தி.மு.க அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் சமீபகாலமாக கம்பி எண்ணுவதில்தான் மக்களுடைய கவனத்தைத் தொட்டுள்ளன.. இத்தகைய அவல நிலைக்குள்ளாகி இந்தக் கட்சிகள் பாதாளத்தில் வீழ்ச்சியடையக் காரணம் வட இந்தியர்ளுடைய வியூகமா இல்லை இவர்களுடைய தூரப்பார்வையற்ற அரசியலா என்பதை ஒப்பு நோக்குகிறது இந்தப் பார்வை.
மற்றவர்களால் அழிக்கப்படுகிறது என்று சொல்வதைவிட தமது தலையில் தாமே மண்ணள்ளிப் போடுவதில்தான் இந்தக் கட்சிகளின் தலைவர்களுடைய மதியூகம் இருக்கிறதா என்ற எண்ணத்தையே இன்றைய தமிழக அரசியல் ஏற்படுத்துகிறது.
குஜராத் கலவரங்களில் குற்றம் சுமத்தப்பட்டு, அமெரிக்காவிற்கு வீசா மறுக்கப்பட்ட மோடி பிரதமராக வலம் வருகிறார், ஆனால் தமிழக முதல்வர் சில கோடிகளுக்காக கம்பி எண்ணுகிறார் – காரணம் என்ன..?
அன்று மோடியை விட இந்த லேடியே ஆற்றல் மிக்கவர் என்று ஜெயலலிதா பேசினார் இன்று லேடியை சிறையில் போட்டு பதிலடி கொடுத்திருக்கிறது மோடி அரசு.
அடுத்து வரும் சில தினங்களுக்கு தசாரா பண்டிகைக்காக நீதிமன்று மூடப்படும் நிலையிருப்பதை தெரிந்து கடந்த 20ம் திகதி அளிக்க வேண்டிய தீர்ப்பை 27ம் திகதி மாற்றம் செய்து வழக்கை மாற்றியபோதே ஜெயலலிதாவுக்கான தீர்ப்பு சறுக்கிவிட்டது தெரிந்தது.
தீர்ப்பு இப்படித்தான் அமையும் என்று சுப்பிரமணிய சுவாமி சொல்லியிருப்பதும், இந்த விவகாரத்தில் தான் தலையிடமாட்டேன் என்று மோடி தன்னிடம் கூறியதாக இன்று அவர் கொடுத்திருக்கும் பேட்டியும், இந்த விவகாரம் எப்போதோ முடிவடைந்துவிட்டதையே காட்டுகிறது.
இதுவரை காலமும் தமிழீழ விடுதலைக்கு எதிராக இருந்த ஜெயலலிதா திடீரென யூரேண் எடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானங்களை போட்டபோதே அவருக்கு இந்த வழக்கின் முடிவு மணத்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை வேண்டும், வாக்கெடுப்பு மூலம் தமிழர்கள் பிரிந்து செல்ல வேண்டும், என்று அவர் போட்ட தடாலடித் தீர்மானங்கள் எல்லாமே தமிழக சட்டசபையின் அதிகாரத்திற்குரியதல்ல, இந்திய பாராளுமன்றம் செய்ய வேண்டிய கடமைகள்.
ஆனால் இந்திய நடுவண் அரசு செய்ய வேண்டிய வேலையை தானே செய்து நடுவண் அவர் பலத்த சங்கடத்தையும், நெருக்குவாரத்தையும் கொடுக்க ஆரம்பித்தார்.
வட இந்தியாவில் இருந்து வரக்கூடிய ஆபத்தில் இருந்து தப்பிப் பிழைக்க தமிழகத்தில் ஒரு தமிழ் தேசிய வடிவ முகமூடியை தயாரிக்க அவர் முயற்சித்தார்.
அப்படியொரு முகமூடியைச் செய்தவர் பின்னர் பெங்களுர் நீதிமன்றில் தனக்கு புலிகளால் ஆபத்து இருக்கிறதென்று கூறியபோதுதான் அவரை அறியாமலே அவர் அவருடைய முகமூடியைக் கழற்றியது தெரியவந்தது.
நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு அது சரியான உதாரணமாக அமைந்தது, உண்மையில் புலிகளை விட மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராகவே அவர் அதிக தீர்மானங்களைப் போட்டவர், அவர் தனது தீர்மானங்களை மனச்சாட்சிப்படி நேசித்திருந்தால் மகிந்த ராஜபக்ஷவால் ஆபத்து என்றே சொல்லியிருக்க வேண்டும், ஆனால் அவர் புலிகளை இழுத்தபோதுதான்ஸ அவர் போட்ட பிரேரணைகள் எல்லாமே ஒரே நொடியில் சப்பென்று போயின.
ஜெயலலிதா தான் இயற்றும் தமிழீழ ஆதரவுப் பிரேரணைகளை தடுத்து, தன்னை சமரசப்படுத்தும் நடுவண் அரசு என்று எதிர்பார்த்தார் – நடக்கவில்லை, பின்னர் தேர்தலில் தமிழீழ உணர்வுடன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார், அந்த ஆசனங்களை வைத்து மத்தியில் ஆட்சியமைப்பதில் பேரம் பேசலாம் என்று நினைத்தார் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றியால் அதுவும் தகர்ந்தது.
தேர்தல் முடிந்ததும் பொறுக்க முடியாத சிறீலங்கா அரசு அடுத்த தவறை இழைத்தது ஜெயலலிதா வெற்றி பெற்றாலும் நடுவண் அரசை கட்டுப்படுத்த இயலாத நிலை இருக்கிறது என்று மகிழ்ச்சி வெளியிட்டது.
இந்த இடத்தில்தான் நாம் ஒரு தடவை சுப்பிரமணிய சுவாமியை இழுத்து வரவேண்டும், எந்தவிதமான பதவியும் இல்லாமல் அவர் எதற்காக அடிக்கடி சிறீலங்கா போகிறார் அதுவும் நடுவண் அரசு பிரதிநிதியாக என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேட்டிருந்தார்.
அந்தக் கேள்வியை தமிழக திராவிட கட்சிகள் எதுவும் முதலாவதாகக் கேட்காததுதான் அவர்களுடைய தூரப்பார்வையின் போதாமையாக இருந்தது.
ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை வைத்த சூத்திரதாரியான சுப்பிரமணிய சுவாமி அந்த வழக்கின் முடிவு ஜெயலலிதாவுக்கு பாதகமாக அமையப்போகிறது, அதுதான் அவர் நடுவண் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் பிரேரணைகளை இயற்ற ஆரம்பித்துள்ளார், என்ற உண்மையை விளக்கவே கொழும்பிற்கு அனுப்பப்படுகிறார் என்ற கோணத்தில் தமிழகத்தில் யாரும் சிந்திக்கவில்லை.
அதேநேரம் தமிழக மீனவர்களின் படகுகளை பறியுங்கள் என்று அவர் சிங்கள அரசிடம் கூறியது இந்த விவகாரத்தை திசை திருப்பவே என்பதையும் பல தமிழகத்தின் கிணற்றுத்தவளை வாழ் தலைவர்கள் கண்டு பிடிக்கவில்லை.
இப்படியொரு யோசனையை ஒருவன் சொல்லியிருந்தால் அதை இரகசியமாக அல்லவா வைத்திருந்திருப்பான் அதை ஏன் அவன் வெளிப்படையாக சொல்ல வேண்டும், அடி முட்டாள் கூட அதை வெளியில் சொல்ல மாட்டானே..? என்று யாருமே யோசித்துப் பார்க்கவில்லை..
அந்தக் காற்றில் ஆகாயம் நோக்கி அறிக்கைப் பட்டத்தை உயரப் பறக்கவிட்டனர் தமிழக தலைவர்கள்.
இருப்பினும் தசாரா பண்டிகைக்காலத்தை குறி வைத்து தீர்ப்பு பின் போடப்பட்டதா இல்லை மகிந்த – மோடி அமெரிக்காவில் சந்திக்கும் நாளை குறிவைத்து போடப்பட்டதா என்பதும் முக்கிய கேள்வியாகவே இருக்கிறது.
ஜெயலலிதா சிறையில் போடப்படும் திகதி அமெரிக்காவில் இந்திய பிரதமர் சிங்கள அதிபர் மகிந்தவுடன் சந்திக்கும் நாளுக்கு அண்மித்தாக அமைந்திருந்ததும், தமிழகக் கட்சிகள் தடுத்தும் கேட்காமல் மோடி அமெரிக்காவில் வைத்து மகிந்த ராஜபக்ஷவை சந்தித்ததும் கூர்ந்து கவனிக்கத்தக்க விவகாரங்கள்.
இதற்கு ஆதாரமாக இன்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் தமிழிசை கொடுத்த விளக்கத்தை நோக்க வேண்டும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணவே மோடி மகிந்தவுடன் பேசினார் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபருக்கு எதிரான பிரேரணைகளை கொண்டுவந்த ஒருவர் சிறையில் கிடக்க, அதனால் ஆனந்தம் கொண்டாடும் அயல்நாட்டு தலைவரை சந்தித்து கைகுலுக்கிய மோடி ஜெயலலிதா சிறையிடப்பட்டதை மகிந்தவிடமும் சொல்லி அவரைச் சாந்தப்படுத்தியிருக்கக் கூடாது என்று ஏன் எண்ணக்கூடாது.. அதற்கு சம்பவங்கள் வழிகாட்டுகின்றன.
ஏனென்றால் ஜெயலலிதா விவகாரத்தில் தான் தலையிடமாட்டேன் என்று மோடி சொல்லியிருப்பதாக இன்று சுவாமி சொன்னது இந்த விவகாரத்தின் பின்னால் வழக்கு மட்டுமல்ல பாரிய அரசியலும் அருவமாகக் கலந்திருப்பதையே காட்டுகிறது.
இதை வலுப்படுத்த இன்னொரு உதாரணமும் இருக்கிறது :
சில ஆண்டுகளுக்கு முன்னர் ப.சிதம்பரம் இந்தியாவின் வடக்கு புளொக்கைவிட சவுத் புளொக்கே சிறந்தது என்றும் இந்தியாவை வடக்கு – தெற்கு என்று இரண்டாக பிரித்தால் சவுத்பிளக் உலகத்தரத்திற்கு முன்னேறிவிடும் என்று கூறியதாக சர்ச்சை எழுந்தது தெரிந்ததே.
ஆகவே சவுத் பிளக்கை சீரழிக்க நோர்த் பிளக் முயலும் என்ற அச்சம் நிலவியது, உண்மையில் தமிழகத்தைவிட வட இந்தியருக்கு சிறீலங்கா ஆபத்தானதல்ல என்பதை ப.சிதம்பரம் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை எளிதாகவே உருவாக்கிவிட்டது.
இப்போது 2 ஜி வழக்கில் ப.சிதம்பரத்தின் பெயரும் சேர்க்கப்பட வேண்டும் என்ற வழக்கையும் சுப்பிரமணிய சுவாமி கையில் எடுத்திருக்கிறார்.
இதையெல்லாம் தி.மு.க – அ.தி.மு.க கவனத்தில் எடுத்ததா என்றால் அதுதான் இல்லை இந்த கட்சிகள் இரண்டும் தூரத்தே சுனாமி வருவது தெரியாது ஈகோ பிரச்சனை தலைக்குள் ஏறி சண்டையிட ஆரம்பித்தன.
வாரீசு அரசியலால் அழிந்து கொண்டிருக்கிறது தி.மு.க – வாரீசு இல்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது அதிமுக. எம்.ஜி.ஆருக்கும் பிள்ளைகள் இல்லை ஜெயலலிதாவுக்கும் பிள்ளைகள் இல்லை.. இப்படி இரண்டு கட்சிகளிலும் வாரீசு பிரச்சனை இரு வேறு கோணங்களில் இருந்தாலும் உண்மையான உட்கட்சி ஜனநாயகம் இன்மை பெரிய ஒற்றுமையாக இருந்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயற்படாமல் இருந்த காரணத்தினால் திமுக படு தோல்வியடைந்தது, ஈழத் தமிழருக்கு ஆதரவாக பேசியதால் அதிமுக அமோக வெற்றி பெற்றது, ஆனால் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் இரண்டு கட்சிகளுக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது, இரண்டுமே ஈழத் தமிழருக்கான விடிவை ஆத்மார்த்தமாக நேசிக்கவில்லை.. இரண்டும் போடுவது நாடகமே.. இதில் இருவரும் பலமான ஒற்றுமைப்பட்டார்கள், இது இவர்களை வட இந்தியர்கள் மிக மிக மட்டமாக எடைபோட வழி வகுத்தது.
மத்திய அரசை பகைக்காமல், ஈழத்தமிழரை இலட்சக்கணக்கில் அழித்தாலும் அமைதி காத்து 2 ஜி விவகாரத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று திமுக தலைவர் கணக்குப் போட்டு வியூகம் வகுத்து வட இந்தியரை தாலாட்டினார்.
வட இந்திய அரசியல் தலைவர்களை சூடேற்றும் தீர்மானங்களை இயற்றி தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் இருந்து தப்ப முயன்றார் ஜெயலலிதா, இப்படி இருவரும் ஆதரிக்கும் கொள்கையையும், எதிர்க்கும் கொள்கையையும் மாற்றி மாற்றிப் போட்டாலும் இவர்கள் இருவரும் கம்பி எண்ண வேண்டியவர்கள் என்ற விடயத்தில் வட இந்தியர் தெளிவாக இருந்தார்கள்.
இவற்றை வகுத்தும் தொகுத்தும் பார்த்தால் நான்கு தசாப்தங்களாக ஆட்சியை பிடித்துள்ள திராவிடக் கட்சிகள் இரண்டுமே வட இந்திய கட்சிகளுக்கு ஒன்றுதான் என்பது தெரியவரும்.
இருவரையும் தகர்த்து தமது அதிகாரத்தைக் கொண்டுவரவே அவர்கள் விரும்புகிறார்கள், ஆகவேதான் ஈழத் தமிழர்களாகட்டும், தமிழக தமிழர்களாகட்டும் வட இந்திய கட்சிகளான காங்கிரஸ் – பா.ஜ.க இரண்டினதும் கொள்கைகள் ஒன்றாகவே இருக்கின்றன.
வன்னியில் தமிழர்கள் அழியும்போது அது புலிகள்தானே என்று அமைதி காத்த தி.மு.கவும், அதிமுகவும் அங்கு அழிவது தமிழன் என்பதைவிட தமது திராவிடமே அழிகிறது என்பதை பார்க்க மறந்தார்கள், அது உண்மையில் தமக்கான அழிவே என்பதை பார்ககும் ஆற்றலும் அவர்களிடம் இருக்கவில்லை.
இதற்குள் ஆசிரியர் தினத்திற்கு குரு உத்சவ் என்று வட இந்திய பெயர் சூட்டி ஆழம் பார்த்தது பா.ஜ.க அதற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை கண்டபோது திராவிட உணர்வுகளின் கூர்மை இன்னமும் மங்கிவிடவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டது.
ஈழத்தில் மரணக்குழிக்குள் வீழ்ந்த தமிழனின் அவலக்குரல் கேட்ட போது பதவிக்காக அடக்கி வாசித்த திராவிடக் கட்சிகள், சோனியா ஆட்சிக்கு துணைபோய் தமிழகத்தையும் அடக்கி வாசிக்க வைத்தன..
இப்போது ஜெயலலிதாவை உள்ளே போட்டதும் இரண்டு நாட்களில் தமிழகம் அடங்கிவிட்டது.. இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது.
இப்படியாக எல்லாத் தளங்களிலுமே அரசியல் சதுரங்கத்தில் திராவிடக் கட்சிகள் சறுக்கிவிட்டன, இனி கோட்டையில் ஒரு தாமரைப்பூ கொடியோ அல்லது வேறொரு வட இந்திய ஆதரவுக் கொடியோ பறப்பதற்கு பாரிய தடை இருக்காது என்பதற்கான பாதையை ஜெயலலிதாவும், மு.கருணாநிதியும் தமது தூரப்பார்வையற்ற ஆட்சிகளால் ஏற்படுத்தி வைத்துவிட்டனர்.
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று அன்று அடுக்கு மொழி மன்னன் அண்ணா முழங்கி ஆட்சிக்கு வந்தார் இன்று அவருடைய கட்சிகளே அதை யதார்த்தமாகியிருக்கின்றன..
சில மாதங்களுக்கு முன் திடீரென விழித்துக் கொண்டவர்போல அறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று மு.கருணாநிதி கேட்டிருந்தார்ஸ
திராவிடத்தின் மீதான எதிர்ப்பு சுனாமியை கட்டுப்படுத்த அவர் எடுத்த கடைசி முயற்சிதான் அது ஆனால் வெள்ளம் தலைக்கு மேல் ஓடிவிட்டதை காலதாமதமாகவே மு. கருணாநிதியும் – ஜெயலலிதாவும் கண்டு பிடித்துள்ளனர்.
சில வேளை அவர்கள் அண்ணாவுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்தாலும் கொடுக்கலாம், இப்படியான மதியூகமற்ற தம்பிகளை ஆட்சியில் இருத்திவிட்டு போயிருக்கிறார் என்ற காரணத்திற்காக.. கொடுக்கலாம்.
tks.s.durai