பிரான்சில் போராட்டங்கள் வெடித்தது: ஜனாதிபதிக்கும் வலுக்கும் எதிர்ப்பு
13 Sep,2017
ஜனாதிபதி மேக்ரானின் தொழிலாளர் சட்டத்தின் புதிய சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் பெரியளவில் போராட்டங்கள் நடைப்பெற்றுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனையை நாட்டில் குறைக்கும் முயற்சியாக தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.
அதன்படி, சிறிய நிறுவனங்கள் தொழிற்சங்க கிளைகளுக்கு பதிலாக தனிப்பட்ட ஊழியர்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பிரான்ஸின் மிக பெரிய தொழிற்சங்கமான CGT சார்பில் பாரீஸ், ரினீஸ், லியோன், மெர்ஸிலிஸ் போன்ற பல பகுதிகளில் பெரியளவில் போராட்டங்கள் நடந்தது.
இதில் சிவில் ஊழியர்கள், ரயில்வே தொழிலாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டார்கள்.
பதாகைகள் மற்றும் நெருப்பு புகை அடங்கிய சிறிய குழாய்களையும் போராட்டகாரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
பல இடங்களில் பொலிசாருடன் போராட்டகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மெர்ஸிலிஸ் மட்டும் 60,000 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை வீசியும் போராட்டத்தை கலைக்க பொலிசார் முயன்றனர்.
CGT செயலாளர் Olivier Mateu கூறுகையில், தொழிலாளர் சட்டத்தின் புதிய திருத்தங்கள் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், இது பலரை கவலையடைய செய்துள்ளது.
புதிய சட்டமானது தொழிலாளர் சட்டம் போல இல்லாமல் முதலாளிகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கும் சட்டம் போல உள்ளது என கூறியுள்ளார்