புதுவண்ணாரப்பேட்டையில் தாய் மற்றும் 7 வயது மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மாமியாரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய 2–வது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
2–வது திருமணம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகர், 61–வது பிளாக்கை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 28). இவருடைய கணவர் மாரிமுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது குணசுந்தரி, தனது 7 வயது மகன் மகேஷ்குமாருடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் நாகவள்ளியுடன் வசித்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜூ (32) என்பவருடன் குணசுந்தரிக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குணசுந்தரி, ராஜூவை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது குணசுந்தரி கர்ப்பமாக இருந்தார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
தாய்–மகன் வெட்டிக்கொலை
நேற்று அதிகாலை வழக்கம்போல கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ, வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி குணசுந்தரியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக இறந்தார்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத ராஜூ, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குணசுந்தரியின் மகன் மகேஷ்குமாரையும் வெட்டிக்கொன்றார். பின்னர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த மாமியார் நாகவள்ளியையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த குணசுந்தரி மற்றும் மகேஷ்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த நாகவள்ளியையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப தகராறில் கொலை
கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தாய்–மகன் கொலை செய்யப்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான குணசுந்தரியின் 2–வது கணவர் ராஜூவை வலைவீசி தேடி வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக இந்த இரட்டைக்கொலை நடந்ததா? அல்லது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை ராஜூ கொலை செய்தாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய கல்லூரி பேராசிரியை கொலை செய்யப்பட்டதாக கூறி போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை
கணவர் வீட்டில் கல்லூரி பேராசிரியை தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
கல்லூரி பேராசிரியை
சென்னை பெரம்பூர் கோபால் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 34). இவர், எல்.ஐ.சி. ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கீதா(30) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கீதா, அண்ணா சாலையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் லட்சுமணன்–கீதா தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் லட்சுமணனின் தங்கையின் குழந்தையிடம் பாசமாக இருந்தனர். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
தூக்கில் தொங்கினார்
இந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீதா, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பிறகு லட்சுமணன், மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த லட்சுமணன், வீட்டில் உள்ள அறையில் கீதா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கீதாவின் உறவினர்களுக்கும், செம்பியம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உறவினர்கள் முற்றுகை
இந்தநிலையில் நேற்று காலை கீதாவின் உறவினர்கள், குடும்ப தகராறில் கீதாவின் கணவர் லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கீதாவை கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி செம்பியம் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டியன் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக்கூறி அவர்களை சமரசம் செய்து வைத்தனர். அதன்பிறகு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.