தற்கொலை ஒன்றே வாழ்க்கைக்கு முடிவு அல்ல
08 Sep,2015
தற்கொலை ஒன்றே வாழ்க்கைக்கு முடிவு அல்ல
என்றாவது ஒருநாள் வாழ்க்கை முடிந்துவிடத்தான் போகிறது. அன்று உயிர், உடலில் இருந்து பறந்துவிடத்தான் போகிறது. அதற்குள் அவசரப்பட்டு ஏன் தானாகவே இடையிலே வாழ்க்கையை முடித்துக்கொள்ளவேண்டும்? தற்கொலை இன்று உலகையே காயப்படுத்திக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ‘தற்கொலைகளின் தலைநகரமாக’ இந்தியாவை படுகாயப்படுத்திக்கொண்டிருக்கிறது.
மரணம் என்பது என்றோ ஒரு நாள் வரப்போவது. ஆனால் தற்கொலை என்பது தானே வரவழைத்துக்கொள்ளும் கொடூரச்செயல். அதற்குப் பிறகு அவர்களுடைய பெற்றோரும், குடும்பத்தினரும் இயல்பு நிலைக்கு வருவது கடினம். தற்கொலை மூலம் பிள்ளைகளால் அனாதை ஆக்கப்படும் பெற்றோர்களை காலம் முழுவதும் யார் காப்பாற்றுவார்கள். அவர்கள் மீதமுள்ள வாழ்க்கையை பய உணர்வோடுதான் கழிப்பார்கள். வாழ்க்கை மீதுள்ள நம்பிக்கையை இழந்து மனம் தளர்ந்து போவார்கள்.
எதிர்காலமே இருண்டு விடுகிறது. இன்னொரு புறத்தில் தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கோபமும், வெறுப்பும் உருவாகிறது. அதனால் பழிவாங்கத்துடிக்கும் மனோபாவத்துடன் ஒவ்வொரு நாளையும் விரக்தியுடன் கழிக்கிறார்கள். சமூகத்தையே எரிச்சலோடு பார்க்கிறார்கள். உறவுகள், நட்புகளை தவிர்க்கத் தொடங்கி விடுகின்றனர். இயற்கை மரணம்கூட அவர்களுக்கு துன்பம் நிறைந்ததாக ஆகிவிடுகிறது. தற்கொலை எதற்குமே தீர்வு அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.
தற்கொலை எண்ணம் மனதில் இருந்தால் அதில் இருந்து விலகவேண்டும். ஏன்என்றால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டு வந்தவர்கள் பெரிய அளவில் சாதித்திருக்கிறார்கள். சமூகத்தின் மேலுள்ள அவநம்பிக்கை, வெறுப்பு எல்லாம் சேர்த்து அவர்களுக்குள் ஒரு வேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. தற்கொலை எல்லை வரை சென்று மீண்டவர்கள் பட்டியல் வெகு நீளமானது.
எல்லா மனிதர்களும் வாழ்க்கையில் எப்போதாவது விரக்தி அடையத்தான் செய்கிறார்கள். அப்போது அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டும். வாழ்ந்துகாட்ட வேறு மாற்று வழி இருப்பதை கண்டுபிடிக்கவேண்டும். மனிதரைத் தவிர வேறு எந்த உயிரினமும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை.