மற்ற நாடுகளைப் போல, சீனாவிலும் ஆண் குழந்தைகள் பெறுவதில்தான் பெற்றோர் விருப்பமாக உள்ளனர். அதன் காரணமாகவும், குடும்ப கட்டுப்பாடு கொள்கை காரணமாகவும் சீனாவின் கிராமப்புற பகுதிகளில், ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், அதற்கு ஏற்ப பெண்கள் எண்ணிக்கை உயராததால், திருமண வயதை எட்டிய பல ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்கவில்லை. எனவே, வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணக்கும் பழக்கம், சீன கிராமத்து ஆண்களிடம் உள்ளது.
அதுபோல், சீனாவின் ஹீபே மாகாணத்தின் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த சில ஆண்கள், வியட்நாம் நாட்டு இளம்பெண்கள் சிலரை திருமணம் செய்து கொண்டனர். அப்பெண்களை அறிமுகப்படுத்திய ஒரு வியட்நாம் பெண், அதற்காக ரூ.10 லட்சம் வாங்கிக்கொண்டார். திடீரென, அந்த மணமகள்களையும் காணவில்லை, அறிமுகப்படுத்தி வைத்த வியட்நாம் பெண்ணையும் காணவில்லை. இவ்விதம் ஓடிய நூற்றுக்கும் மேற்பட்ட மணமகள்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதை ஒரு தொழிலாக அந்த கும்பல் செய்யக்கூடும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
தமாசுக்காக 41 கொலைகள்
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ புறநகரில் 41 கொலைகளை செய்த ஒருவன், தமாசுக்காக அந்த கொலைகளை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளான். அவன் பெயர் சைல்சன் ஜோஸ் தாஸ் கிரகாஸ். 26 வயதான அவன் ஒரு ‘சைக்கோ’ என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
அவன் 9 ஆண்டுகளாக கொலை வெறியாட்டம் ஆடியுள்ளான். இந்த காலகட்டத்தில், 37 பெண்களையும், 3 ஆண்களையும், ஒரு இரண்டு வயது குழந்தையையும் கொலை செய்துள்ளான். குறிப்பிட்ட நபரை பின்தொடர்ந்து சென்று நோட்டமிட்டு, சமயம் பார்த்து கொலை செய்வது இவனது வாடிக்கை. வெள்ளை இனத்தவரை மட்டுமே கொலை செய்துள்ளான். எல்லா கொலைகளையும் தமாசுக்காக செய்ததாக அவன்
* காங்கோவின் தாங்கனிகா ஏரியில் சுமார் 500 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. இதில் 26 பயணிகள் உயிரிழந்த நிலையில், 230 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள பயணிகளின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
* ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகம் கோரி 2 மாதங்களுக்கும் மேலாக நடத்தி வந்த போராட்டம், கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை போலீசார் அகற்றி வருகிறார்கள். ஆனால் காஸ்வே பகுதியில் இருந்த கூடாரங்களில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற மறுத்து விட்டனர். எனவே முதியவர்கள் உள்பட ஏராளமான போராட்டக்காரர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
* சீனாவில் ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களை புரிந்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்த நாடு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஊழல்வாதிகள் வெளிநாடுகளிலும் சேர்த்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வசதியாக, கனடாவுடன் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது.
* சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் மசூதி அருகே பணி செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களை, துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் பிணைக்கைதியாக பிடித்து சென்றார். அவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்ட போது, அந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பாதுகாப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 2 பேர் காயமடைந்தனர். எனினும் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.