டெல்லியில் 51 வயது டென்மார்க் நாட்டை சேர்ந்த பெண் கற்பழிப்பு: 15 பேர் கைது
16 Jan,2014
டென்மார்க் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் இந்தியாவை கண்டு களிப்பதற்காக புது டெல்லி வந்தார். பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர், நேற்றிரவு கன்னவ்ட் பேலஸ் பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பினார்.
ஓட்டலுக்கு போகும் வழியை மறந்துவிட்ட அந்த பெண், திக்கு திசை தெரியாமல் தடுமாறினார். புது டெல்லி ரெயில் நிலையம் அருகே நின்றிருந்த சிலரிடம் ஓட்டலின் பெயரை கூறி எந்த வழியாக போக வேண்டும்? என்று விசாரித்தார்.
தாங்களே அழைத்து சென்று விடுவதாக தெரிவித்த அந்த கும்பல், அவரை அழைத்து சென்றது. இருட்டான ஒரு வீதி வழியாக சென்றபோது கத்தியை காட்டி தனிமையான ஓரிடத்துக்கு அழைத்து சென்றது.
7 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட அந்த சுற்றுலா பயணி, இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
தனது கைப்பையையும் அவர்கள் பறித்து கொண்டு ஓடி விட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுவரை 15 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள டென்மார்க் நாட்டின் தூதரத்திலும் இந்த கொடிய அனுபவம் தொடர்பாக புகார் அளித்து உடனடியாக நாடு திரும்ப தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.