கோடை விடுமுறையை முடித்து டென்மார்க் பாடசாலைகள் நாளை திங்கள் ஆரம்பிக்க இருக்கின்றன.
இதுவரை இருந்த பாடசாலை நேரத்திலிருந்து மாறுபட்டு புதிய நேர ஒழுங்கில் பாடசாலைகள் ஆரம்பிக்கின்றன, இதனால் பெற்றோரிடையே குழப்பம் நிலவுகிறது.
புதிய கல்விச் சீர்திருத்தத்தின்படி :
0 – 3 ம் வகுப்புவரையுள்ள மாணவர்கள் பாடசாலையில் வாரத்திற்கு 30 மணி நேரம் இருந்தாக வேண்டும்.
04 – 06 ம் வகுப்பு மாணவர்கள் வாரத்திற்கு 33 மணி நேரம் வகுப்பில் இருக்க வேண்டும்.
07 – 09 ம் வகுப்பு மாணவர்கள் 35 மணி நேரம் வகுப்பில் இருக்க வேண்டும்.
இவ்விதம் பாடசாலை நேரம் அதிகரிக்கப்படுவது குறித்து பெற்றோரிடம் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 533 பெற்றோர் இந்தக் கருத்துக்கணிப்பில் இணைக்கப்பட்டார்கள், இவர்களில் 37 வீதம் பாடசாலை நேர நீடிப்பை வரவேற்றுள்ளனர், 27 வீதம் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
நீண்ட நேரம் கல்வி கற்பிப்பதால் பீஸா ஆய்வில் பின்தங்கிய டேனிஸ் மாணவர்கள் முன்னேறுவார்கள் என்று கருதப்படுகிறது.
இம்முறைமையானது இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் பயன்தரும் என்றும் கருதப்படுகிறது.
கல்வி கரும்பு போன்றது அது முதலில் உவர்க்கும் பின்னர் இனிக்கும்.. பிள்ளைகளுக்கு கல்வி இனிக்க ஆரம்பித்தால் 70 மணி நேரமும் அவர்கள் பாடசாலையில் இருப்பார்கள்.
இனிப்பு தேடலால் மலருவது, காலத்தை கூட்டினால் அதைத் தொட முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அதிகரிக்கும் அகதிகளால் டேனிஸ் பிரதமர் கவலை
டென்மார்க்கில் அதிகரித்துச் செல்லும் அகதிகள் தொகையை தாம் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் இந்த உயர்வு தமக்கு கவலை தருவதாகவும் டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை அகதிகள் தொகை இரட்டிப்பாக உயர்வு கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் அகதிகளாக வருவோர் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அந்த நாட்டில் பிரச்சனைகள் தளர்வு நிலைக்கு வர திருப்பி அனுப்பப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அகதிகளாக வருவோரை திருப்பி அனுப்புவதில் டென்மார்க்கிற்கு முன் அனுபவம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2011 ம் ஆண்டில் ஆரம்பித்த வடக்கு ஆபிரிக்க நாடுகளின் பிரச்சனை இப்போது உக்ரேன்வரை வியாபகம் கொண்டுள்ளது.
மதம் மாறவேண்டும் இல்லை அந்த இடத்திலேயே உயிர் துறக்க வேண்டும் என்றளவுக்கு பகுத்தறிவின் வீழ்ச்சிக்கு உலக அறிவு அதல பாதாளத்திற்குள் வீழ்ந்துள்ள காரணத்தால் அகதிகளாக வெளியேறுவோர் தொகை வன்முறையாக உயர்வு கண்டுள்ளது.
உலக நாகரிகம் வெட்கித்தலைகுனிய வேண்டியளவுக்கு இன்றைய உலக மத வெறி தலைவிரித்தாடி வருகிறது.
பிரதமர் கூறுவது போல இந்த நாடுகளில் அமைதி திரும்புமா என்பதற்கான அடையாளங்கள் எதையும் காணமுடியவில்லை.
சிரிய போர்க்களத்தில் 15 டேனிஸ் இளையோர் மரணம்
சிரியாவில் நடைபெறும் போர்க்களம் டென்மார்க்கில் உள்ள இஸ்லாமிய இளையோரை உவிந்திழுப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக சென்ற வாரம் கவலை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வாரம் வெளியாகியுள்ள செய்திகளின்படி இவர்களுடைய உயிர்களை உவிந்தெடுப்பதிலும் சிரிய போர்க்களம் முக்கியம் பெற ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றது.
இதுவரை டென்மார்க்கில் இருந்து சென்ற 15 இளையோர் சிரிய போர்க்களத்தில் பலியாகியுள்ளனர்.
இவர்களில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிற்றிக்கன் எழுதியுள்ளது, இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் அனைவரும் சரளமாக டேனிஸ் மொழி கதைக்கக்கூடிய இணைவாக்கமடைந்த இளையோராகும்.
டேனிஸ் பாடசாலைகளில் கல்வி கற்ற இவர்கள், டேனிஸ் சமுதாய வாழ்க்கைக்குள் செல்லாது சிரிய போர்க்களம் செல்லுமளவுக்கு டேனிஸ் இணைவாக்கக் கல்வியில் ஓட்டை இருக்கிறதா என்ற கேள்வியையும் இந்த மரணங்கள் ஏற்படுத்தியுள்ளன.
இவ்விதம் போர்க்களம் செல்வோரில் அநேகர் 35 வயதுக்குக் குறைந்தவர்களாவர், இதுவரை 100 பேர் சிரிய போர்க்களம் சென்றுள்ளார்கள்.
எவ்வளவுதான் கல்வி போதனை செய்தாலும் மதம், இனம், மொழி, சாதி போன்ற விடயங்களை ஆதாரமாக வைத்து மூளைச்சலவை செய்தால் கற்ற கல்வி தோல்வியடையும் என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணமாக இருப்பர்.
உற்ற போரில் கற்றது மறப்பாய் என்று பாரதப்போரில் பரசுராமன் கர்ணனுக்கு சாபமிட்டது இப்போது பல இளையோருக்கு பெரிதும் பொருந்தி வருகிறது.
tks.s.durai