அங்கர் ஜொகான்சன் இறுதி யாத்திரை 02apr 2016
டென்மார்க்கின் முன்னாள் பிரதமரும், சோசல் டெமக்கிரட்டி கட்சிக்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தியவருமான சிறந்த தலைவர் அங்கர் ஜொகான்சனின் இறுதிக்கிரியைகள் நடக்கின்றன.
டென்மார்க் தலைநகரில் உள்ள குறுண்ட்விக்ஸ் தேவாலயத்தில் இவருடைய இறுதிக்கிரியைகளுக்கான ஆராதனைகள் இன்று இடம் பெறுகின்றன, அவருடைய 60 வது பிறந்த நாளுக்கு இசை மீட்டிய இசைக்குழுவினர் இறுதிக்கிரியைக்கான பைபளின் தகவல்கள் உள்ளடக்கிய பாடல்களை இசைக்க இருக்கிறார்கள்.
மூன்று முக்கிய கட்டங்களாக இந்த நிகழ்வு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படுவார், இன்றய இறுதி யாத்திரையில் பங்கேற்க 400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
டென்மார்க்கின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள், அத்தோடு தேவாலயத்தில் 1000 இருக்கைகள் உண்டு எனவே பொது மக்களும், அவருடைய அனுதாபிகளும் பங்கேற்க ஆவன செய்யப்பட்டுள்ளது.
அவருடைய கடைசி மகன் லாஸ் மற்றும் தற்போதைய சோசல் டெமக்கிரட்டி தலைவர் மெற்ற பிறடிக்சன் உட்பட பலர் உரையாற்றுகிறார்கள்.
மதியம் 12.15ற்கு வருகை, 13.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கின்றன, அதன்பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது, 18.00 மணிக்கு தலைநகர் கிறிஸ்டியான் போ ஸ்லொற்பிளேசில் அஞ்சலிக்கு வைக்கப்படும்.
அங்கர் யொகான்சன் 13 யூலை 1922ம் ஆண்;டு பிறந்தார் மரணிக்கும்போது வயது 93 ஆகும், ஒரு துப்பரவு தொழிலாளி தாய்க்கு மகனாக பிறந்து, பின் பெற்றோரை இழந்து தகப்பனின் சகோதரியால் வளர்க்கப்பட்டார்.
பின் 1964 ல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகிறார், 1972 முதல் 1987 வரை சோசல் டெமக்கிரட்டி கட்சி தலைவராக இருந்து, 72 – 73 பின் 1975 – 82 ஆகிய இரு பருவங்கள் நாட்டின் பிரதமராக இருந்தார், 1994 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து கடந்த மார்ச் 20 ம் திகதி மரணமடைந்தார்.
மரணத்தின் பின் என்ன.. இருட்டின் இரவு மரணம் என்று கூறியுள்ளார், மறு பிறவி இல்லை என்று கூறும் அவர் எல்லோரும் மறு பிறவி எடுத்தால் பூமியில் இடம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் எக்ஸ்பக்ரா எம்பிரேஸ் சகோதரிகள் வெற்றி
நேற்று வெள்ளி இரவு டென்மார்க் தொலைக்காட்சி சேவை ஒன்று நடத்திய எக்ஸ்பக்ரா என்ற சூப்பர் சிங்கர் போன்ற பாடல் போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் எம்பிரேஸ் குழு சகோதரிகள், றீம் என்ற 17 வயது யுவதி, மற்றும் அலன் என்ற இளைஞர் ஆகியோர் பங்கேற்றனர்.
முதலில் மூன்று பாடகர்களும் தலா இரண்டு பாடல்களை பாடினார்கள், அதில் ஒரு பாடல் தனியாகவும், இன்னொரு பாடல் மற்றைய பாடகர்களுடனும் இணைந்து பாட வேண்டும்.
இதில் இருந்து இருவர் தேர்வு செய்யப்படுவார்கள், முதலில் றீம் தேர்வானார் அடுத்து எம்பிரேஸ் சகோதரிகள் தேர்வானார்கள், பல இளைஞர்கள் எதிர்பார்த்த ஆண் போட்டியாளர் அலன் மூன்றாவது இடம் பிடித்து வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து பாடகர்கள் தாம் எழுதி இசையமைத்த பாடலை பாடும் இறுதிச் சுற்று ஆரம்பமானது, எம்பிரேஸ் குழுவினர் 60 வீதமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்கள்.
17 வயது றீம் சிறப்பாக பாடி வெற்றியை எட்டித் தொடுவார் என்பது முதல் இரண்டு பாடல்களிலும் தெரிந்தது, ஆனால் அவர் சுயமாக இயற்றிப் பாடிய பாடல் றீம் சகோதரிகளின் பாடலுடன் ஒப்பிட்டால் சிறிது பின்தங்கியிருந்தது.
சுருதிப் பிசகல் அலன், றீம் இருவரிடமும் சிறிது காணப்பட்டது, எம்பிரேஸ் சகோதரிகள் பாடல்களில் இழுவை இருந்தாலும் சரியாக பாடல்களை இசைத்தார்கள்.
றீம் வெற்றி பெற்றிருந்தால் போட்டி மேலும் சிறப்படைந்திருக்கும் என்று பலர் எழுதியுள்ளனர், ஆனால் அவர் சரியாக பாடவில்லை என்று வேறு சிலர் கூறியிருந்தனர்.
ஆனால் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மூவருமே வெளிநாட்டு பின்னணி உடையவர்கள் என்பது தாராள மனப்பான்மைக்கு உதாரணமாக இருந்தது.
பக்கம் சார்ந்து, ஜாதி, மதம் பார்த்து முடிவு அறிவிக்கும் இந்திய தொலைக்காட்சிகள் கற்க வேண்டிய பாடமாகவும் இருந்தது.
பாரிய அரங்கம் அமைக்கப்பட்டாலும், அது பெருந்தொகை பொது மக்கள் பார்க்கும்படியாக அமைக்கப்படாமல் ஸ்ரூடியோவிற்குள்ளேயே முடக்கப்பட்டது, மூன்று போட்டியாளரும் வெளிநாட்டுப் பின்னணி உடையவர் என்பதால் கூட்டம் கூடாது என்று பயந்து ஸ்ரூடியோவுக்குள் முடங்கினார்களோ யார் அறிவார்.
எது எப்படியானாலும் நடந்தது தரமான பாடல் போட்டி நிகழ்ச்சியாக இருந்ததை மறுக்க இயலாது.. தரம் உலகத்தரத்தில் இருந்தது
வண்டி மோதியதில் பாலம் வெடித்தது
March 19, 2016
டென்மார்க் றொள்பிகாவன் நகரத்திற்கும் கொலிபுய் நகரத்திற்கும் இடையே ஓடும் மோட்டார் வை விரைவுச்சாலை இரு பக்கமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் விரைவுச் சாலைiயில் அமைந்திருக்கும் லுணகோட்ஸ் வை பாலத்தில் பாரவண்டி ஒன்று மோதியதால் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்குப் பின்னர் பாலத்தை மதிப்பீடு செய்த நிபுணர்கள் இதன் மேலாக வாகனம் ஓடினால் பாலம் இடிந்து விழக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இப்பாலத்தை முற்றாக இடித்து புதிய பாலத்தை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எப்போது வெடித்த பாலம் இடித்துக் கொட்டப்பட்டு புதிய பாலம் கட்டப்படும், பாதை எப்போது மீண்டும் இயங்கும் என்பது தெரியவில்லை.
ஆசிய நாடுகளின் பாணியில் வெடிப்பை பூசி மெழுகுவார்களா இல்லை புதிய பாலம் அமைப்பார்களா பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
லிற்றுவேன் நாட்டுக்கு சொந்தமான பார வண்டி ஒன்றே பாலத்தில் மோதியுள்ளது.
டென்மார்க் ஜனத்தொகை அதிகரிப்பு
எதிர்வரும் 2020ம் ஆண்டு டென்மார்க்கின் ஜனத்தொகை முன்னர் எதிர்பார்த்ததைவிட 97.000 பேரால் அதிகரிக்கப் போகிறது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அகதிகள் அடைக்கலம் பெறுவது, அவர்களுடைய குடும்பங்கள் வருவது, அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் என்று அதிகரிக்கும் தொகையின் தாக்கம் 2016 முதல் 2019 வரை குடித்தொகையில் சுமார் ஓர் இலட்சம் பேர் அதிகரிப்பைக் காட்டும்.
டேனிஸ் அரசைப் பொறுத்தவரை இந்த ஆண்டு 25.000 பேரும் அடுத்த ஆண்டு 15.000 பேரும் டென்மார்க்கில் அடைக்கலம் கோருவார்கள் என்று கணிப்பிட்டிருந்தது, ஆனால் யதார்த்த நிலை எகிறியுள்ளது.
இது ஆபத்தான நிலை என்று இணைவாக்க அமைச்சர் இங்க ஸ்ரொய்பியா தகவல் தருகிறார்.
மேலும் டென்மார்க்கில் குடித்தொகை வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருப்பது கவனிக்கத்தக்கது, வெளிநாட்டவர்களின் வரவே டேனிஸ் குடித்தொகையில் உயர்வை ஏற்படுத்துவதில் முக்கியம் பெறுகிறது.
டென்மார்க் பெண்களின் மகப்பேற்று அளவு மிகவும் குறைவாக இருப்பதும், 19 – 24 வயதுக்குட்பட்ட பெண்கள் பிள்ளைப்பெறாது தவிர்ப்பதாகவும் முன்னைய செய்திகள் கூறியிருந்தன.
மறுபுறம் நாடும் வயோதிபரின் நாடு என்று கூறுமளவுக்கு வயது கூடியோர் உயிர் வாழும் காலமும் அதிகரித்து செல்வதும் கவனிக்கத்தக்கது.
பசுமாதி அரிசி எச்சரிக்கை
டென்மார்க்கில் உள்ள பக்ரா – இயர்மா கடைத்தொகுதிகளில் பசுமாதி அரிசியை வாங்கியிருந்தால் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் அதை பரிசோதித்துப் பார்த்துவிட்டு சமைக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கடைத் தொகுதிகளுக்கு பசுமாதி அரிசியை விநியோகம் செய்யும் கூப் நிறுவனம் தான் வழங்கிய அரசியில் ஒரு தொகுதியை திருப்பி எடுக்கும்படி பணித்துள்ளது.
காரணம் இதற்குள் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி பிடித்துள்ளதாக அல்லது பூச்சியின் மலம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது, கூப் நிறுவனத்திற்காக பசுமாதி அரிசியை பாக்கட்டுக்களில் அடைக்கும் ஜேர்மனிய தொழிற்சாலையில் தவறு இடம் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
01.09.2017 வரையான காலத்திற்கு பாவிக்கலாமென திகதி குறிப்பிடப்பட்ட பக்ராவில் விற்பனையான அரிசியில் இந்தத் தவறு இருக்கிறது.
அதுபோல இயர்மா கடைத்தொகுதிகளில் 19.08.2017 – 02.09.2017 காலப்பகுதிக்குள் பாவிக்க வேண்டிய அரிசிப்பைகளை அவதானிக்கவும்.
பூச்சி, அல்லது அதன் பாதிப்பு இருந்தால் வீசி விடுக, அல்லது எங்கு வாங்கினீர்களோ அதே கடைத்தொகுதியில் திருப்பிக் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதலிடம் பிடித்த நாடுடென்மார்க் ?
உலக நாடுகளில் மிக அதிக மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் அதிகமாய் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை டென்மார்க் நாடு கொண்டுள்ளது.
இதுவரை முதலிடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து நாட்டை இரண்டாவது இடத்திற்கு டென்மார்க் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து மற்றும் நோர்வே(4), பின்லாந்து(5), கனடா(6), நெதர்லாந்து(7), நியூசிலாந்து(8), அவுஸ்திரேலியா(9), சுவீடன் 10 வது இடத்திலும் உள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியானதில் இருந்து நான்கில் மூன்று முறை டென்மார்க் நாடு முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இதில் ஒரே ஒரு முறை மட்டும் சுவிஸிடம் முதலிடத்தை பறிகொடுத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 156 நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆப்கானிஸ்தான் 154 வது இடத்தை பிடித்துள்ளது. சிரியா 156 வது இடம்.
உலகின் வல்லரசு நாடுகளான ஜேர்மனி(16), பிரித்தானியா(23), ஜப்பான்(53), ரஷ்யா(56), சீனா(83) ஆகிய இடங்களிலும் அமெரிக்க 13 வது இடத்திலும் உள்ளது.
அரசியல் பொருளாதார சூழல்கள் காரணமாக கிரேக்கம், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இந்த முறை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளன.
தனிமனித நலனுக்கு எந்தெந்த நாடுகள் அதிக முக்கியத்துவம் வழங்கியதோ அந்த நாடுகள் மட்டுமே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரித்திணைக்களத்தின் வருமானவரி வெளியாகியது
டென்மார்க்கின் வருடாந்த வரித்திணைக்கள அறிக்கை கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ளது, இதுவரை 1.7 மில்லியன் மக்கள் பார்த்துள்ளார்கள்.
பணம் கிடைத்தவர் சிலர் திருப்பவும் பாக்கி வருமான வரி கட்டவேண்டியவர் பலர் என்று அறிக்கை வெளியாகியுள்ளது.
இன்று அதிகமானவர்கள் பார்க்கின்ற காரணத்தினால் நெருக்கடி கூடியுள்ளது, இதனால் தாமாகவே இணையம் மூலம் திருத்தம் செய்வது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக வரித்திணைக்கள இணையப்பக்கம் கூறுகிறது, இன்று இரவு சுமார் 12.00 மணியளவில் மறுபடியும் பூரணமாகத் தயாராகிவிடும்.
பொதுவாக வருமான வரி அறிக்கையை அதிகாலை நேரம் பார்ப்பதே இலகுவாக இருக்கும் மதிய நேரத்தில் பார்த்தால் சுமார் நான்கு மணி நேரம் தாமதம் இருக்கும்.
சுமார் 4.4 மில்லியன் டேனிஸ்காரர் இந்தப் படிவங்களை பார்வையிடுவார்கள், வருடந்தோறும் இப்படிவம் வெளி வந்ததும் நகரசபையின் வரித்திணைக்களத்தின் முன்னால் நிற்போர் தொகை அதிகமாக இருக்கும், இது பழைய கால பிரச்சனை ஆனால் இப்போது இணையவழி சேவை வந்ததால் நகர சபைக்கு முன்னால் குவிவோர் தொகை குறைவாக இருக்கிறது.
சென்ற ஆண்டு வரித்திணைக்கள அறிக்கை வெளியான போது சுமார் 17 பில்லியன் குறோணர்கள் வரித்திணைக்களத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய நிலுவை இருந்தது.
இவ்வாண்டு வருமான வரிப்படிவத்தில் வரும் மே 1ம் திகதிக்கு முன்னதாக மாற்றம் செய்ய வேண்டும்.
சிவப்பாக தெரிந்தால் நீங்கள் கட்டவேண்டிய தொகை பச்சையாக தெரிந்தால் வரவு..
வரவு எட்டணா.. செலவு பத்தணா.. அதிகம் ரெண்டணா.. என்ற நிலையில் அறிக்கை இருக்கிறதா இல்லையா என்பதே கேள்வியாகும்.
வென்ஸ்ர கட்சி தலைமைப் பதவிக்கு போட்டியிட தயாராகிறார்
டென்மார்க் ஆளும் வென்ஸ்ர கட்சியின் உப தலைவராக இருப்பவர் தற்போதய வெளிநாட்டு அமைச்சர் கிறிஸ்டியான் ஜென்சனாகும்.
சென்ற தடவையே தற்போதைய தலைவரும் பிரதமருமான லாஸ் லொக்கவின் இடத்தை பிடிக்க விரும்பியவர், இப்போது திடீரென தலைமைப் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இவருடைய இந்த அறிவிப்பு பிரதமர் லாஸ் லொக்க ராஸ்முசனுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக அமையும் என்று கூற முடியாது.
எனினும் தனது அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யாமல் இப்படியே அனிச்சையாக தொடர முடியாதென்பது கிறிஸ்டியான் ஜென்சனின் கருத்தாகும்.
தொடர்ந்தும் மதில் மேல் பூனையாகக் காத்திராது வைத்தால் குடுமி வழித்தால் மொட்டை என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டார்.
அதேவேளை கொன்ஸ்சவேட்டிவ் கட்சி ஏற்படுத்திய பிரச்சனையால் ஆட்டம் கண்ட வென்ஸ்ர கட்சி அதிலிருந்து இப்போதுதான் மெல்ல மீண்டு வரும் வேளையில் கிறிஸ்டியான் ஜென்சன் இவ்வாறு கூறியிருப்பது கட்சிக்கு பலத்த சிக்கலை ஏற்படுத்தும்.
இப்போதே வென்ஸ்ர கட்சி தனது வாக்காளரை இழந்து பின்தங்கி நிற்கிறது, கிறிஸ்டியான் ஜென்சன் இந்த நேரம் தனது கருத்தை இப்படி வெளியிட்டிருக்கக் கூடாது என்று பேர்ளின்ஸ்க பத்திரிகை ஆய்வாளர் கூறுகிறார்.
அவருடைய பார்வை ஒரு பக்கமானது ஆனால் இதற்கு இன்னொரு முகமும் இருக்கிறது.
வென்ஸ்ர கட்சி செல்வாக்கு இழந்திருக்கும் நேரமே பதவியை பிடிக்க சரியான தருணமாக இருக்கும் என்பது உட்கட்சிப் போரில் ஓரம்சமாகும்.
செல்வாக்குக் கூடியிருக்கும் தருணத்தில் இப்போதைய தலைவரை விழுத்த இயலாது.
மேலும் இந்தத் தருணத்தை பயன்படுத்தி கிறிஸ்றியான் ஜென்சனை புறந்தள்ளி கட்சியின் அடுத்த குழு தலைமைப்பதவியை பறிக்கக் கூடிய வியூகம் ஒன்று திரை மறைவில் நடந்திருக்க வேண்டும், ஆகவேதான் இந்த அகால வேளையில் அவர் அவசரப்பட்டு கருத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.
அரசியல் என்பது தகுதி, நீதி, சகோதரத்துவம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது விழுந்த பக்கம் அடிப்பதே அரசியலாகும், அங்கு வென்றவன் சொன்னதே நீதியாகும்.
காயம் வந்த விலங்கை மற்ற விலங்குகள் காயப்பட்ட இடத்தில் கடித்து சரிப்பது போன்றதுதான் டெமக்கிரட்டி அரசியல், சர்வாதிகாரத்திலும் இதுதான் இயங்கியல் விதி , பதவி பறிப்பிலும் கதிரைப் போட்டியிலும் சர்வாதிகாரம், கம்யூனிசம், ஜனநாயகம், பயங்கரவாதம் ஆகிய நான்கிலும் யாதொரு மாற்றமும் கிடையாது.
காரணம் கொள்கைகள் மாறினாலும் மனிதன் என்பவன் ஒருவன்தான்ஸ!!
பபிரிட்டனின் தொழிற்கட்சியில் மிலிபான்ட் சகோதரர்கள் முதுகில் குத்தி விழுந்த கதை இதற்கு நல்ல சமீபத்திய உதாரணமாகும்.
ஆட்கடத்தல் வழக்கிற்கு மேன் முறையீடு
டென்மார்க்கில் சென்ற ஆண்டு சிரிய நாட்டு அகதிகள் பெருந்தொகையாக வந்து, டென்மார்க்கைக் கடந்து சுவீடனுக்குள் போனது தெரிந்ததே.
இத்தருணம் அவர்களை யாதொரு கேள்வியும் கேட்காமல் ஆளைவிட்டால் போதும் சாமி என்பது போல டென்மார்க் கைகளை கட்டிக் கொண்டிருந்ததும், சுவீடன் அதைக் கண்டித்ததும் பழைய கதைகளாகும்.
இதே காலப்பகுதியில் பல ஜேர்மன் மக்கள் அகதிகளுக்கு சாக்ளேட் கொடுத்து வரவேற்றது தெரிந்ததே.. அது டென்மார்க்கிலும் சன்னதத்தை பிறப்பித்ததும் தெரிந்ததே.
இந்த வகையில் பல டேனிஸ் மக்கள் சிரிய அகதிகளுக்கு உதவப்புறப்பட்டதும் தெரிந்ததேஸ
இந்தப் பின்னணியில் ஒரு கதைதான் நேற்று டென்மார்க் நியூகுபிங் பல்ஸ்ரர் நீதிமன்றில் நடைபெற்ற வழக்காகும்.
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டது யார்..?
ஒரு சிரிய நாட்டு குடும்பத்தை தமது வாகனத்தில்: ஏற்றிச் சென்று சுவீடனில் விட்ட டேனிஸ் குடும்பமான லிஸ்பெத் ஸோர்னிங் ஆனர்சனும், அவருடைய கணவனான மிக்கேல் ரவுணோவும் ஆகும்.
இவர்கள் இரக்கப்பட்டு உதவி செய்தாலும் சட்டப்படி அது ஆட்கடத்தல் குற்றமே என்பது இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்காகும்.
ஆனால் ஆட்கடத்தலிலும் இரண்டு பிரிவுகள் உண்டு ஒன்று பணத்திற்காக கடத்தினால் அதற்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை காத்துள்ளது, ஆனால் மனிதாபிமான உதவி என்ற அடிப்படையில் செய்தால் அதற்கான தண்டனையோ வேறானது.
இவர்கள் இருவரும் பணமின்றி தமது எதிர்காலத்தையும் கவனிக்காது மனிதாபிமானத்தோடு உதவிய நல்ல குடும்பமாகும்.
ஆனால் சட்டத்திற்கோ நல்லவர் கெட்டவர் என்ற பேதம் கிடையாது குற்றத்திற்கு தண்டனை இதுவே சட்டத்தின் அளவுகோல்..
இந்தப் பின்னணியில் இந்தத் தம்பதியரை குற்றவாளிகளாகக் கண்ட நீதி மன்று தலா 22.500 குறோணர் தண்டம் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இதை இவர்கள் எதிர்த்து மேன்முறையீடு செய்ய இருக்கிறார்கள், இதற்கிடையில் பேஸ்புக் மூலமாக ஜாஸ் இசைக்கலைஞர் பென்ஜமின் சோப்பில் என்பவர் 31.700 குறோணர்களை சேகரித்து இவருக்கு வழங்கியுள்ளார், தண்டப்பணத்தைக் கட்டும்படி.
ஆனால் டென்மார்க் நீதிமன்று ஒருவரை குற்றவாளியாகக் கண்டால் அவர் பல வேலைகளுக்கு செல்ல முடியாது.. அது குற்றப் பணத்தைவிட பாரிய நஷ்டமாக அமையும்.
எனவேதான் மேன்முறையீடு செய்துள்ளனர்..
டென்மார்க்கிலுள்ள இரண்டு பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டார் என அந்நாட்டைச் சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பள்ளிக்கூடங்களில் ஒன்று யூதப் பள்ளிக்கூடமாகும்.
இவருக்கு வெடிகுண்டு தயாரிக்க உடந்தையாக இருந்துள்ளார் என்று, 24 வயதுடைய அவரது ஆண் நண்பர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இராசாயனம் மற்றும் வெடிப்பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்படவில்லை. ஆனால் தாம் குற்றவாளிகள் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பள்ளிச் சிறுமி சமீபத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறியுள்ளார் எனவும், அவரது ஆண் நண்பர் சிரியாவில் போரில் ஈடுபட்டவர் என்றும் டென்மார்க் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டேனிஸ்காரர் உலகின் 65 பெரிய பணக்காரர்
kjeld kirk kristiansen
உலகத்தின் பணக்காரரை பட்டியலிடும் இந்த ஆண்டுக்கான போபோஸ் சஞ்சிகையின் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு 17வது தடவையாக அமெரிக்கரான பில்கேய்ட்ஸ் உலகின் முதலாவது பணக்காரராக தேர்வானார், இவருடைய மொத்தச் சொத்தின் பெறுமதி 74 பில்லியன் டாலர்களாகும்.
இரண்டாவது இடத்தை ஸ்பானியரான 79 வயதுடைய அமென்சியோ ஒற்றேகா பெற்றுக்கொண்டார், இவருடைய சொத்து மதிப்பு 67 பில்லியன் டாலர்களாகும்.
மூன்றாவது இடத்தை பங்குச்சந்தை வாரன் புபேற் பெற்றுக்கொண்டார், இவருடைய சொத்து மதிப்பு 60.8 பில்லியன் டாலர்களாகும்.
நாலாம் இடத்தை மெக்சிக்கோவை சேர்ந்த கார்லோஸ் சிலிம் கீலு பெற்றுக்கொண்டார் இவருடைய சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர்களாகும்.
இந்த வகையில் டென்மார்க்கைச் சேர்ந்த லீக்கோ உரிமையாளர் கியெல்ட் கியக் கிறிஸ்டியான்சன் 65 வது இடத்தைப் பிடித்தார், இவருடைய சொத்தின் மதிப்பு 13.1 பில்லியன் டாலர்களாகும்.
சென்ற ஆண்டு 129 வது இடத்தில் இருந்த டேனிஸ்காரர் இந்த ஆண்டு 65 வது இடத்திற்கு எகிறிப்பாய்ந்துள்ளார்.
பில்கேய்ட்ஸ் முதலிடத்தைப் பிடித்தாலும் சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு அவருடைய செல்வம் 4.2 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடியில் லீக்கோ நன்கு தாக்குப்பிடித்திருப்பதை இந்தக் கணிப்பு உணர்த்துகிறது.
பாடசாலைகள் ஆரம்பம்
டென்மார்க் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட குளிர்கால விடுமுறை முடிவடைந்து இன்று திங்கள் மறுபடியும் பாடசாலைகள் ஆரம்பித்தன.
குளிர்கால விடுமுறை என்பதால் குளிர் சுருட்டிப்போடப்போகிறது என்று காலநிலை அவதான நிலையம் கூறியதற்கு மாறாக குளிர் இருந்தாலும் சூரிய ஒளியுடன் விடுமுறை முடிவடைந்துள்ளது.
விடுமுறைக்கால பாடசாலைகளின் முக்கிய செய்திகள் :
01. டென்மார்க்கில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பௌதிகவியல் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்படும்.
02. என்ஜினீயரிங் கல்வி நிலையங்களில் கணிதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏ தரத்தில் கற்பிக்கப்படும்.
03. புதிதாக வரும் அகதிகளின் பிள்ளைகள் வருவதால் மூடுவிழா விளிம்பில் நிற்கும் பல சிறிய நகரங்களின் பாடசாலைகள் தொடர்ந்து இயங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளன, உதாரணமாக கொல்ஸ்ரபோ நகரத்தின் கிளை நகரமான வம்ப் என்ற நகரத்தில் உள்ள பாடசாலைக்கு 20 வெளிநாட்டு பிள்ளைகள் புதிதாக வந்துள்ளதால் பாடசாலை புத்துயிர் பெற்றுள்ளது.
04. உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் எஸ்.யூ எனப்படும் கொடுப்பனவுக்கு மேலாக வழங்கப்படும் கடன் பணத்தை திருப்பிச் செலுத்தாது டிமிக்கி விடும் மாணவர் தொகை தொடர்ந்து உயர்வடைந்து செல்கிறது.
இதற்கான வட்டி இப்போது உயர் நிலையில் இருக்கிறது ஆளும் வென்ஸ்ர வட்டியை குறைக்க மறுத்து கந்துவட்டி கறக்க நிற்கிறது.
இன்று சூரிய ஒளியுடன் ஆரம்பித்துள்ள பாடசாலைகளின் நிலை இதுவாகும்ஸ
ஸ்கன்டிநேவியன் ஸ்டார் தீயிடப்பட்டது எப்படி புதிய கதை
ஸ்கன்டிநேவியன் ஸ்டார் என்ற கப்பல் கடந்த 1990ம் ஆண்டு நோர்வேயில் இருந்து டென்மார்க் பரடைஸ்காவன் துறைமுகம் வந்தபோது நடு வழியில் தீப்பிடித்து 159 பேர் மரணமடைந்தது தெரிந்ததே.
சுமார் 26 வருடங்கள் கடந்த பின்னர் இந்த விவகாரத்தில் இப்போது புதிய கதை ஒன்று உலாவர ஆரம்பித்துள்ளது.
கப்பலை தீயிட்டது அதில் பணியாற்றிய இருவரே என்று புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.
தீ விரைவாக பரவியதால் எரி பொருள் விசிறி எரிக்கப்பட்டிருக்க வேண்டும், நன்கு திட்டமிட்டே தீயிடப்பட்டிருக்க வேண்டும் என்று விசாரணையளர் பிளமிங் ரூவ ஜென்சன் தெரிவித்துள்ளார்..
ஆனால் கப்பல் நிறுவனத்தினர் கருத்துக்களை தரவில்லை.. இது குறித்து சரியான விசாரணை வேண்டுமென டேனிஸ் மக்கள் கட்சி கேட்டுள்ளது.
159 பேர்களுடைய மரணத்துடன் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் பதட்டத்துடன் நோக்கப்படுகிறது.
நன்கு திட்டமிட்டு கப்பல் பணியாளரே தீயிட்டால் அவர்கள் நோக்கமென்ன.. விவகாரம் சூடுபிடிக்கிறது.. பூரண விபரங்கள் இன்னமும் உறுதி செய்யப்பட்ட வடிவமாக வெளியாகவில்லை.
முன்னைய ஆய்வுகளின்படி..
482 பேர் பயணித்த இந்தக் கப்பலின் பல இடங்களில் தீ வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் தீ மூட்டியது யார் என்பது சந்தேகத்திற்கு இடமாகவே இருந்தது.
தீ விபத்தில் மரணித்த ஒரு டேனிஸ் பாரவண்டி சாரதியே தீயிட்டார் என்று முன்னர் சந்தேகம் வெளியிடப்பட்டது, பின்னைய விசாரணைகளில் அதுவும் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.
பின்னர் ஸ்கன்டிநேவியன் ஸ்டாரின் ஊழியர்களுக்கு சரியான முறையில் தீயணைப்புப் பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
1993ம் ஆண்டு கப்பலின் தலைமை மாலுமி, ராடர் பிரிவு பொறுப்பாளர், நிறுவன நிர்வாகி ஆகியோர் தண்டிக்கப்பட்டனர், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் கப்பல் எப்படி தீ விபத்தை சந்தித்தது என்பதற்கான விசாரணைகளில் ஊழல் நடந்திருப்பதாக உறவினர் போர்க்கொடி தூக்கினர்.
அதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு தை 1ம் திகதி நோர்வே அரசு ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது.
இப்போது டேனிஸ் தரப்பில் இருந்து 26 வருட மௌனம் கலைக்கப்பட்டுள்ளது..
டென்மார்க்கில் பெண்கள் சொந்த வீடுகளில் பிரசவம்
டென்மார்க்கில் உள்ள பெண்கள் வைத்தியசாலை சென்று பிரசவிப்பதைவிட சொந்த வீடுகளிலேயே பிரசவிப்பது கடந்த காலங்களில் இரட்டிப்பாக உயர்வு கண்டுள்ளதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2014 ம் ஆண்டு கணிப்புக்களின்படி வீடுகளில் உள்ள கட்டில்களை பிரசவ மேசையாக பயன்படுத்தும் போக்கு 0.7 வீதமாகக் காணப்பட்டது இது 2015ம் ஆண்டு 1.2 வீதமாக உயர்வு கண்டுள்ளது.
இது கோல்டிங் நகர வைத்தியசாலைப் பிரிவினர் வழங்கிய தகவலாகும்.
அதேவேளை பெண்கள் பிரசவத்தின்போது குழப்பகரமான சிக்கல்களை சந்திக்கமாட்டார்கள் என்பது வைத்தியரால் உறுதி செய்யப்படுமாக இருந்தால் மட்டுமே வீடுகளில் பிரசவத்தை மேற்கொள்ளுவது நல்லது என்று அப்பகுதி பிரசப்பிரிவு தலமை மருத்துவத்தாதி அனா ஊலர் கூறுகிறார்.
ஆனால் இந்தச் செய்தியை பார்த்தவுடன் வீட்டில் பிரசிவிப்பது நல்லதென கருதிவிடக்கூடாது, ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை செய்ய சரியான வசதிகள் வீடுகளில் இருக்காது என்பதை கவனிக்க வேண்டும்.
சுகப்பிரசவம் பரிபூரணமாக உறுதி செய்யப்பட்ட ஏற்கெனவே சுகமான தலைப்பிரசவம் கண்ட பெண்கள் இவ்வாறு சிந்தித்தால் அதில் ஓர் அர்த்தம் இருக்க வாய்ப்புண்டு.
மேலும் பிரசவம் முடிந்ததும் வைத்தியசாலையில் இருந்து விரைவாகவே பெண்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவதால் சிலர் வீடுகளிலேயே பிரசவம் முடித்துவிட முயல்கிறார்களா என்பது இன்னொரு கேள்வியாகும்.
டென்மார்க் பெண்களின் ஆயுட் காலத்தில் வீழ்ச்சி
டென்மார்க்கில் உள்ள பெண்கள் உயிர்வாழும் சராசரிக்காலத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
தற்போதும் ஆண்களைவிட பெண்கள் உயிர்வாழும் காலமே உயர்வாக இருந்தாலும் பெண்களின் சராசரி ஆயுட்கால வருடங்களில் 0.2 வருடங்கள் குறைவு ஏற்பட்டுள்ளது.
இடைநிலையில் மரணிக்கும் பெண்களின் வயதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மொத்தச் சராசரியை பாதிப்பதாக இருக்கிறது.
தற்போது டென்மார்க்கில் பெண்கள் உயிர்வாழும் சராசரி வயது 82.5 வருடங்களாக இருக்கிறது.
அதேவேளை யூலன்ட் பகுதியில் வசிக்கும் மக்கள் உறுதியும், நீடித்த ஆயுளும் உள்ளவர்களாக இருப்பார்கள் என்ற பழமொழி ஒன்று டென்மார்க்கில் இருக்கிறது.
விவசாயம், மீன்பிடி, பண்ணைத்தொழில், கட்டுவேலை என்று உடலை வருத்தி உழைக்கும் உழைப்பாளிகளாக இருந்தமையால் இவர்களுடைய ஆயுட்காலம் அதிகமாக இருந்து வந்ததையும் காண முடிந்தது.
அதிக காலம் உயிர் வாழும் பெருமையை இன்றுள்ள நிலையில் யூலன்ட்பகுதி மக்கள் பெரும்பாலும் இழந்துவிட்டாலும் கூட, கிழக்கு யூலன்ட் பகுதியில் உள்ள பெண்கள் அந்தப் பெருமையை காப்பாற்றியுள்ளார்கள்.
கிழக்கு யூலன்ட் பகுதியில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 83.4 வருடங்களாக இருக்கிறது.
தினசரி புயல் அடிக்கும் மேற்கு யூலன்டுக்கும் ஒதுக்குப்புறத்தல் உள்ள கிழக்கு யூலன்டிற்கும் உயிர்வாழ்வதில் ஏதோ ஒரு வேறுபாடு இருக்கிறது.
அது என்ன..கிழக்கு யூலன்ட் போய்த்தான் பார்க்க வேண்டும்..
சரேலென்று கத்தியால் குத்தினார்..
டென்மார்க்கின் றொஸ்கில நகரத்தில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் வீறு கொண்ட நபர் ஒருவர் இன்னொருவருக்கு கத்தியால் வயிற்றில் ஏற்றிய கூத்தான கூத்து கடந்த திங்கள் அரங்கேறியுள்ளது.
கத்தியால் குத்திய நபர் காயப்பட்ட நபருடைய வயிற்றில் பாதாள இறக்கமாக குத்தியதாக செய்திகள் உணர்த்துகின்றன.
இந்த நாடகத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று மதியம் நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டார், ஒரேயொரு குத்தாக இருந்தாலும் வாழ்வா.. இல்லை சாவா என்பதை முடிவு செய்ய வேண்டியளவுக்கு குத்தின் வேகம் இருந்துள்ளது.
இதனால் சந்தேக நபர் மீது கொலை முயற்சிக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, இனி தீர்ப்பை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்
மறுபுறம் இன்னொரு கிரிமினல் செய்தியின்படிஸ.
டென்மார்க்கில் திருட்டுத்தனமாக திரைப்படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்போர் தொகை அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தரவிறக்கம் செய்தால் அது எங்கு, எந்த வீட்டு முகவரியில் உள்ள இணையம் என்பதை ஐ.பி முகவரியை வைத்து கண்டறிய முடியும்.
இத்தகையோர் குறித்த முறைப்பாடு கிடைத்தால் சட்டத்தரணியிடமிருந்து 1500 முதல் 2200 குறோணர் வரையான தண்டம் கட்ட வேண்டிய கடிதம் வரும்.
கட்டிவிடுவது நல்லதுஸ.!
கட்ட மறுத்தால்..?
விவகாரம் நீதி மன்று செல்லும்..!
சென்றால்..?
வேறென்ன நனைத்து சுமக்கும் வேலையாகிவிடும்ஸ!!
tks.k.s.durai