இலங்கை இராணுவம் தப்பிக்கவும் புலிகளை போர்க்குற்றவாளியாக்கவும் சதி!
26 Feb,2016
இலங்கை இராணுவம் தப்பிக்கவும் புலிகளை போர்க்குற்றவாளியாக்கவும் சதி!
ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவம் செய்துள்ள மனித உரிமை மீறல்கள், சரணடைந்த முன்னாள் போராளிகள் பொது மக்கள் மற்றும் பல வகையான கொலை கற்பழிப்பு பற்றிய செய்திகள் காணொளிகள் பதிவுகள் அடங்கிய தகவல்கள் இப்போது உலகம் முழுவதும் உள்ளது பற்றி நாம் எல்லோரும் அறிவோம்.
அதைவிட முக்கியமாக லண்டனில் இருந்து இயங்கும் சனல் 4 ஆங்கில தொலைக்காட்சி ஊடாக உலகம் முழுவதும் அறிந்த உண்மையாக ஆதார பூர்வமாக ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் உள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெலும் மக்ரே கடந்த மஹிந்த ஆட்சியில் நேரடியாக கொழும்பு வந்து மஹிந்த ஆட்சியின் பல தடைகள் தாண்டி நேரடியாக வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு நேரடி தகவல்கள் பெற்று ஜெனிவாவில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த ஆண்டில் நடை பெறவுள்ள ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் மேலும் புதிய போர்க்குற்ற ஆதாரமொன்றை சனல் 4 வெளியிடவுள்ளது.
சிங்கள இராணுவத்தின் பல வகையான போர்க்குற்ற ஆதார ஆவணம் மற்று புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை துறை சார்ந்த நிபுணர்கள் ஊடாக நிருபித்து ஆதாரமாகவே சமர்ப்பணம் செய்யபட்டுள்ளது.
.இது பற்றி உலகம் முழுவதும் அறியப் பட்டவிடயம்.
இராணுவத்தை தப்பிக்க வைக்கும் சதி
இப்போது இந்தியாவின் ரோவின் விசேட ஆலோசனை ஒன்றுக்மைய சிங்கள இராணுவத்தை சுத்தவாளிகளாக மாற்றி தப்பிக்க வைத்து விடுதலை புலிகளை போர்க் குற்றவாளிகளாக மாற்ற இந்தியா இலங்கைக்கு ஆலோசனை வழகியுள்ளதாம்.
இந்தியாவின் இந்த ஆலோசனைக்கு அமெரிக்காவும் பச்சைக் கொடி காட்டியுள்ளதாம்.
இதன் மூலமாக அதிபர் மைத்திரி தலைமையிலான அரசு எதிர்நோக்கும் சர்வதேசப் பிரச்சினைக்கும் உள்நாட்டில் சிங்கள மக்கள மத்தியில் மஹிந்த விதைத்து வரும் விசமத்தனமான பிரச்சாரத்திக்கும் முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று இந்தியாவால் இலங்கை அரசுக்கு சொல்லப்பட்டுள்ளதாம்.
அதனால் கடந்த காலங்களில் புலிகள் செய்துள்ள கொலைகள் துப்பாக்கி பிரயோகங்கள் மற்றும் பல வகையான விடயங்களை திரட்டுமாறு பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அம்பாரை அரந்தலாவ பிக்குகள் கொலை மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல் கொலை ஏறாவூர் முஸ்லிம்கள் கொலை மட்டக்களப்பில் ஊறுகாமம் உட்பட 1987 ஆம் ஆண்டு தொட்டு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம் உட்பட சிறு கொலை சம்பவத்தையும் தட்டி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பல கொலை சம்பங்களுக்கு புலிகள்தான் செய்தார்கள் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதும் அறியப்பட்டுள்ளது. அதாவது புலிகள் அல்லாத மற்ற ஏனைய இயக்கங்கள் செய்துள்ள கொலைகளையும் புலிகளின் தலையில் போட்டுவிட்டு இந்திய சினிமா பாணியில் கேசை முடிக்கும் திட்டம்.இந்த திட்டத்திக்கு சில முஸ்லிம் அரசியல் வாதிகளையும் அரசு வளைக்கும் திட்டம் உள்ளது.
புலிகளை போர்க் குற்றவாளியாக்கும் தந்திரம்
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அனைத்துலக பங்களிப்புக்கு தமது அரசாங்கம் தயங்கவில்லை என்றும், ஆனாலும், இறுதி தீர்ப்பு உள்நாட்டு நீதிமுறைமைகளுக்கு ஏற்பவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அண்மையில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரில் வழிபாடு செய்ய சென்றிருந்த போது பிரதமர் ரணில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் அயல்நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட பங்கேற்க முடியும்.
பொதுமக்களின் மரணங்களுக்கு சிறிலங்கா இராணுவமா, விடுதலைப் புலிகளா பொறுப்பு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.எத்தனை பேர் சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்றோ, அல்லது விடுதலைப் புலிகளால் போர் வலயத்துக்குள் தள்ளிச் செல்லப்பட்டதால், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்றோ தெளிவாகத் தெரியவில்லை என்றார்.
இந்த இழப்புகளுக்கு சரியான காரணிகளைக் கண்டறிவதற்கான நிபுணத்துவம் எம்மிடம் இல்லாதிருக்கலாம்.எனவே, இதுபோன்ற காரணிகளைக் கண்டறிவதற்கு அனைத்துலக பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.
ஆனால் மரணங்களுக்கு யார் பொறுப்பாளிகள், அவர்களுக்கு என்ன தண்டனை என்று தீர்மானிக்கும் இறுதி தீர்ப்பை அளிக்கும் உரிமை சிறிலங்காவின் நீதித்துறைக்கே இருக்கும்.
சிறிலங்காவின் நீதித்துறை முன்னர் அவமானத்துக்குரியதாகவே இருந்தது. ஆனால் இப்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது.இத்தகைய விவகாரங்களில் ஒவ்வொரு நாட்டினதும் இறைமை மதிக்கப்பட வேண்டும்.
சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் ஆசியாவிலேயே பழைமையானது. நாம் பலமானதும், சுதந்திரமானதுமான நீதித்துறையைக் கொண்டிருக்கிறோம். என்றார்.ரணிலின் கருத்துக்குள் புலிகளை குற்றவாளிகளாக்கும் தந்திரம் மறைந்துள்ளது. அதை விலாவாரியாக சொல்லியுள்ளார்.
அரசு படையினரை பாதுகாக்குமாம்
நாட்டின் தற்போதைய அரசாங்கம் படையினரை பாதுகாப்பதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் படையினரை சிறையில் அடைத்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தினால், படையினருக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கட்டியெழுப்பியுள்ள வெளிநாட்டு நட்புறவு தொடர்புகள் காரணமாக இலங்கைக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான போர்க்குற்றங்களை இழைத்த போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
படையினருக்கு அஞ்சும் அரசு
பாதுகாப்புப் படையினர், பொலிஸார், நீதித்துறையினர், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், உயர் அரச அதிகாரிகளுக்கு தொழிற்சங்க உரிமையோ, கட்சி அரசியல் உரிமையோ கிடையாது.
அவர்கள் நடுநிலையாக கடமையாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே அக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை பாதுகாப்புப்படை அரசியல் கட்சி மயப்பட்டு ஏதாவது அரசியல் கட்சிக்கு சார்பாக நடந்து அரசியல் விவகாரங்களில் தலையிடவில்லை என்றே கூறப்படுகிறது.
அதாவது பாதுகாப்புப் படையினரின் உயர் அதிகாரிகள் அவர்களுக்கு விரும்பிய கட்சியின் அரசாங்கமே ஆட்சியில் இருக்க வேண்டுமென வெளிப்படையான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செயற்பட்டிருக்கவில்லை என்றே உள்ளது.
ஆனால் பதவியில் இருக்கின்ற அரசாங்கங்களுக்கு விசுவாசமாக பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் சேவையாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்போன்றை மகிந்தர் அணி அமைத்து வருகின்றது.
அதாவது, கடந்த ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக பாதுகாப்புப் படையினர் செயற்படுவார்களோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் பாதுகாப்புப் படையினர் அவர்களது கட்சி சார்பற்ற நிலையை உறுதி செய்தனர். புதிய அரசாங்கம் அமைவதற்கு இடையூறு விளைவிக்கவில்லை.
ஆனால் மஹிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் பாதுகாப்புப் படையினர் மத்தியில் அவர்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் வகையில் ஆரம்பம் தொட்டே செயற்பட்டு வந்துள்ளனர்.
படையினரை போர்க்குற்ற விசாரணைக்குட்படுத்தப் போவதில்லை என தொடர்ந்து கூறி வருவதுடன், மைத்திரி அரசாங்கம் பாதுகாப்புப் படையினரை போர்க்குற்ற விசாரணைக்குட்படுத்தி அவர்களுக்கு துரோகமிழைக்கப் போவதாகக் கூறி படையினரை மஹிந்த தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
மஹிந்தரின் ஞானோதேயம்
இதே மஹிந்த ராஜபக்ச 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் பற்றிய செயற்குழு கூட்டத்திற்கு இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிரான சாட்சியங்களைக் கொண்டு சென்றார்.
காணாமல் போனவர்கள் பற்றிய 533 ஆவணங்களையும் 19 பக்க புகைப்படங்களையும் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவை தடுத்து நிறுத்தப்பட்டன.
அதற்கு எதிராக அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அவரது கருத்து வெளியீட்டு சுதந்திரம் மீறப்பட்டதாக அவருக்கு சார்பாக தீர்ப்பையும் பெற்றுக்கொண்டார். அப்போது அவர் எதிர்க்கட்சியில் இருந்தார்.
மஹிந்தரின் அந்தர் பல்டி
அவர் ஜனாதிபதியாகிய பிறகு ஜெனீவா சென்று காணாமல் போனவர்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி செய்யப்பட்ட முறைப்பாடுகளை தேசத்துரோக நடவடிக்கைகள் எனக் குறிப்பிட்டதுடன் முறைப்பாடுகளை செய்தவர்களை ‘தேசத்துரோகிகள்’ என்று சாடினர்.
1990 களில் பாதுகாப்புப் படை வீரர் மீது இல்லாத பாசம், விசுவாசம் எல்லாம் அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஏற்பட்டது. ஜனாதிபதியாக இல்லாது பாதுகாப்பு படை வீரர்களை அதிகமாக வசிக்கும் குருநாகல் மாவட்டத்தின் எம்.பி.யாக இருக்கும் தற்காலத்திலும் அது தொடர்கிறது.
பாதுகாப்புப் படையினருக்கு அரணாக தான் இருப்பதாக காட்டிக்கொண்டு அவர்களிடத்தில் அபிப்பிராய பேதங்களை அரசியல் கட்சி கொள்கையின் அடிப்படையில் ஏற்படுத்தி தனக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து விலக்கை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்.
அவரின் மகன் யோசித்தவின் கைதிற்கு கடற்படையில் சிலர் எதிர்ப்பைக் காட்டி இருப்பதற்கு மஹிந்தவின் தற்கால அரசியல் நடவடிக்கைகள்தான் காரணமாகும்.
பாதுகாப்புப் படையினர் இலங்கை அரசிற்குரியவர்கள் அவர்கள் அரசை இயக்கும் அரசாங்கங்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி சேவையாற்ற கடமைப்பட்டவர்கள். அவர்களுக்கு அரசியல் விருப்பு, வெறுப்பு, கட்சி சார்பு தனிப்பட்ட இருக்க முடியும். பாதுகாப்புப் படையினர் என்ற பதவி நிலையில் அவற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது.
மஹிந்த ராஜபக்ச இன, மத சகிப்பின்மையைத் தூண்டி வருவதுடன், பாதுகாப்புப் படையினரிடையேயும் அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தி அவற்றை வளர்க்க முற்படுகிறார்.
இவை பொறுப்புள்ள ஒரு அரசியல் தலைவர் செய்யக்கூடாதவை. அவருக்கு எதிராக சாட்டப்படும் நிதிமோசடி குற்றச்சாட்டுகள் ஒரு புறமிருக்க இனவாதத்தையும், மதவாதத்தையும், தூண்டுவதாக அவருக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்.
அவரது ஆட்சிக்காலத்தில் திட்டமிட்ட வகையில் படையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் மேலோங்கியுள்ளன.
ஆட்கடத்தல், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சில படைவீரர்கள் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசியல் பழிவாங்கல்கள் என்று மகிந்தர் கூக்குரலிடுகின்றார்.
போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறுமாயினும் அவையும் அரசியல் பழிவாங்கல் என்றும் தேகத்துரோகச் செயல் என்றும் பிரசாரப்படுத்தப்படலாம்.
இதனுடாக மேலும் அரசியல் கட்சிகள் அபிப்பிராயங்களைப் பரப்பி படைத் தரப்பினரையும் குழப்பலாம்.இவற்றை செய்பவர்கள் ஜனநாயக விரோதிகள் மட்டுமன்றி உண்மையிலேயே தேசத்துரோகிகளும் ஆவார்.
படையினர் அரசியல் கட்சி மயப்படுத்தப்பட்டால் பாரிய அழிவுபூர்வமான விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும்.
புலிகள்தான் குற்றவாளிகள் -பரணகம அறிக்கை
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யெனவும் பொது மக்கள கோலப் படவில்லையாம் என்றும் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆணைக் குழுவை மஹிந்த ஆட்சிக் காலத்தில் மஹிந்தவால் நியமிக்கப்பட்ட கண்துடைப்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களால் தருஸ்மன் அறிக்கையும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட விசாரணைகளின் அறிக்கை நேற்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் சர்பியா மற்றும் குரேஷியா நாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழு தமது அறிக்கையில் கூறியுள்ளது.
ஆயுதமேந்தியவர்களால் பொது மக்கள் பட்டினி போடப்பட்டதாக கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்டதொன்றாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், யுத்த சூனிய வலயங்களாக எந்த பிரதேசங்களும் காணப்படவில்லை என கூறியுள்ள ஆணைக்குழு, அந்த பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானது என தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப்புலிகளால் யுத்த சூனிய வலயங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறுதிக்கட்ட யுத்ததின் போது ஏராளமான பொதுமக்கள் விடுதலை புலிகளால் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டமையாலேயே சிவிலியன்கள் பலர் கொல்லப்பட்டதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் விசேட நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அந்த குழுவில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லை எனவும் அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் சமர்ப்பிக்க முடிவு
பரணகம அறிக்கையை எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்பித்து புலிகளை போர்க் குற்றவாளிகளாக்கி படையினரை காப்பாற்றி அவர்களை போர்க் குற்றப் பொறிகளில் இருந்து தப்பவைத்து ஈழத்தில் போர்க் குற்றம் இனவழிப்பு என்ற சொல்லுக்கு சாவு மணி அடித்து ஆப்பு வைக்கும் திட்டம்தான் தற்போது அரங்கேறி வருகின்றது.
இந்தியாவை நம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை தமிழர் தரப்பு புரிந்து கொண்டு பிரித்தானியா ஊடாக போர்க் குற்றம் பற்றிய இலக்கை நோக்கி நகர்த்த வேண்டும்
எம்;.எம்;.நிலாம்டீன்