...................
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகள், எந்த நாட்டுக்கு முதலில் வருகிறார்களோ அந்தநாட்டிலேயே அகதித்தஞ்சம் கோரமுடியும் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2015-1016 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடியேறிகள் நெருக்கடி முற்றியபோது அந்நாடுகளுக்கு வந்தவர்கள் பலர் ஜெர்மனி உள்ளிட்ட தம் உறவினர்கள் வாழும் பல்வேறு நாடுகளை சென்றடைய விரும்பினர்.
ஆனால் அவர்கள் அந்தந்த நாட்டு அரசுகளால் வெளியேற்றப்பட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வரும் அகதிகள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் தஞ்சம் கோரலாம் என்பது அகதி உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு அரசுகளோ அகதிகள் எந்த நாட்டில் முதலில் கால்பதிக்கிறார்களோ அந்த நாட்டிலேயே பதிந்து அகதி தஞ்சம் கோர வேண்டும் என்கிற டப்ளின் விதியை காரணம் காட்டி இந்த கோரிக்கையை நிராகரித்துவருகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அதி உயர் நீதிமன்றம் அரசுகளின் நிலையே சரி என்று தீர்ப்பளித்திருக்கிறது.
இன்றைய தீர்ப்பு காரணமாக அகதித்தஞ்சக் கோரிக்கையாளர்கள் பலர் பலவந்தமாக வெவ்வேறு நாடுகளில் மீள்குடியேற்றப்படலாம் என அகதி உரிமை செயற்பாட்டாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடுவதற்கு பயன்படுத்திய முறைமை குறித்தே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு காலப் பகுதி வரையிலான மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
எனினும், ஐரோப்பிய ஒன்றியம் 2015 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் அடிப்படையில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே பட்டியலிட்டுள்ளது.
நீதிமன்றின் தீர்ப்பு உன்னிப்பாக ஆராயப்பட்டு தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் தடை உத்தரவு குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.