சூப்பரான சைடிஷ் வாழைப்பூ கோலா உருண்டை
01 Aug,2017
வாழைப்பூ கோலா உருண்டை காய்கறி பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இன்று இந்த கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - ஒன்று,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பொட்டுகடலை மாவு - 250 கிராம்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
வெள்ளை எள் அல்லது கசகசா - 100 கிராம்,
முந்திரி - 10,
புளித்த மோர் - ஒரு கப்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், முந்திரி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கவும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து அதை மிக்ஸியில் போட்டு ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ சேர்த்து நன்றாக பிசையவும்.
இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும்.
பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தேவைபடும்போது எண்ணெயை நன்கு காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
சூப்பரான வாழைப்பூ கோலா உருண்டை ரெடி.