மகாராணியின் புத்தாண்டு உரை முன்னரே வெளியானது
டேனிஸ் மகாராணியார் வருடந்தோறும் நாட்டு மக்களுக்காக புத்தாண்டு உரையை வழங்குவது வழமையாக உள்ளது.
இன்று மாலை 18.15க்கு வெளியாகவிருந்த அவருடைய உரையை டேனிஸ் ஊடகங்கள் ஆவலுடன் காத்திருக்க, கிறீன்ட்லாந்தில் அவருடைய உரை ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது.
மகாராணியரின் புத்தாண்டு உரை கிறீன்ட்லாந்து மொழியில் மாற்றம் செய்யப்பட்டு அங்குள்ள பத்திரிகை ஒன்றிலும், தொலைக்காட்சியிலும் வெளியாகியுள்ளது.
இதனால் ஊடகங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன :
டென்மார்க்கில் வெளியாகாமல் கிறீன்ட்லாந்தில் வெளியாகியது எப்படியென்ற கேள்விக்கு அரண்மனை வட்டாரங்கள் எங்கோ ஓரிடத்தில் தவறு நடந்துவிட்டதாக தெரிவித்துள்ளன.
டேனிஸ் ஊடகங்களுக்கு இருக்கும் விதிமுறையே கிறீன்ட்லாந்து ஊடகங்களுக்கும் பொருந்துமாக இருந்தாலும் தவறு நடந்துவிட்டமைக்காக வருத்தம் தெரிவித்துள்ளன அரண்மனை வட்டாரங்கள்.
கடவுள்தான் இனி டென்மார்க்கைக் காப்பாற்ற வேண்டுமென்ற மகாராணியாரின் டேனிஸ் உரை 18.15 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இதற்கிடையில் வரும் 2014ம் ஆண்டு டென்மார்க்கில் தொழில் இழந்திருப்போருக்கு தொழில் கிடைக்கக் கூடிய ஆண்டாக மலரும் என்று 32 நாடுகளை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
வேலையற்ற பலர் வேலை வாய்ப்பு பெறவும், இன்றுள்ள கடுமையான வாழ்வில் கணிசமான முன்னேற்றம் ஏற்படுமென்றும் கூறியுள்ளது.
இந்த ஆய்வுக்குள்ளான நாடுகளில் இந்தியா, சீனாவும் இடம் பெறுகின்றன, இந்த நாடுகளிலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல கருத்துக்கணிப்பில் பின்தங்கி ஏறத்தாழ அரசியல் அரங்கில் இருந்து முற்றாகவே மறைந்துவிடுமளவுக்கு பின்தங்கி 2 வீதமான ஆதரவை மட்டுமே பெற்றுள்ள எஸ்.எப். கட்சி கணிசமாக முன்னேறும் என்று இன்னொரு ஆய்வு கூறியது.
டென்மார்க்கில் பிறந்தும் குடியுரிமை எடுக்க முடியவில்லை
டென்மார்க்கில் பிறந்தாலும், வேறு சிலர் இங்கேயே சிறு வயது முதலே வளர்ந்தாலும் பல வியட்நாமிய இளையோருக்குக் டேனிஸ் குடியுரிமை பெறுவதில் பலத்த சட்டச் சிக்கல் ஏற்படுவதாக இன்பர்மேசன் பத்திரிகை தலைப்புச் செய்தி எழுதியுள்ளது.
இவர்களில் பலர் வியட்நாமில் இருந்து படகுகளில் வெளியேறிய குடும்பப் பின்னணி உடையவர்கள், உண்மையான ஆவணங்கள் இல்லாதவர்கள்.
மேலும் இப்பிள்ளைகளில் பலர் இங்கேயே பிறந்தவர்கள் டேனிஸ் மொழியை பேசி வாழ்பவர்கள்.
குடியுரிமை பெறுவதற்கான விசேட பரீட்சைக்கு சென்று சித்தியடைந்தாலும் கூட இவர்களுடைய பழைய குடியுரிமையை ஊர்ஜிதம் செய்யக்கூடிய ஆவணங்களை தமது பழைய தாய்நாடான வியட்நாமில் இருந்து பெற முடியாத காரணத்தால் குடியுரிமையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
வியட்நாமிய தூதராலயத்தில் இருந்து இதற்கான ஆவணங்களை பெற போராடியும் இயலவில்லை என்கிறார்கள் பலர்.
21 வயதுடைய கட்டிடக்கலையைப் படிக்கும் மாணவர் ஒருவர் தனது சகமாணவர்களுடன் கற்கைக்கான சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்ல இருந்தும், கடவுச்சீட்டு இன்மையால் பயணிக்க இயலவில்லை என்று தெரிவிக்கிறார்.
ஒருவர் டென்மார்க்கிற்கு வெளியில் பிறந்திருந்தால் அவருடைய பிறப்பு பிறந்த இடத்தில் பதியப்பட்டதற்கான ஆவணத்தை குடியுரிமை பெறும்போது சமர்ப்பிக்க வேண்டும்.
பெற்றோரின் குடியுரிமையையும் ஊர்ஜிதம் செய்ய வேண்டும், அதற்கான ஆவணம் இல்லாவிட்டால் குடியுரிமை இழுபடும்.
ஆனால் வியட்நாம் போன்ற நாடுகளில் சிறீலங்கா போல மக்கள் குழுவை பாரபட்சம் பார்க்கும் கொடும் போக்கு இன்னமும் இருப்பதால் நாடற்ற எல்லோரும் அங்கிருந்து தகவல்களைப் பெற இயலாது.
1961ம் ஆண்டு ஐ.நா சட்டத்தின் பிரகாரம் ஒருவர் நாடற்ற பிரஜையாக இந்த உலகில் வாழ அனுமதிக்கப்படக்கூடாது என்று குறிப்பிடுகிறது, ஆகவே டென்மார்க்கில் வாழும் இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது ஒரு சட்டச் சிக்கல் டிலிமா என்ற இயங்க முடியாத நிலையாக இருப்பதால் உடனடியாக விசேட சட்டத்தின் பிரகாரம் ஏதாவது ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வரலாறு தெரிந்த ஈழத் தமிழர்களின் மண்டையைக் குடையவும் வழியிருக்கிறது.
ஐ.நாவின் 1961ம் ஆண்டு சட்டத்தை ஆதாரமாக வைத்து மலையக மக்களுக்கான குடியுரிமையை மலையகத் தலைவர்கள் சரியான முறையில் பெறவில்லை, இதுபோல இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளும் குடியுரிமை பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மலையக மக்களின் குடியுரிமை பறிப்பிற்கு துணைபோன சில யாழ்ப்பாணத்து இராணி அப்பக்காத்துக்கள் இந்தச் சட்டம் தெரியாத பேதைகளாக தமிழருக்கு தலைமை தாங்கியிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
இவர்களுக்கெல்லாம் தேர்தல் மேடையில் இரத்தப் பொட்டிட்ட தமிழர்கள் தங்கள் விரல்களை ஒரு தடவை தொட்டுப்பார்த்தால் தமது அறியாமையை உணர முடியும்.
மேலும் டென்மார்க்கில் குடியுரிமை பெற இயலாத நிலையில் உள்ள தமிழர்கள் சிறீலங்கா கடவுச்சீட்டு எடுக்க வேண்டும் இல்லையேல் திருப்பி அனுப்பப்படுவர் என்று அந்த நாட்டு அரசு கூறுவதும் இங்கு கவனிக்கத்தக்கது.
அன்று மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்த சிங்கள அரசு இன்று புலம் பெயர் தமிழரை சிறீலங்காவின் பாஸ்போட்டை சுமக்க வேண்டுமென வலியுறுத்துவது இரட்டை முரண் நிலை என்பதும், இனக்குரோத அடையாளம் என்பதும் கவனிக்கத்தக்கது.
மைக்கேல் ஷூமேக்கர் கோமா நிலையில்
உலகக் கார் பந்தய சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவரான, ஜெர்மன் வீரர், மைக்கேல் ஷுமேக்கர், பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் தலையில் அடிபட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பிரான்ஸின் தென் கிழக்கு நகரான கிரனோபிள் என்ற இடத்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது அவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார், ஆனாலும் அவர் அப்போது ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில், கோமாவில் போன நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மைக்கேல் ஷூமேக்கரின் மிக நெருங்கிய நண்பரும், பிரான்ஸின் முன்னோடி விபத்து சிகிச்சை வல்லுநருமான மருத்துவர்,பேராசிரியர் ஜெரார்ட் செய்லானும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
44 வயதான ஷுமேக்கர் ஏழு முறை பார்முலா-1 கார் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.
வருகிற வெள்ளிக்கிழமை தனது 45வது பிறந்த நாள் வருவதால் அதைக் கொண்டாடுவதற்காக வந்திருந்தார் ஷூமேக்கர். வந்த இடத்தில் விபத்துக்குள்ளாகி விட்டார்.
அவர் 2012ம் ஆண்டில் , இரண்டாவது முறையாக, பார்முலா-1 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக
அறிவித்தார்.
அவருடைய 19 ஆண்டு கார் பந்தய விளையாட்டு வாழ்க்கையில், ஷூமேக்கர் 91 பந்தய வெற்றிகளை ஈட்டியிருக்கிறார்.
1999ல் பிரிட்டிஷ் கிராண்ட் பிரி மோட்டார் பந்தயப் போட்டிகளின்போது, ஏற்பட்ட விபத்தொன்றில், ஷூமேக்கரின் கால் முறிந்தது.
2006ல் முதலில் ஓய்வு பெற்ற இந்த ஜெர்மன் நாட்டு வீரர், மூன்றாண்டுகளுக்குப் பின்னர், ஸ்பெயினில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில், கழுத்து மற்றும் முதுகுத்தண்டு காயமடைந்து, பின்னர் நலமடைந்து , 2010ல் நடந்த பார்முலா-1 பந்தயத்தில் கலந்து கொண்டார்.