பதவி நீக்கப்பட்ட தென்கொரிய அதிபர் தோழியின் மகளை நாடு கடத்த டென்மார்க் முடிவு
17 Mar,2017
பதவி நீக்கப்பட்ட தென்கொரிய அதிபர் தோழியின் மகளை நாடு கடத்த டென்மார்க் முடிவு
தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் சுமத்தப்பட்டது. மேலும் அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தின.
இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, பார்க் கியூன் ஹே-வை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்தது செல்லும், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், தென்கொரிய அதிபரின் தோழி சோய் சூன் சில்லின் மகள் சங் யோராவினை நாடு கடத்திட டென்மார்க் அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இறுதி முடிவினை எடுக்க சங் யோராவுக்கு 3 நாட்கள் கால அவகாசத்தை டென்மார்க் அரசு வழங்கியுள்ளது.