இந்தியாவில் ஒரு நாளை 100 கற்பழிப்புகள் நடக்கிறது
21 Sep,2015
இந்தியாவில் கடந்த ஆண்டில் நாள்தோறும் 100 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு எவ்வளவு தான் பாதுகாப்பு அளித்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை. நாடெங்கும் கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 100–க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில், கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 36 ஆயிரத்து 735 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும், இதில் 5 ஆயிரத்து 76 வழக்குகளுடன் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியான இடங்களில் ராஜஸ்தான் (3,759), உத்தர பிரதேசம் (3,467), மராட்டியம் (3,438), டெல்லி (2,096) மற்றும் பீகார் (1,127) ஆகிய மாநிலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கல்வியறிவு விகிதத்தில் முன்னிலையில் இருக்கும் கேரளா கூட, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு கடந்த ஆண்டு மொத்தம் 1,347 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவில் பெண்களுக்கு மிதமிஞ்சிய பாதுகாப்பை வழங்கும் பகுதியாக லட்சத்தீவு மற்றும் நாகாலாந்து திகழ்கிறது.
இதற்கு அடுத்தபடியாக டையு, டாமன் மற்றும் தாதர் நகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் சொற்ப விகிதத்திலேயே உள்ளன.