ஸ்பிரால் புதிய கருத்தடை இளம் பெண்கள் நாட்டம்
டென்மார்க்கில் உள்ள இளம் பெண்களிடையே கருத்தடை மாத்திரைக்குப் பதிலாக பாவிக்கும் ஸ்பிரால் கூடுதல் கவனத்தைப் பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு 43.000 பேர் கருத்தடை மாத்திரைக்கு பதிலாக ஸ்பிரால் எனப்படும் சுருள்களை பாவித்துள்ளனர்.
இரத்தத்தில் கட்டி ஏற்படுத்தும் ஆபத்தற்ற, மாதவிடாய் இரத்தப் பெருக்கைக் குறைத்து கருத்தடையை ஏற்படுத்தும் இது பெண்களிடையே பிரபலம் பெற்று வருகிறது.
ஒரு தடவை பிள்ளை பெற்றவர்களுக்கே இது பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது சென்ற ஆண்டு ஸ்பிரால் என்ற சுருளை பாவித்த 40 வயதுக்குக் குறைந்த பெண்கள் தொகை 20.000 என்று கூறப்படுகிறது.
———————–
தற்போது நிலவிவரும் இரண்டுங்கெட்டான் காலநிலையானது பெருச்சாளிகள், மூஞ்சூறுகளை அதிகமாக உற்பத்தியாக்கியுள்ளதாக எக்ஸ்ரா பிலதற் கூறுகிறது.
அடுத்தடுத்த மாதங்களில் குளிர் உச்சக்கட்டத்தை அடைய, இந்த பெருச்சாளிகள் வீட்டுக்குள் நுழையும் ஆபத்து இருப்பதாகவும் காலநிலை, உயிரின அவதானிப்பாளர் கூறுகிறார்கள்.
———————–
டென்மார்க் பாடசாலைகளின் கற்பித்தல் நேரத்தை அதிகரித்துள்ள காரணத்தினால் பல மாணவர்கள் நேர நீடிப்பிற்கு தயாராக முடியாது நோய்வாய்ப்பட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதேபோல வேலை நேர அதிகரிப்பு, மாணவர்களுடன் மல்லுக்கட்ட வேண்டிய பாரத்தின் அதிகரிப்பு, பெற்றோருடனான பாரமான உரையாடல்கள் யாவும் ஆசிரிய பணியை சுமைக்கு மேல் சுமையாக்கியிருப்பதால் பல ஆசிரியர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் நோய்வாய்ப்படும் அளவு முன்னைய காலங்களுடன் ஒப்பிட்டால் அதிகமாக இருக்கிறது.
———————–
டென்மார்க்கில் இன்னொரு பொருளாதார மந்தம் மக்களின் கதவைத் தட்டப்போகிறதென பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொள்வனவுச்சக்தி வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்ட உயர்வு, கடன் அதிகரிப்பு ஆகிய மூன்று விடயங்கள் அடுத்த ஆண்டு மேலும் மோசமடையும் என்றுள்ளனர்.
———————–
ஐரோப்பிய ஒன்றியம் மறுபடியும் கொண்டுவரவுள்ள ரஸ்யாவுக்கு எதிரான தடைகளை டென்மார்க் ஆதரிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.
புதிய தடைகள் ரஸ்யாவுடனான உறவுகளை முற்றாக அறுத்துவிடக்கூடியதாக இருப்பதால் டென்மார்க் சிக்கல்களை தவிர்த்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெருவில் இளம் பெண் பலாத்காரம் எஸ்.எம்.எஸ் செய்திகள்
டென்மார்க் ஓகூஸ் நகரத்தின் மார்சில்ஸ் புலவாட் வளைவுப் பகுதியில் வைத்து 20 வயது இளம் பெண் ஒருவரை 40 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சனி அதிகாலை பெண்மணி அப்பகுதியால் நடந்து சென்றபோது பின்புறமாக வந்த 40 வயது நபர் பலாத்காரம் செய்துள்ளார், தாடி வைத்த, 180 செ.மீ உயரம் கொண்ட இந்த நபர் ஓகூஸ் நகரத்தில் பேசப்படும் டேனிஸ் மொழியை சரளமாகப் பேசுகிறார்.
கில்லாடியை தேடி போலீஸ் வலை விரித்துள்ளது.
————–
இனத்துவேஷம் முறுகி எழும்பியதால் உருவேறிய இரண்டு பேர் ஆசிய நாட்டை பின்னணியாகக் கொண்ட நபர் ஒருவருக்கு மண்டையில் பியர் போத்தலால் அடித்துள்ளனர்.
இந்த நூற்றாண்டிலும் மனிதப்பாகுபாட்டின் தவறை உணராது வாழ்ந்து வரும் இருவரும் 14 முதல் ஒரு மாதம் கம்பியெண்ண வேண்டும்.
————–
டென்மார்க் பாடசாலைகளின் நேரத்தை நீட்டிப்பு செய்து இன்று மகத்தான 100 வது நாளாகும், இன்று வெளியான கிறிஸ்லி டவ்பிலத பத்திரிகை நேர நீடிப்புக்கு மாணவர்கள் திருப்தி தெரிவிப்பதாக எழுதியுள்ளது.
அதேவேளை சில பாடங்களுக்கு வகுப்புக்களை இணைத்து மாணவர் தொகையை அதிகரிக்கலாம் என்ற யோசனையும் வைக்கப்பட்டுள்ளது, நேர நீடிப்பால் உண்டான பொருளாதார பழுவை குறைக்க இப்படி எண்ணுகிறார்கள்.
வாய்க்குள் உள்ள சுவீங்கத்தை இழுத்தாலும், குமைத்தாலும் அதன் அளவு ஒன்றுதான் என்பதை டேனிஸ் கல்வியியலாளர் நூறு நாட்களின் பின்னாவது புரிந்தார்களா என்ற ஆய்வை யார் நடத்துவாரோ..?
————–
நத்தார் பண்டிகைக் காலத்தில் வழங்கப்படும் ஏழைகளுக்கான உதவியை பெற விண்ணப்பித்தோர் தொகை என்றும் இல்லாதவாறு இந்த ஆண்டு இரட்டிப்பாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 4572 விண்ணப்பங்கள் வந்துள்ளன, விண்ணப்ப முடிவு திகதியான டிசம்பர் 22 ம் திகதிக்குள் இந்தத் தொகை 10.000 தொடும் என்று கூறுகிறார்கள்.
சென்ற ஆண்டு 5000 பேர் உதவி கோரியிருந்தார்கள் இத்தொகை இரட்டிப்பாக உயர்வதால் வறுமையில் உள்ளோர் தொகையும் இரட்டிப்பாகியிருக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது.
————–
டென்மார்க்கில் வீடில்லாது வாழும் 18 – 29 வயதுக்கு இடைப்பட்ட இளையோரின் பெற்றோர்களில் 57 வீதமானவர்கள் உயர் கல்வி கற்றவர்கள் என்று கணிப்புக்கள் கூறுகின்றன.
கல்வி கற்ற பெற்றோரே இந்தப் பிள்ளைகளை உருப்படுத்த வழிதெரியாது தடுமாறியுள்ளனர் என்பது ஆச்சரியம் தரும் விடயம் என்றும் ஆய்வு கூறுகிறது.
கடந்த சில தினங்களாக பேஸ்புக்கை தப்பான முறையில் பாவிப்போர் தொடர்பான சர்ச்சைகள் டென்மார்க் ஊடகங்களில் பரவலாக இடம் பெற்று வருகிறது.
சிம்பு – நயன்தாரா, அனிருத் – அன்ட்றியா போன்ற தமிழக நடிகர்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைப் போல இப்போது டென்மார்க்கில் பேஸ்புக்கை தப்பாக பயன்படுத்துவோர் தொகை வன்முறையாக பெருகி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
டேனிஸ் இளம் யுவதி ஒருவர் முதலாவது காதலரை விட்டு பிரிந்து புதிய காதலரை தேடிக்கொண்டவுடன் அவர் முதலாவது காதலருடன் இருந்த படுக்கையறை காணொளி பேஸ்புக்கில் வெளியாகியிருந்தது.
இதை மாஜி காதலர் தான் வெளியிடவில்லை என்று மறுத்திருந்தார், ஆனால் வேறொரு நாட்டில் இருந்து இது வெளியாகியுள்ளது, இத்தகைய ஆபாச தனிமனித ஈகத்தை சீர் குலைக்கும் காணொளிகள் பேஸ்புக்கில் வெளியாவது பலத்த சமுதாய பிளவுகளுக்கு காரணமாகிவிடுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும் பேஸ்புக்கில் தரவேற்றம் செய்யப்படும் காணொளிகளை அழிக்கும்படி கேட்டாலும் அதில் பேஸ்புக் நிர்வாகம் சரியாக தொழிற்படுவதில்லை, மேற்கண்ட யுவதியின் குடும்பத்தினர் பல கடிதங்களை எழுதி படாத பாடு பட்டுத்தான் இதை அழிக்க முடிந்தது.
ஆகவே பேஸ்புக் என்பது குரங்கின் கை பூமாலையா என்றும் அந்தத் தொலைக்காட்சித் தொடர் கேட்டிருந்தது.
இத்தகைய முறைப்பாடுகள் குறித்து பேஸ்புக் அமைப்பின் வடக்கு ஐரோப்பிய பிரதிநிதியான பிறீட்டா லோரன்ஸ் கருத்துரைக்கும்போது தாம் கிடைக்கும் முறைப்பாடுகள் அனைத்தையும் சீர் தூக்குவதாகவும், அதேவேளை அனைத்தையும் அழிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு செய்தியை வேறிடத்தில் இருந்து இணைக்கும் லிங்குகள், தப்பான புகைப்படங்கள் போன்றவற்றை தாம் அழிப்பதாகவும், மற்றப்படி பேஸ்புக்கை பாவிப்போர் தாமே அந்த ஊடகத்தை உணர்ந்து பாவிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அமெரிக்காவில் மூளை பிழைத்தவர்கள், மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள், குற்றச் செயல்களின் பின்னணியில் உள்ளவர்கள், குற்றச் செயல் புரியும் குடும்பப் பாரம்பரியம் கொண்டவர்களுக்கு துப்பாக்கிகளை சட்டப்படி விற்க முடியாது என்ற சட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.
எப்படி துப்பாக்கி பைத்தியங்களின் கைகளுக்கு போனால் ஆபத்தை ஏற்படுத்துமோ அது போலவே பேஸ்புக்கும் என்பதை பேஸ்புக்கின் வட ஐரோப்பிய பிரதிநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
துப்பாக்கி வாங்குவோர் அனைவரும் அவரவரே அதற்கு பொறுப்பு என்றால் அது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
பேஸ்புக் என்ற ஆயுதத்தை கையில் வைத்திருக்கும் ஒருவர் சரியான மனோ நிலையுடன் இருக்கிறாரா இல்லை போதையில் இருக்கிறாரா என்று தெரியாமலே பொத்தாம் பொதுவில் பார்க்கப்படுவது கவனிக்கத்தக்கது.
இதற்குள் பேஸ்புக் கை வைத்தால் பல வாடிக்கையாளரை இழக்க நேரிடும் என்பது தெரிந்ததே.
இத்தகைய தொல்லைகளால் டேனிஸ் அரசியல் தலைவர் ஒருவர் நேற்று முன்தினம் 14.000 அங்கத்தவர் கொண்ட தனது பேஸ்புக்கை ஒரேயடியாக மூடியது கவனிக்கத்தக்கது.
அதேவேளை மேக்கா ஒப்லோட் என்ற இணையப்பக்கம் அமெரிக்கர் அல்லாத இன்னொரு நாட்டவரிடம் இருந்தபோது அதை அமெரிக்கா எவ்வளவு தப்பான விடயமாகப் பார்த்து நடத்தியவரை கைது செய்தார்களோ அதுபோல தன்னிடம் இருக்கும் பேஸ்புக்கையும் பார்க்க மறுப்பது ஏன் என்பது விவாதத்திற்கு வரவேண்டிய விடயமாக இருக்கிறது.
ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி பெண்ணேஸ
டென்மார்க்கில் தற்போது ஆட்சியில் இருக்கும் சோசல்டெமக்கிரட்டி, றடிகல வென்ஸ்ர, மற்றும் வெளியில் இருந்து அரசை ஆதரிக்கும் எஸ்.எப், என்கில்ஸ் லிஸ்ற் கட்சிகளின் ஆதரவுடன் சிவப்பு நிற பட்ஜட்டை இன்று அறிமுகம் செய்துள்ளார்கள்.
இதை சிவப்பு பட்ஜட் என்று சொல்வதைவிட அடுத்த ஆண்டு நடக்கப்போகும் தேர்தலை குறிவைத்துத் தீட்டப்பட்டுள்ள தேர்தல் நாடக வரவு செலவுத்திட்டம் என்று நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
நடைமுறையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இதுவரை பணம் போதாது என்று கூறிவந்த சோசல் டெமக்கிரட்டி தலைமையிலான ஆட்சி இப்போது எங்கிருந்து பணத்தைத் தேடிக்கொண்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொன்ரன்ற் ஜெல்ப் என்னும் உதவிப்பணத்தை பெறுவோருக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுடைய கொடுப்பனவு உயர்த்தப்படும் என்று கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொன்ரன்ற் ஜெல்ப் பகுதிக்கு 1.5 பில்லியன் குறோணர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சுகாதார பகுதிக்கு 6.5 பில்லியன் குறோணர், முதியோர் பிள்ளைகள் பராமரிப்புக்கு ஒரு பில்லியன், சூழல் பாதுகாப்புக்கு ஒரு பில்லியன் என்று ஒதுக்கியிருப்பது வென்ஸ்ர கட்சியின் கொள்கைக்கு எதிரானதாகும்.
வருமானம் இல்லாத இடங்களில் முதலீடு செய்யக்கூடாது என்று வென்ஸ்ர கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது, அதற்கு ஏற்ப சோசல் டெமக்கிரட்டியும் ஆட்டம் போட்டு வந்தது, இப்போது முற்றிலும் அடிதலையான மாற்றங்களை அறிவித்துள்ளது.
தற்போது சிவப்பு நிறமாக உள்ள சோசல்டெமக்கிரட்டி பட்ஜட் தேர்தலில் வென்றால் நீலமாக மாறும் என்பதும் அதனுடைய கடந்தகால செயற்பாடுகளால் உணரப்பட்டுள்ளது.
எனவேதான் சோசல் டெமக்கிரட்டியை நம்பி மக்கள் வாக்களிப்பார்களா என்பது முக்கிய கேள்வியாகவே இருக்கிறது.
ஆகவே அரசு நிதி அறிக்கை மூலம் நாட்டு மக்கள் பிரச்சனை தீர்வதைவிட தமது நாற்காலிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கோணத்திலேயே நகர்ந்திருப்பதாக நோக்கர்கள் கூறுகிறார்கள்.
டென்மார்க்கில் வங்குரோத்தடைந்துள்ள ஓ.டபிள்யூ. பங்கர் ஓயில் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் முன்னர் எதிர்பார்த்ததைவிட பத்துமடங்கு மேலும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓயில் விலை இறங்குவது தெரிந்தும் ஓர் இலட்சம் லீட்டர் ஓயிலை 900 மில்லியன் குறோணருக்கு வாங்கியதே பாரிய குற்றம் என்று கூறப்படுகிறது, இந்த நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்தவர்கள் சட்ட உதவியை கோர இருப்பதால் சிக்கல் வலுத்துள்ளது.
—————
டென்மார்க் பாடசாலைகளில் லெக்சகபே எனப்படும் பாடசாலை முடிந்த பின் நடைபெறும் பாட உதவிகளுக்கு மாணவர் வருவதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, ஒவ்வொரு ஐந்து மாணவர்களுக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் லெக்ச கபேயை தவிர்க்கிறார்கள்.
—————
நத்தார் காலம் நெருங்குவதால் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கும், கிரைச சென்டர்களில் இருப்போருக்கும் நத்தார் உதவிகளை வழங்க டென்மார்க் மக்கள் உதவிப்பிரிவு முடிவு செய்துள்ளது.
பரடைசியா நகரத்தில் உள்ள தேவாலய உதவிப்பிரிவு இதற்கான நிதி திரட்டும் பணிகளில் இறங்கியுள்ளது.
—————
டென்மார்க்கில் உள்ள தொழில் நுட்பக்கல்லூரிகளில் கல்வி கற்று வேலையிட பயற்சிக்கு செல்ல வேண்டிய மாணவர்களுக்கு போதிய பயிற்சி இடங்கள் கிடைக்கவில்லை என்ற கவலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.
எத்தனையோ கட்டிட நிறுவனங்கள் இருந்தும் பயிற்சி மாணவர்களுக்கு இடம் வழங்க நிறுவனங்கள் தயங்கி வருகின்றன, இன்றைய ஐ.போன் – பேஸ்புக் தலைமுறையை கட்டி மாரடிக்க யார்தான் முன் வரப்போகிறான் என்பது கேள்வியாக இருக்கிறது.
—————
ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகமாக அகதிகள் வரும் நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியாகியிருக்கிறது, இதில் டென்மார்க்கிற்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
சுவீடன் முதலிடம் மோல்ரா இரண்டாவது, ஆஸ்திரியா மூன்றாவது, டென்மார்க் நாலாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரிய நாடுகளான பிரான்ஸ் – இத்தாலி போன்றன இந்தச் சுமையில் ஒரு பகுதியை சுமக்க வேண்டும் என்கிறது டென்மார்க்.
—————
ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஸ்யா பொருளாதார தடைகளை அமல் செய்து வருவதால் டென்மார்க்கின் பிரபல பியர் உற்பத்தி நிறுவனமான காள்ஸ்பியா ரஸ்யாவில் தொழிற்பட இயலாத நிலை உருவாகி வருகிறது.
காள்ஸ்பியாவின் கிழக்கு ஐரோப்பிய சந்தை வீழ்ச்சியால் கடந்த ஒன்பது மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஒரு பில்லியன் குறோணர்களாகும்.
டென்மார்க் போருக்கு போனது சரியா விசாரணை
November 11, 2014
anders
டென்மார்க்கில் ஆனர்ஸ் போ ராஸ்முசன் தலைமையில் இருந்த வென்ஸ்ர கட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கைகள் மறுபடியும் தோண்டப்படவுள்ளன.
2001 ம் ஆண்டு ஆப்கானுக்கு படை கொண்டு சென்றது, பின்னர் 2003 ம் ஆண்டு ஈராக்கிற்குள் படை கொண்டு சென்றது போன்ற நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் வென்ஸ்ர அவசரமாக முன்னெடுத்தது என்று பல தடவைகள் குற்றம் சுமத்தப்பட்டிருந்தன.
இப்போது கடந்த 1990ல் கொசோவாவுக்கு படை கொண்டு சென்றதில் இருந்து அனைத்து படையெடுப்பு நடவடிக்கைகளையும் சோசல் டெமக்கிரட்டி அரசு கிளற ஆரம்பித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக டேனிஸ் மக்கள் கட்சி போட்ட சட்டையை தான் போட்டுக்கொண்டு அபசுர நாடகமாடிவரும் வென்ஸ்ர கட்சிக்கு தேர்தலில் இந்த விவகாரம் சவாலாக அமையும் என்று அரசு கருதுகிறது.
அதேவேளை ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சுடன் இணைந்து படை நடவடிக்கைக்கு போனார் டேனிஸ் பிரதமர் என்றும் அதற்கு பிரதியுபகாரமாகவே அவருக்கு நேட்டோ செயலர் பதவியை ஜோர்ஜ் டபிள்யு புஸ் சிபாரிசு செய்தார் என்றும் முன்னரே செய்திகள் பரவியிருந்தன.
எனினும் இவற்றின் உண்மைகள் இன்னமும் சரியாக வெளியாகவில்லை, ஆகவே இதை அம்பலப்படுத்த சோசல் டெமக்கிரட்டி விரும்புவது இயற்கையானதே.
முன்னர் ஒரு தடவை இது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது அந்தக் கேள்விக்கு யாதொரு அடிப்படையும் கிடையாதென்று ஆனர்ஸ் போ ராஸ்முசன் அடியோடு நிராகரித்திருந்தார்.
அதேவேளை ஈராக் போர்க்களம் குறித்த இரகசிய தகவல்கள் நூல் வடிவில் வெளியாகி பல படைத்துறை உயர் அதிகாரிகள், பின் படைத்துறை அமைச்சர் போன்றோர் பதவி விலக வேண்டிய சூழலும் உருவானது.
ஆகவேதான் இதற்குள் ஏதோ ஓர் உண்மை வெளிவராமல் மறைந்து கிடப்பதாக வென்ஸ்ரவின் எதிரணி கருதுகிறது, சீழ் வெளியாகிவிட்டது முள் வெளியாகவில்லை என்பதே சிக்கலாகும்.
மேற்கண்ட செய்தி இன்றைய யூலன்ட் போஸ்டனில் தலைப்புச் செய்தியாக வெளியாகியிருக்கிறது.
tks.s.durai