கடலில் பலியான பிஞ்சுக் குழந்தை விவகாரம்: அகதிகள் பிரச்சினையால் ஆட்டம் காணும் கனடா அரசு
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார்.
துருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் திருட்டு படகில் பயணம் செய்வதற்காக 3ண லட்சம் ரூபாயை(5860 அமெரிக்க டாலர்) அப்துல்லா குர்தி கொடுத்து இருக்கிறார். பாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொண்டபோதுதான் அப்துல்லா குர்தி தனது மனைவி குழந்தைகளை ராட்சத கடல் அலைகளுக்கு காவு கொடுக்க நேர்ந்தது. அதுவும் பிஞ்சுக் குழந்தை அய்லான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.
முதலில் அப்துல்லா குர்திக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த கனடா அரசு, தற்போது அய்லானின் மரணக் காட்சியைப் பார்த்தும், எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கும் பதறிப்போய் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்துள்ளது. ஆனால், அப்துல்லா குர்தி கனடாவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
அவர் கூறியதாவது:-
எனது மனைவிதான் இந்த உலகம். அவள் இல்லாமல் எதுவுமே கிடையாது. மனைவியும், குழந்தைகளும் என் கைகளில் இருந்தபோதே மரணத்தை தழுவி விட்டனர்.
தற்போது, எனது இளைய மகன் இறந்த புகைப்படக் காட்சியை பார்த்து எனக்கு அடைக்கலம் தருவதாக கனடா அரசாங்கம் கூறுகிறது. இதை நான் ஏற்கப் போவதில்லை. எனது குடும்பத்தையே இழந்துவிட்டேன். இனி நான் கனடா சென்று வாழ்வதால் எதுவும் ஆகிவிடாது. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளை சும்மாவிடமாட்டேன். நாடு திரும்பி அவர்களுக்கு எதிராக சண்டையில் குதிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, அய்லான் இறந்த புகைப்படக் காட்சி கனடா நாட்டில் பெரும் அதிர்வலையை உருவாக்கி விட்டது. அங்கு அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் தாமஸ் முல்காயிர் கண்ணீர் மல்க கூறுகையில், இது தாங்கிக் கொள்ள முடியாத துயரம். இப்பிரச்சினையை தீர்க்க கனடா அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றார்.
விடுதலை கட்சியின் தலைவர் ஜஸ்டின் டிரேடியூ, கூறும்போது, 23 ஆயிரம் சிரியா நாட்டின் அகதிகளை கனடா அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது போல் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரச்சினைக்கும் கனடா அரசு முடிவு கட்டவேண்டும் என்று பல்வேறு முக்கிய கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. பொதுமக்களிடையேயும் இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனால் கனடாவில் பழமைவாத கட்சியின் அரசு ஆட்டம் கண்டு இருக்கிறது. இப்பிரச்சினையால் ஆளும்கட்சி தேர்தலில் தோல்வியை சந்திக்கும் நிலையும் உருவாகி உள்ளது.
அகதிகள் பிரச்சினையில் இதுவரை அலட்சியம் காட்டி வந்த பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தற்போது, எங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட துயரத்தைப் போல இதைக் கருதுகிறோம். அகதிகள் பிரச்சினைக்கு எங்களால் முடிந்தவரை உதவி செய்வோம் என்று இறங்கி வந்துள்ளார்.
இதனிடையே சிரியா அகதிகள் பிரச்சினை கனடாவில் தீவிரம் அடைந்து இருப்பதால், பழமைவாத கட்சி அரசின் குடியேற்றத் துறை மந்திரி கிறிஸ் அலெக்சாண்டர் தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைத்துவிட்டு தலைநகர் ஒட்டாவுக்கு உடனடியாக திரும்பினார். முதற்கட்டமாக 10 ஆயிரம் சிரியா அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபடும் என்று அவர் தெரிவித்தார்.
இதுவே கடைசியாக இருக்கட்டும் - உலகை உலுக்கிய சிறுவனின் தந்தை
தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகி வருகிறார்கள். அந்தவகையில், தற்போது தினம் தோறும் நாம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்ட அகதிகளின் துயரத்தை, வலியை உணர்த்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரகணக்கான மக்களை கண்ணீர் சிந்தவைத்து வருகிறது.
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது துருக்கி அருகே படகு விபத்துகுள்ளானதில் ஆய்லன்(3) மற்றும் அவனது ஐந்து வயது சகோதரன் காலிப்(5) மற்றும் தாய் ரேகனா ஆகியோருடன் 12 சிரியர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள்.
மத்திய தரைகடலில் மூழ்கி இறந்து போன ஆலனின் படம் வெளியாகி உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்க துவங்கியுள்ள நிலையில், இறந்து போன 3 வயது ஆய்லனின் தந்தை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
‘‘எங்களுக்கு நடந்த கொடூரத்தை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும். இந்த துயர சம்பவம் உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும், இதன் மூலம் மறுபடியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். இதுவே கடைசியாக இருக்கட்டும்” என அப்த்துல்லா தெரிவித்தார்.