மாணவி கிரிஷாந்தியின் படுகொலைக்கு நீதி கிடைத்த போதும், செம்மணி படுகொலைக்கு இதுவரை நீதி கிட்டவில்லை.
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, விபத்தில் உயிரிழந்த சகோதர மாணவியின் மரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்த போது செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.
மாணவி கிரிஷாந்தி 1996 ஆம் ஆண்டு புரட்டாதி 7 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, இராணுவத்தினரால் படுகொலை
செய்யப்பட்டார்.
செம்மணி இராணுவ முகாமில் கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்த அவரது தாயார், சகோதரன், அயலவர் உட்பட மூவர் இராணுவ முகாம் நோக்கிச் சென்றனர்.
அதன் பின்னர் கிருஷாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவரோ வீடு திரும்பவில்லை.
கிரிஷாந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை மறைப்பதற்காக தேடிச்சென்ற தாயார், சகோதரன் உட்பட மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
கிரிஷாந்தி காணாமற்போய் 45 நாட்களின் பின்னர், செம்மணி இராணுவ முகாமிலிருந்து, சில மீற்றர்கள் தூரத்தில் கிரிஷாந்தி உட்பட நால்வரது சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டன.
தோண்டி எடுக்கப்பட்ட சடலங்களைக் கொழும்பிற்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணி மா.இளஞ்செழியன் ஆகியோர் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கையை அடுத்து, சடலம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கிரிஷாந்தி படுகொலையுடன் தொடர்புடைய ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பில் சட்டத்தரணி குமார் பொன்னம்பலம், கனிஸ்ட சட்டத்தரணி மா.இளஞ்செழியன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு Trial at Bar முன்னிலையில் நீதிபதிகள் நிமால் திசாநாயக்க, அன்ரூ சோமவன்ச, காமினி அபயரட்ண ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நீதிபதிகள் குழு ஐந்து இராணுவத்தினருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கிரிஷாந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னர் நீங்கள் எதாவது கூறப்போகின்றீர்களா என வினவியதற்கு, அவர்கள் வழங்கிய பதில் உலகையே ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்தது.
சுமார் 400 தொடக்கம் 600 வரையான இளைஞர், யுவதிகள் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவத்தினரும் வாக்குமூலம் வழங்கினர்.
இந்தப் படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவத்தினரும் கண்டி போகம்பரை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிரிஷாந்தி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மா.இளஞ்செழியன் மன்னார் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கிரிஷாந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் வழங்கிய வாக்குமூலத்தினையடுத்து, செம்மணி புதைகுழியினை அகழ்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ் நீதவான் நீதிமன்ற விசேட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
செம்மணி புதைகுழி 1999 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2000 ஆம் ஆண்டு பங்குனி 27 ஆம் திகதி வரையான ஒன்பது மாதங்கள் நடைபெற்றன.
கிரிஷாந்தி படுகொலையின் மரண தண்டனைக் கைதிகளை விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து செம்மணி புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிபதி மா.இளஞ்செழியன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
செம்மணியில் 25 புதைகுழிகள் தோண்டப்பட்டு 16 சடலங்கள் மீட்கப்பட்டன, எனினும், அவர்கள் அடையாளப்படுத்திய 10 புதைகுழிகளில் சடலங்கள் இருக்கவில்லை.
செம்மணி புதைகுழியுடன் தொடர்புடைய ஐந்து இராணுவத்தினரையும் பொலிஸ் அதிகாரி ஒருவரையும் கைது செய்து, விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மாவட்ட விசேட நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.
செம்மணி, அரியாலை, கொழும்புத்துறை ஆகிய இராணுவ முகாம்களில் கொலை செய்யப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
மன்னார் மாவட்ட நீதிபதி மா.இளஞ்செழியன் செம்மணி புதைகுழி அகழ்விற்காக யாழ். நீதவான் நீதிமன்ற விசேட நீதிபதியாக நியமிக்கப்பட்டு, செம்மணி புதைகுழியைத் தோண்டியதன் பின்னர் நியமனம் நிறைவுபெறும் வகையில் அமர்த்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட 16 பேரினது சடலங்களும் அடித்துக் கெலை செய்யப்பட்டவை என மரண விசாரணை தீர்ப்பு வழங்கி, யாழ். நிரந்தர நீதிபதியிடம் வழக்கினை பாரப்படுத்திவிட்டு செம்மணி புதைகுழியின் விசேட நீதிபதி மா.இளஞ்செழின் தனது பணியினை நிறைவு செய்தார்.
ஆறு மாதங்களின் பின்னர் செம்மணி புதைகுழி வழக்கின் பிரதிவாதிகள் தமக்கு சட்டத்தரணிகள் இல்லை என தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஒரு சில மாதங்களின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஆறு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
செம்மணி புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பிணை வழங்கப்பட்டு 17 வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை நீதி கிடைக்கவில்லை.
அன்று உலகையே உலுக்கிய செம்மணி புதைகுழி தொடர்பில் அனைவரும் இன்று மறந்தவர்களாகவே உள்ளனர்.
இந்த வழக்கின் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் கடமையைப் பாராட்டி ஐக்கிய அமெரிக்கா 2001 ஆம் விசேட விருந்தினராக அழைத்து அவரை கௌரவித்து, பிரஜாவுரிமை வழங்கியதுடன், ஒருநாள் மாநகர மேயராகவும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.