18 மணித்தியாலத்துக்குள் சிக்கிய அண்ணன் தம்பியின் கொள்ளை!
அண்மைக்காலமாக இலங்கையில் முக மூடிக் கொள்ளைகள் அதிகரித்துள்ளதை அவ தானிக்க முடிகின்றது. குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் மேல் மாகாணத்திலுமே இவ்வாறான கொள்ளைகள் அடிக்கடி நிகழ்வதை அவதானிக்க முடிகின்றது.
இந்த கொள்ளைகள் வங்கிகள், நிதி நிறு வனங்கள் மற்றும் நாணய மாற்று நிலையங் களை இலக்காக கொண்டுள்ளதையும் நாம் அவதானிக்க முடிகின்றது.இந்த கொள்ளைகளுக்கு முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் பரவலாக பயன்படுத்தப்பட்டுள் ளதுடன் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை வெளிப்படையான விடயங்களே.
இந்த வரிசையில் இந்த வாரம் இரு கொள்ளைகள் தலை நகரை அண்டிய அல்லது மேல் மாகாணத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் பதிவானது எனலாம். முதல் சம்பவம் ஞாயிறன்று நள்ளிரவு வேளையில் சீதுவை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பதிவாகியிருந்தது.
24 மணி நேரம் இயங்கும் கொமர்ஷல் வங்கியின் விஷேட கிளைக்கு அன்றைய தினம் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து வந்த ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் முகாமையாளருக்கு கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்தி விட்டு சுமார் 14 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டு சென்றிருந்தனர்.
இந்த சம்பவம் மறக்கப்படும் முன்னரேயே கடந்த செவ்வாயன்று களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேசத்தில் மத்துகம – அகலவத்தை பிரதான பாதையில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்ருக்கு எடுத்து வரப்பட்ட 50 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டது.
கொழும்பிலிருந்து குறித்த லீஸிங் நிறுவனமான எல்.ஓ.எல்.சீ.இற்கு எடுத்துவரப்பட்டதாக கூறப்படும் இந்த பணத்தொகை மத்துகம – அகலவத்தை பிரதான பாதையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்திற்கு முன்பாக வைத்தே மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட்டுடன் வந்த இருவர் கொண்ட கொள்ளைக் குழுவால் கொள்ளையிடப்பட்டதாக மத்துகம பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான கொள்ளைகள் தொடர்பில் இச்சம்பவத்தால் பொலிஸாருக்கு பாரிய சவால் ஏற்பட்டது எனலாம். ஏனெனில் இந்த சம்பவத்தை தொடர்ந்து முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்கள் தொடர்பிலான சட்டத்தை மீள அமுல் படுத்துவது குறித்து ஆராயும் அளவுக்கு விடயம் பாரதூரமானது.
எவ்வாறாயினும் இந்த கொள்ளை தொடர்பிலான அனைத்து மர்மங்களையும் நீக்கி சந்தேக நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு வெறும் 18 மணித்தியாலங்களே தேவைப்பட்டது.
ளாடிறஐஅயபநஐnளுவடிசல6களுத்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டீ சில்வா மற்றும் மத்துகம உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பியரத்ன ஆகியோரின் பூரண கட்டுப்பாட்டில் மத்துகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான மூன்று விஷேட பொலிஸ் குழுக்கள் கொள்ளையர்களைத் தேடி வலை விரித்தன.
இந்த கொள்ளையுடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை தற்போதும் தொடர்ந்து வருகின்றனர். கொள்ளையிடப்பட்டதாக முறையிடப்பட்ட 50 இலட்சம் ரூபா பணத்தில் இதுவரை 47.5 இலட்சம் ரூபா வரையிலான பணத்தொகை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
குறிப்பாக இந்த கொள்ளை தொடர்பில் விசாரணைகளைத் தொடர்ந்த மூன்று பொலிஸ் குழுவுக்கும் பொதுமக்களின் உதவியானது உச்ச அளவில் கிடைத்திருந்தது. அதாவது கொள்ளையர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையிடப்பட்ட இடத்துக்கு எவ்வாறு வந்தது, எப்படி அங்கிருந்து சென்றது மற்றும் அது சென்ற பாதை குறித்து முழுமையான தகவல்களை பொதுமக்களிடமிருந்து பொலிஸாரினால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
பொது மக்களின் தகவல்களுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை பொரல ஸ்கமுவ பகுதி வீடொன்றில் வைத்து கைது செய்தனர்.
20 வயதுடைய பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த சஜான் சுசான் பெரேரா மற்றும் 21 வயதான ஹங்வெல்லை பகுதியை சேர்ந்த துமிந்து சங்சல ஆகியோரையே பொலிஸார் கைது செய்தனர். பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள சுசான் பெரேராவின் வீட்டில் இவ்விரு சந்தேக நபர்களும் உறங்கிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற பொலிஸ் குழுவினரே அவர்களைக் கைது செய்தனர். இவ்விரு இளைஞர்களையும் கைது செய்ததை அடுத்து இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பல தகவல்களை பொலிஸாரால் வெளிப்படுத்த முடிந்தது.
பொலிஸாரின் விசாரணைகளில் செவ்வாயன்று காலையில் முக மூடி அணிந்து அல்லது முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து பணத்தொகையினைக் கொள்ளையிடவந்தவர்கள் இவர்கள் இருவருமே என உறுதிப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த கொள்ளையின் பின்னணியில் பாரிய திட்டமிட்ட குழுவொன்று இருக்கவேண்டும் என சந்தேகித்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
ஏனெனில் கொள்ளையிடப்பட்ட பணத்தின் அளவு, கொள்ளையிடப்பட்ட நேரம் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு பார்த்த பொலிஸார் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியதுடன் திட்டமிட்ட கொள்ளை என்ற ரீதியிலும் விசாரணைகளைத் தொடர்ந்தனர்.
இதன் பலனாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உறங்கிக்கொண்டிருந்த அவர்களில் ஒருவரின் வீட்டிலிருந்து 2 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பணத்தினை பொலிஸார் கைப்பற்றினர். இது பொலிஸாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் 50 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட நிலையில் 2 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவே சந்தேக நபர்களிடமிருந்து மீட்கக் கூடியதாக இருந்தது.
அதிர்ச்சியடைத்த பொலிஸார் விசாரணையின் கோணத்தை மாற்றினர். களுத்துறை பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டீ சில்வா மத்துகம உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பியரத்ன ஆகியோரின் பூரண கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் பேரில் நீண்ட நேரம் சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன் போதே இக்கொள்ளை தொடர்பான முக்கிய தகவல் பொலிஸாருக்கு கிடைத்தது. அதாவது, பொரலஸ்கமுவை பகுதியை சேர்ந்த மர வேலைப்பாடுகளை செய்யும் நபர் ஒருவர் ஊடாகவே அந்த நிதி நிறுவனத்துக்கு பணம் எடுத்து வருவது தொடர்பிலான அனைத்து தகவல்களும் அல்லது கொள்ளை தொடர்பான அடிப்படை தகவல்கள் அனைத்தும் இந்த இரு இளைஞர்களுக்கும் கிடைத்துள்ளமை தொடர்பான தகவலே அதுவாகும்.
அந்த நபர் தொடர்பிலும் பொலிஸார் விசார ணைகளை முடுக்கிவிட்டனர். குறித்த திகதி யில் குறித்த நேரத்தில் அந்த நிறுவனத்துக்கு பணம் எடுத்து வரப்படும் தகவலும் அந்த நேரத்தில் கொள்ளையிடலாம் என்ற மேலதிக ஆலோசனையும் அந்த மர வேலைப்பாடுகள் செய்யும் நபர் ஊடாகவே குறித்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை பொலிஸாருக்கு தெரியவந்தது.
இதனைவிட மிக முக்கியமான தகவல் ஒன்று பொலிஸாருக்கு இதன் போது கிடைத்தது. அதாவது இந்த மர வேலைப் பாடுகள் செய்யும் நபர், குறித்த நிதி நிறுவனத்துக்கு பணத்தினை எடுத்துவரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் பிரதானமானவருக்கு சகோதர முறை உறவு என்பதே அந்த தகவலாகும். அதாவது குறித்த பாதுகாப்பு அதிகாரியும், மர வேலைப்பாடுகளை செய்யும் நபரும் அண்ணனும் தம்பியும் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பணத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் அதிகாரியான தம்பியினாலேயே அண்ணனான மர வேலைப் பாடுகள் செய்பவருக்கு கொள்ளைக்கு தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை உறுதியானது.
அத்துடன் சம்பவ தினம் கொழும்பிலிருந்து மத்துகம பகுதியில் உள்ள அந்த நிதி நிறுவனத்துக்கு பணம் கொண்டுவரப்பட்ட போது பணம் கொண்டுவரப்பட்ட வேனின் பின்னால் ‘ டிமோ பட்டா’ ரக லொறியொன்றில் அண்ணனான மர வேலைப் பாடுகள் செய்யும் நபர் பயணித்துள்ளமையும் கொள்ளையின் போது வேனுக்கு அருகில் அவர் டிமோ பட்டா லொறியில் இருந்துள்ளமையும் உறுதியானது.
அத்துடன் கொழும்பிலிருந்து மத்துகம பகுதிக்கு பணத்தினை கொண்டுவருவதற்குள் அண்ணனும் தம்பியும் சுமார் 38 தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.
இதன் போது கொழும்பிலிருந்து அந்த நிதி நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பணத்தொகை அடங்கிய பை ஒன்றுடன் வேனில் வந்த பாதுகாப்பு அதிகாரி (தம்பி) இறங்கி நிறுவனத்துக்கு செல்ல முற்படுகையில் மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைக்கும் வண்ணம் தலைக்கவசம் அணிந்து வந்த குறித்த இளஞர்கள் இருவரும் அந்த பையை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பிலான சந்தேகங்கள் தீரவில்லை. ஏனெனில் 50 இலட்சம் ரூபா கொழும்பிலிருந்து கொண்டுசெல்லப்பட்டுள்ளதை ஏற்கனவே உறுதி செய்த பொலிஸ் அதிகாரிகள் கொள்ளையடித்தவர்கள் என கூறப்பட்ட இளைஞர்களிடமிருந்து சுமார் 2 இலட்சத்துக்கு சற்று அதிகமான பணத்தொகையே மீட்டிருந்தனர். அப்படியானால் எஞ்சிய பணத்தொகை எங்கே என்பதே பொலிஸாரின் கேள்வியாக இருந்தது.
இதனிடையே கொழும்பிலிருந்து பணத்தினை கொண்டு சென்ற பாதுகாப்பு ஊழியர்கள் இருவர், வேனின் சாரதி உள்ளிட்ட சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
தொடர்ந்தும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பொலிஸாரின் சந்தேகங்களுக்கான விடை கிடைத்தது. கொழும்பிலிருந்து 50 இலட்சம் ரூபா கொண்டுவந்த போதும் வேனிலிருந்து இறங்கும் போது குறித்த பாதுகாப்பு அதிகாரி 10 இலட்சம் ரூபா அடங்கிய பை ஒன்றுடனேயே இருந்துள்ளார். அந்த 10 இலட்சம் ரூபா அடங்கிய பையையே மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்களான இளஞர்கள் இருவரும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
மிகுதி 40 இலட்சம் ரூபாவினையும் வேனில் ஆசனம் ஒன்றின் கீழ் குறித்த நபர் மறைத்து வைத்துள்ளார். விஷேட பொலிஸ் குழு சம்பவம் இடம்பெற்ற மறு நாளான புதனன்று அந்த வேனை மீண்டும் சோதனை செய்த போது40 இலட்சம் ரூபா பணமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
அத்துடன் இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கொள்ளையிட்டு சென்ற 10 இலட்சம் ரூபா பணத்தொகையில் 5 இலட்சம் ரூபா பொரலஸ்கமுவையில் உள்ள இளைஞர் ஒருவரின் வீட்டில் வைத்து இந்த திட்டத்தை வகுத்ததாக கூறப்படும் பாதுகாப்பு அதிகாரியின் அண்ணனான மர வேலைப் பாடுகள் செய்யும் நபருக்கு வழங்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பணத்தினை எடுத்துச் சென்ற வேன் ஆகியவற்றுடன் ஆறு சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மர வேலைப் பாடுகள் செய்யும் நபரை தேடி வலை விரித்தனர்.
அதன் படி அந்த நபரையும் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து விஷேட பொலிஸ் குழு அவரது டிமோ பட்டா லொறியுடன் கைது செய்திருந்த நிலையில் அவரிடம் இருந்தும் சுமர் 5 இலட்சம் ரூபா வரையிலான பணத்தொகையினை மீட்டனர்.
இந் நிலையில் குறித்த கொள்ளையுடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்திருந்த பொலிஸார் கொள்ளையிடப்பட்ட பணத்தொகையின் 47 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை கைப்பற்றியுள்ளனர்.
எஞ்சிய பணத்தொகை தொடர்பிலான விசாரணைகள் தொடர்வதுடன் சந்தேக நபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
800734215வாநைக1பொலிஸாரின் விசாரணைகளில் எல்.ஓ.எல்.சீ.என்ற குறித்த நிதி நிருவனத்தின் பாதுகாப்பு பணி தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டிருந்துள்ளதுடன் பணத்தினை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அதிகாரி (இக்கொள்ளையின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர் ) 6 வருடங்களாக பாதுகாப்புப் பணியில் இருப்பவர் எனவும் தெரியவந்துள்ளது.
கலேவல பிரதேசத்தை சேர்ந்த இவர் இன்னிகே ராஜபக் ஷ என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவர் 27 வயதான நபர் என்பதும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
கடந்த இரு மாதங்களில் மட்டும் மேல் மாகாணத்துக்குள் முகமூடி அணிந்த கொள்ளையர்களால் அல்லது முகத்தை முழுமையாக மூடும் தலைக் கவசம் அணிந்தவர்களால் 9 கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நீர்கொழும்பு. பாதுக்கை,கொஹுவலை,மாலபே, கிருளப்பனை, மத்துகம, நுகேகொடை மற்றும் சீதுவை ஆகிய பகுதிகளில் இதற்கு முன்னர் கடந்த இரு மாதங்களுக்குள் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இதன்போது கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி பயமுறுத்தியிருந்ததுடன் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தினையும் அணிந்திருந்தனர். எவ்வாறாயினும் இந்த சம்பவங்களின் போது குறித்த நிறுவனங்களுக்கு பாதுகாப்பளித்த எந்தவொரு அதிகாரியும் தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தி இருக்கவில்லை.
எனினும் பாதுகாப்பு தொடர்பில் அந்த நிறுவனங்களின் அசமந்த போக்கும் இக்கொள்ளையர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டதாக கடந்த இரு மாதங்களாக இடம்பெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பிடுகிறார்.
அத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கப்பட்டுள்ள நிலையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இவ்வாறான சம்பவங்களின் போது அவர்கள் அதனை பயன்படுத்த வேண்டும் எனவும் அது ஒரு சீருடையாக அலங்கரிக்க வழங்கப்பட்டதல்ல எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எது எப்படியோ, நாட்டில் அண்மைக்காலமாக கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்து விட்டன. குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அவற்றை கட்டுப்படுத்த சமூக மட்டத்திலான நடவடிக்கைகளும் அவசியமானதாகும். இது தொடர்பில் பொது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.அப்போது தான் குற்றமற்ற அமைதியான பாதுகாப்பான சூழல் ஒன்றை உருவாக்க முடியும்.
மத்துகம சம்பவத்தை பொறுத்தவரை கொள்ளையர்களை வெறும் 18 மணிநேரத்துக்குள் பொலிஸார் கைது செய்தனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். இவ்வாறே பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் போது குற்றவாளிகளை இலகுவில் கைது செய்ய முடியுமாவதோடு குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்த முடியும்.
தொடரும் வங்கி, நிதி நிறுவன கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொலிஸார் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எம்மாலான உதவிகளையும் வழங்கும் போது மட்டுமே அவற்றை முற்றாக ஒழிக்க முடியும்.
-எம்.எப்.எம்.பஸீர்-