெண்ணின் இடது காலில், பாதி எரிந்த நிலையில் இருக்கும் செருப்பு தங்கள் அம்மாவினுடையது போல் இருப்பதாக அவர்கள் சந்தேகத்தைத் தெரியப்படுத்தினர்.
இதனால் கதீஜா பீவியும் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் போலீசாருக்குத் தோன்றியது.
இந்த பரபரப்பான சூழலில், வழக்குப் பதிவான ஒரு வார காலத்திற்குள் கார் டிரைவர் அன்பரசை புலனாய்வு குழுவினர் பிடித்து விட்டனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த வழக்கின் முடிச்சு அவிழ்க்கப்பட்டது.
டாக்டர் மாலிக், அன்பரசை கார் டிரைவர் வேலையில் இருந்து நிறுத்தியதும், அவன் சென்னை சென்று, சித்த வைத்திய பெண் மருத்துவர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலைபார்த்துள்ளான்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, அன்பரசு சென்னையில் இருந்து அவனது கிராமத்திற்கு வந்துள்ளான். அப்போது தனது நண்பர் கோபி என்ற சகாய புரூனோவைச் சந்தித்துள்ளான். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வரும் கோபி, வேலை தேடி வெளிநாடு செல்ல முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு பண உதவி செய்யும்படியும் அன்பரசிடம் கேட்டிருக்கிறான்.
அதற்கு அன்பரசு, ஓரிரு நாளில் பணம் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியுள்ளான்.
டாக்டர் மாலிக் வீட்டில் எப்பொழுதும் நிறைய பணம் இருக்கும் என்பதும், வயதான தம்பதியர் மட்டும் தான் வீட்டில் இருப்பார்கள் என்பதும் அன்பரசுக்குத் தெரியும்.
வயதான தம்பதியரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்ட அன்பரசு, அன்று பிற்பகலில் கோபியை அழைத்துக் கொண்டு, டாக்டர் மாலிக் வீடு வரை சென்று நோட்டமிட்டுள்ளான். உறவினர்கள் யாரும் டாக்டர் மாலிக் வீட்டுக்கு வரவில்லை என்பதை உறுதி செய்த பின், மீண்டும் அன்றிரவு சுமார் ஏழு மணியளவில் கோபியுடன், டாக்டர் மாலிக் வீட்டிற்குச் சென்றுள்ளான் அன்பரசு.
அங்கிருந்த வீட்டுக் காவலாளியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே, வீட்டின் காம்பவுண்டுக் குள் நுழைந்த அன்பரசு, பின்புறம் இருந்து காவலாளியின் கழுத்தை நெறித்துள்ளான்.
பின்னர் அன்பரசுவும், கோபியும் சேர்ந்து காவலாளியின் வேட்டியைக் கிழித்து, அவரது கழுத்து, வாய் மற்றும் கைகளை இறுக்கிக் கட்டி, அங்கிருந்த கழி வறையில் போட்டுள்ளனர்.
பின்னர் வீட்டின் வெளிப்புறமாக அமைந்த மாடிப்படி வழியாக முதல் மாடிக்குச் சென்றுள்ளனர். மாடியில் இருந்த டாக்டர் மாலிக்கிடம் பேச்சு கொடுத்த அன்பரசு, திடீரென்று அவரது கழுத்தைப் பிடித்து நெறித்துள்ளான். பின்னர் இருவரும் சேர்ந்து அவர் உடுத்தியிருந்த லுங்கியைக் கிழித்து, அவரது கழுத்து, வாய் மற்றும் கைகளை இறுக்கிக் கட்டி, படுக்கையறையினுள் போட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருக்கும் மாடிப்படி வழியாக மேலே வந்த கதீஜா பீவியை இடையிலேயே அன்பரசு தடுத்து நிறுத்தி, ரூ.1 லட்சம் பணம் தரும்படி கேட்டுள்ளான்.
‘அவ்வளவு பணம் தற்பொழுது வீட்டில் இல்லை. மதுரையில் உள்ள மகளிடம் இருந்து வாங்கித் தரு கிறேன்’ என்று அப்பாவித்தனமாகக் கூறியிருக்கிறார் கதீஜா பீவி. அவரை வீட்டின் தரை தளத்திற்கு அழைத்து வந்து, கோபியின் கண்காணிப்பில் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளான் அன்பரசு.
பிறகு வீடு முழுவதும் சோதனையிட்ட அன்பரசு, எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்காததால், வீட்டில் இருந்த தங்க நகைகள், கேமராக்கள், கைக் கடிகாரங்கள், செல்போன்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைச் சேகரித்து இரண்டு சூட்கேஸ்களில் அடுக்கியுள்ளான். இந்த நேரத்தில்தான், சிகரெட்டுகளைப் புகைத்து விட்டு, துண்டு சிகரெட்டுகளை வீட்டிற்குள்ளேயே போட்டுள்ளான்.
நள்ளிரவிற்குப் பின்னர், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அந்த இரண்டு சூட்கேஸ்களையும் ஏற்றியவன், மதுரையில் உள்ள மகள் வீட்டிற்குச் செல்லலாம் என்று கதீஜா பீவியையும் காரில் ஏற்றியிருக் கிறான். ஆனால் கார் சென்னை நோக்கிச் சீறிப்பாய்ந்தது.
மகள் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி காரில் ஏற்றி செல்லப்பட்ட கதீஜா பீவி எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலையாளி அன்பரசு போலீஸ் பிடியில் எப்படி சிக்கினான்? என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
–விசாரணை தொடரும்