ஸ்கன்டினேவியன் பொருளாதார முதலீட்டுக் குழுமத்தின் ஊடாக ஈழத் தமிழர் சாதனை
நமக்கு நாமே உதவும் திட்டம் பற்றி TNA எம்.பிக்களுடன் பேச்சுவார்த்தை
சமூக, பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஸ்கன்டினேவியன் (Scandinavian) பொருளாதார முதலீட்டுக் குழுமம் திட்டமிட்டுள்ளதாக அதன் சர்வதேச மற்றும் இலங்கைத் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் தருமன் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இவர் கடந்த வாரம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரது உத்தியோகபூர்வ பணிமனையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இதுதொடர்பாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யுத்தத்தினால் தொலைந்துபோன வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களது வாழ்க்கையை மீட்டெடுப்பது மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் (NGO) இனியும் தமிழ் மக்கள் கையேந்தி நிற்கும் நிலையை இல்லாதொழிப்பது எனும் கருத்தொனியில் நமக்கு நாமே கை கொடுப்போம் எனும் அடிப்படையில் இந்த சமூக பொருளாதார அபிவிருத்தி முதலீட்டுத் திட்டம் அமையவுள்ளதாக தருமன் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிக்கு இலங்கை முதலீட்டுச் சபை தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், அதனூடாகத் தமது குழுமம் இலங்கையில் பல பாரிய முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாரிய தொழிற்பேட்டைகள், துறைமுக இறங்கு துறைகள், நகர அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள், விமான நிலைய விஸ்தரிப்புகளில் பங்கேற்பு உட்பட பலவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு உள்ளூரில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் முதற்கட்டமாக வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகளுடன் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் சந்தித்துப் பேச்சு நடத்த தமது குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான அலன் தருமன் ALLAN THARUMAN தனது குழுவினருடன் விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் தருமன் தர்மகுலசிங்கம் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கினைத் தொடர்ந்து இந்தக் குழுமத்தின் பணிகள் மலையகத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டு அங்குள்ள மக்களது தேவைகள் குறித்து அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆராய்ந்து அங்கும் முதலீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் இவர் தெரிவித்தார்.
கறுப்புப் பணத்தை வரி கட்டாமல் பனாமாவில் குவித்த பனாமா பேப்பேர்ஸ் விவகாரத்தில் டென்மார்க்கிலும் சுமார் 300 பேர்வரை சம்மந்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இவர்களுக்கு எப்படித் தெரிந்தது பணத்தை பதுக்கும் முறை..?
அதற்கு வழிகாட்டியவர்கள் யார்..?
போலியான நிறுவனங்களை உருவாக்கி, அதன் வழியாக பனாமாவுக்குள் பணப்பதுக்கல் செய்ய உதவிய மொசியாக் பொன்சேகா என்ற சட்டத்தரணிகள் அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பை ஏற்படுத்தியது யார்..?
இவ்வாறு தொடர்பை ஏற்படுத்தி இவர்கள் உழைத்த வருமானம் என்ன..?
இத்தகைய செயல் சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், அதற்கு வழிகாட்டிய தலைமை ஆடுகளை பிடித்து சிறையில் போட வேண்டுமென்று டென்மார்க் என்கில்ஸ் லிஸ்ற் கட்சி கேட்டுள்ளது, இதற்கு சோசல் டெமக்கிரட்டியும், டேனிஸ் மக்கள் கட்சியும் ஆதரவளிக்க முன்வந்துள்ளன.
பாராளுமன்றில் இதற்கான பிரேரணை வந்தால் ஆதரிக்கத்தயார் என்று இவ்விரு கட்சிகளும் கூறியுள்ளன.
ஆனால் ஆளும் வென்ஸ்ர கட்சியோ இதை ஏற்கவில்லை, மோசடி தொடர்பாக ஆழமான விசாரணை செய்தாலே போதும், இதற்காக ஒரு புதிய சட்டத்தை பாராளுமன்றில் கொண்டு வந்து நிறைவேற்றி சட்டப்புத்தகத்தை மேலும் ஒரு சுற்று தடிக்கச் செய்வதில் பயனில்லை என்கிறது.
காடு சுட எலி புறப்படும் என்பது எதிரணியின் கருத்து, காட்டை ஏன் சுடுவான் சல்லடைபோட்டு எலியைத் தேடிப்பிடித்தால் சரி என்பது ஆளும் வென்ஸ்ர அரசின் கருத்து..
காட்டைச் சுட்டவனும் இல்லை எலியை பிடித்தவனும் இல்லை.. எலிகள் சிரிக்கின்றனஸ
அளவுக்கு மிஞ்சிய மதுப்பாவனை
டென்மார்க்கில் வாழும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோரிடையே மதுபானப் பழக்கம் வரம்பு கடந்துவிட்டதாக இன்று வெளியான மருத்துவத்துறைச் செலவீட்டு அறிக்கை கூறுகிறது.
கடந்து போன ஐந்தாண்டு காலப்பகுதியில் முதியோரிடையே மதுபானத்தால் நோய்வாய்ப்படுவோர் தொகை இரட்டிப்பாக உயர்ந்துவிட்டதாகவும் அவ் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2013ம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி மதுபானத்தால் நோயுற்று சிகிச்சைக்குள்ளான முதியவர்கள் தொகை 1427 ஆகும், இதனுடன் ஒப்பிட்டால் ஐந்தாண்டுகளுக்கு முந்திய தொகை 655 ஆகவே இருக்கிறது.
சமுதாய நலத்திட்டங்கள் நல்லபடியாக முன்னேற முன்னேற குடித்து அழிவோர் தொகையும் ஏட்டிக்கு போட்டியாக உயர்ந்து வருகிறது.
இப்போது மதுபானத்தில் அடிமையானோருக்கு வழங்கப்படும் அன்ராபஸ் என்ற மருந்தை மேற்கண்ட முதியவர்களுக்கும் வழங்கும்படி வைத்தியர்கள் சிபாரிசு செய்து வருகிறார்கள்.
இந்த வேகத்தில் குடித்து நோய்வாய்ப்படுவோர் தொகை அதிகரிப்பது நாட்டின் சமுதாய நல வாழ்வுத் திட்டங்களுக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல என்று வைத்தியத்துறை அதிகாரி கிற் புறோகொல்ம் கவலை வெளியிட்டார்.
தனிமை, குடும்பங்களை பிரிந்து வாழ்தல், முதியோரில் கடுகளவும் அக்கறையற்று வாழும் இளையோரின் கொடிய வாழ்வு, தாமும் முதியோராக வருவோம் என்று அறியாது கூத்தாட்டம் போடும் இன்றய இளையோரின் செயல்களும் முதியோரின் துயரங்களுக்கும் அவர்கள் ஈற்றில் மதுபானத்தில் தஞ்சமடைய முக்கிய காரணமாவது அவதானிப்பிற்குரியது.
கார்களின் இலக்கத்தகடு திருவதில் வீழ்ச்சிஸ
கார் ஒன்று பெற்றோல் போட்டுக்கொண்டிருந்தது.. முடிந்ததா அவ்வளவுதான் பணத்தைக் கொடுக்காமலே ஓட்டமெடுத்தது.. தொப்பியுடன் இருந்த சாரதியின் முகம் தெரியவில்லை..
பெற்றோல் நிலையத்தின் கமேராவை ஓடவிட்டார் உரிமையாளர், அது காரின் இலக்கத்தகட்டை அடையாளம் காட்டியது.. ஆனால் பெற்றோல் திருடனை பிடிக்க முடியவில்லை.. காரணம் அந்தக்காரில் இருந்தது திருடப்பட்ட இலக்கத்தகடு.
இது ஓர் உதாரணக்கதை மட்டுமே..!
இனி விடயத்திற்கு வருவோம்..
டென்மார்க்கில் கார்களின் இலக்கத்தகடுகளை திருடுவது வீழ்ச்சியடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் 2700 இலக்கத்தகடுகள் திருடு போயுள்ளன, சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் இதில் 1000 இலக்கத்தகடுகள் குறைவாக இருக்கின்றன.
கிழக்கு யூலன்ட் பகுதியில் 339 இலக்கத்தகடுகள் களவாடப்பட்டுள்ளன, சென்ற ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிட்டால் 100 தகடுகள் குறைவாகும்.
தொலைக்காட்சி சேவை இரண்டு இந்தச் செய்தியை இப்போதும் இலக்கத்தகடுகள் களவு போவது நிற்கவில்லை என்று எழுதியுள்ளது.
இலக்கத்தகடுகளின் களவு எண்ணிக்கை டென்மார்க்கில் எவ்வளவு மோசமான குற்றச் செயல்கள் அரங்கேறுகின்றன என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறது – இது நமது பார்வை..
பார்க்கிங் தண்டம் வருகிறது.. களவெடுத்த இலக்கத்தகட்டுக்கு தண்டம் விதித்து என்ன பயன்..?
அதி வேகமாக கார்களை ஓடும் போது கமேரா படம் பிடித்து என்ன பயன்..?
இப்போது புரிகிறதா இலக்கத்தகடு ஏன் களவு போகிறது என்று..
டென்மார்க்கிற்குள் ஆட்களை கடத்துவதில் வீழ்ச்சி
April 10, 2016
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் டென்மார்க்கிற்குள் ஆட்களை கடத்தி வருவோர் தொகை கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.
கடந்த தை 4ம் திகதியில் இருந்து செங்கன் ஒப்பந்தத்திற்கு மாறாக டென்மார்க் – ஜேர்மனி எல்லைப்பகுதிகளில் போலீசாரின் சோதனைகள் ஆரம்பித்தன.
சோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வாரத்தில் 21 பேர் ஆட்களை கடத்திவந்து பிடிபட்டார்கள், இந்தத் தொகையானது படிப்படியாக வீழ்ச்சியடைந்து சென்ற வாரம் வாரத்திற்கு மூன்று என்ற அளவில் வீழ்ச்சி கண்டு, இப்போது ஒருவர் என்றளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதத்தில் இருந்து மாசி வரையான ஆறு மாத காலப்பகுதியில் 190 பேர் ஆட்களை கடத்திவந்து அகப்பட்டார்கள்.
ஆட்களை ஜேர்மனியில் இருந்து கடத்தி, டென்மார்க் வழியாக சுவீடன் நோர்வே போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல ஆட்களைக்கடத்துவோர் தலைக்கு 8.000 குறோணர்களை வசூலிக்கிறார்கள் என்று கூறும் போலீசார் ஆட்கடத்தும் சக்திகள் பெரும் பணம் உழைப்பதும், அதற்காக உருவாக்கப்பட்டுள்ள வலையாக்கத்தை வருமானம் பெற விடாது தடுப்பதும் அவசியமென்றும் அதற்கான தமது முயற்சிகள் கணிசமான வெற்றி பெற்றுள்ளன என்கிறார்கள்.
டேனிஸ் அரசின் கடவை பரிசோதனை முறை வெற்றி பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த போலீஸ் அதிகாரி அது அரசியல் பிரச்சனை, ஆனால் தாம் பார்க்கும் போது ஆட்கடத்தல் தொகை குறைந்திருப்பது தெரிகிறது என்றுள்ளார்.
ஆட்கடத்தலுக்கு வெறும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை போதியதல்ல அதை மேலும் நீட்டிப்பு செய்ய வேண்டுமென டேனிஸ் மக்கள் கட்சி கருதுகிறது.
ஆனால் இவ்விதம் ஆட்களை கடத்துவோரில் கூடுதலானவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை கடத்தி அகப்பட்டோரே என்றும் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் கடவைகள் பரிசோதனைக்கு உள்ளாவது தெரிந்து புது வழிகள் ஏதாவது கண்டு பிடிக்கப்பட்டனவா என்பதும் முக்கிய கேள்வியாகும்.
டென்மார்க்கில் ஐ.எஸ் சந்தேக நபர்கள் கைது..
போலீசாரின் அதிரடிப் பாய்ச்சல், டேனிஸ் உளவுப்பிரிவுடன் இணைந்து ஸ்ரோவ கோப்பன்கேகன் ஈஸ் கொய் பகுதியில் நடந்தது நால்வர் கைது.. தொடர்கிறது.. பதட்டம்..
கைது செய்யப்பட்ட நால்வரும் சிரிய நாட்டவர்கள் என்று ராய்டர் தெரிவித்தாலும் டேனிஸ் போலீசார் இன்னமும் அதை ஊர்ஜிதம் செய்யவில்லை.
ஓய்வூதியம் பெற்றோர், சிறுபிள்ளைகள் குடும்பங்கள் கொண்ட அமைதியான தொடர்மாடிக் குடியிருப்புக்குள் இன்று முற்பகல் பொலபொலவென அதிரடிப்படையினர் நுழைந்த காரணத்தினால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டதாக கண்கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.
கைதான நால்வரும் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஐ.எஸ் அமைப்புடன் சேர்ந்தவர்கள் என்ற கோணத்தில் சந்தேகம் நிலவுகிறது, நால்வரும் நாளை அடிப்படை விசாரணைக்காக நீதிபதி முன்னால் நிறுத்தப்பட இருக்கிறார்கள்.
இவர்கள் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்ட நிலையில் கைதாகவில்லை என்று செய்தியாளர் தெரிவிக்கிறார்கள்.
இதற்குள் உலகம் முழுவதும் செய்திகள் பறந்துவிட்டன, இயந்திரத்துப்பாக்கிகள் சகிதம் போலீசார் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
டென்மார்க்கில் இருந்து ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்கு சுமார் 130 பேர்வரை சென்றதாக முன்னைய செய்திகள் கூறியிருந்தன, இவர்களில் 60 பேர்வரை நாடு திரும்பியிருந்தனர்.
அந்த அறுபதுக்குள் இந்த நால்வர் அடங்குவரா என்பது தெரியவில்லை.. பரபரப்பாக நிமிடத்திற்கு நிமிடம் வேகம் பெறுகின்றன செய்திகள்..
டென்மார்க் நீதியமைச்சர் சோன்ட் பின் இது குறித்து தாம் அதிர்ச்சியடையவில்லை என்றாலும், கைதுகள் திருப்தி தருவதாக தெரிவித்தார்.
இதற்குள் 22.000 ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்த பெயர் பட்டியல் 27 வயதுடைய வன்முறைக் கும்பல் உறுப்பினர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
வெளியான இந்த தகவல்களில் ஒருவர் ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக 23 கேள்விகள் கேட்கப்படுவதாகக் கூறுகிறது.
பெயர், எந்த அணி, இரத்தப்பிரிவு, குடும்பநிலை, சரியா சட்டங்கள் பற்றிய அவருடைய புரிதலும் விசாரிக்கப்படுகிறது.
இந்த அட்டவணை 51 நாடுகளில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை கொண்டிருப்பதாகவும் ஸ்கை நியூஸ் தெரிவிக்கிறது.
29 வயதுடை இந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தத் தேடுதல் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுதான் ‘பனாமா பேப்பர்ஸ்’. விக்கிலீக்ஸ் மாதிரி இதுவும் ஒரு தகவல் கசிவு விவரம்.
பன்னாட்டு ஊடகங்கள் பலவற்றின் இன்வெஸ்டிகேவ் ஜர்னலிஸம் (புலனாய்வு இதழியல்) இந்த தகவல் கசிவின் பின்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளது.
இதை ஆதாரமாக வைத்து டென்மார்க்கில் உள்ள பல வாடிக்கையாளருக்கு லக்சம்பேர்க்கில் தொழில்களை பதிவு செய்ய மோசியாக் பொன்சிகா என்ற பனாமா சட்டத்தரணிகள் அமைப்பு உதவியுள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் தனி நபர்கள் தங்கள் பெயரிலேயே வங்கி கணக்கு ஆரம்பிக்க முடியும். ஆனால் பனாமா வங்கியில் அது சாத்தியமில்லை. பனாமா வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமானால் அந்நாட்டில் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்க வேண்டும். அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அவ்வாறாக தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பணத்தை சேமிக்கலாம். இதற்கு பெயர்தான் ஷெல் கம்பெனி (Shell Company).
இத்தகைய வரி மோசடிக்கு டென்மார்க் நோர்டியா வங்கி, வெஸ்ற்யுஸ்க் வங்கி என்பன துணை போனதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 369 அநாமதேய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன, உலகம் முழுவதும் 543 வங்கிகள் இந்த மோசடியுடன் சம்மந்தப்பட்டுள்ளன, இது குறித்து ஆராய 10.000 வரையான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
டென்மார்க்கின் வரியை ஏமாற்றி மோசடி செய்ய டென்மார்க் வங்கிகள் துணை போனதாக வந்த குற்றச்சாட்டை வங்கிகள் மறுத்துள்ளன.
விசாரணைகள் நடக்கின்றன, இது உண்மையானால் டேனிஸ் சமுதாய நல வாழ்வில் விழுந்த வெடிகுண்டாக அமையும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை என்று சோசல் டெமக்கிரட்டி கட்சியின் வரிப்பிரிவு தொடர்பாளர் ஜென்ஸ் லோய்ல் கூறுகிறார்.
எப்படி மோசடி செய்தார்கள்.. தொடர்கிறது விசாரணைகள்ஸ
டென்மார்க் தொலைக்காட்சியில் இடம் பிடித்த சிறீலங்கா
சிறீலங்காவில் போர் முடிந்த பின்னர் அந்த நாட்டு செய்திகளின் பக்கமே தலை வைத்தும் படுக்காத டேனிஸ் தொலைக்காட்சிகளில் நேற்று சிறீலங்கா தொடர்பான ஒரு செய்தியை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியிட்டுள்ளன.
சுமார் 14 பேர் கொண்ட வெளிநாட்டவர்கள் ரோலர் இழுவைப்படகு மூலமாக சுமார் 7.5 மில்லியன் டாலர் பெறுமதியான கெரோயின் போதை வஸ்தை கடத்திச் சென்று அகப்பட்டுள்ளார்கள் என்பதே அச்செய்தியாகும்.
இவர்கள் பயணித்த ஈரானிய ரோலர் படகில் பத்து ஈரானியர், இரண்டு பாகிஸ்தானியர், ஓர் இந்தியர், ஒரு சிங்கப்பூர் நாட்டவரும் இருந்துள்ளனர்.
அனைவரும் கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் வந்த படகில் 110 கிலோ எடையுள்ள கெரோயின் போதை வஸ்த்து இருந்ததாக கொழும்பு துறைமுக போலீஸ் அதிகாரி ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றாண்டு காலத்தில் சிறீலங்காவில் இடம் பெற்று மிகப்பெரிய போதை வஸ்த்து கடத்தல் இதுவாகும்.
அகப்படாமல் இதை விட பெரிய அளவு தப்பியதோ யார் அறிவார்..
இருப்பினும் இந்தச் செய்தி டென்மார்க் ஊடகங்களின் கவனத்தை தொட்டுள்ளது.
சிறீலங்கா என்ற உல்லாசப்பயணத் தீவு எப்படி போதை வஸ்த்து தீவாக மாறுகிறது என்பதையும், அதில் எந்தெந்த நாட்டவர் அதிகம் தொடர்புபடுகிறார்கள் என்பதையும் அறிய இச்செய்தி துணையாக இருக்கும் என்பது தெரிந்ததே.
சமீபகாலமாக சிறீலங்கா போதை வஸ்த்தில் அபாரமாக முன்னேறி வருவது கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தானியர், ஈரான் நாட்டவர் சம்மந்தப்பட்டால் அது பாரதூரமான விடயமாகப் பார்க்கப்படும், பயங்கரவாதத்திற்கு பணம் திரட்ட போயுள்ளதா என்ற கோணத்தில் மேலை நாடுகள் சந்தேகப்பட வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.
புற்றுநோய் சிகிச்சை நிதி சேகரிப்பு என்றுமில்லாத சாதனை
நேற்று ஞாயிறு டென்மார்க்கில் புற்றுநோய் தடுப்புக்கான போராட்ட அமைப்பினர் சேர்த்த நிதி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதும் 26.000 தொண்டர்கள் வீடு வீடாக உண்டியல் குலுக்கி நிதி திரட்டினார்கள், மொத்தம் 36.5 மில்லியன் குறோணர்கள் சேர்ந்துள்ளது.
இதற்கு முந்தய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் இது சாதனைத் தொகை என்று கூறப்படுகிறது.
புற்றுநோய் வராது தடுத்தல், நோய் கண்டவர்களை மரணிக்க விடாது தடுக்கும் வைத்தியங்களை முனைப்பாக்குதல், புற்றுநோய் சிகிச்சைக்கான ஆய்வு செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இப்பணம் பயன்படும்.
நிதி சேகரித்தல் உச்சமடைந்தாலும் புற்றுநோயால் வரும் மரணங்களைத் தடுப்பதற்கு சிகிச்சையை விரைவு படுத்த வேண்டும், ஆனால் டேனிஸ் வைத்தியசாலைகள் அதைக்குறைக்க முடியாது போராடி வருகின்றன.
அதைக்குறைத்து வேகமான சிகிச்சையை ஆரம்பிக்க இந்த நிதியால் இயலுமா என்பது கேள்விக்குறியே
tks.s.durai