நபரொருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வீடியோ
03 Mar,2015
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற வாய்தர்க்கம் ஒன்றின்போது, வீடற்ற நபரொருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லொஸ் ஏஞ்சல்ஸின் ஸ்கிட் றோ பகுதியில், வன்முறையை அடுத்து நபரொருவர், சில பொலிஸ் அதிகாரிகளால் சுட்டு கொல்லப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் காணப்படுகின்றன.
நபரொருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பிடிக்க முயன்றதையடுத்து, மூன்று அதிகாரிகள் குறித்த நபர் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட நபர், ஆபிரிக்காவை சேர்ந்தவர் எனவும் மனநோய் சிகிச்சை பெற்றுவரும் வீடற்றவர் என, சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார்.
கொள்ளை சம்பவத்தை தடுப்பதற்காக முயற்சிசெய்த போது, இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற போது வேறு துப்பாக்கிகள் எதுவும் பாவிக்கப்பட்ட காட்சிகள் எதுவம் குறித்த வீடியோவில் பதிவாகியிருக்கவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் அதிகாரி அன்ரு ஸ்மித் கூறியுள்ளார்.
கடந்த வருடம் கறுப்பு மனிதன் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து அமெரிக்காவில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வீடற்ற நபரின் கொலையை அடுத்து டுவிட்டர் வலைத்தளத்தில் #LAPDShooting என்ற குறியீட்டு சொல் முன்னணியில் உள்ளதுடன் அது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.