உலகில் ஊழல் இல்லா நாடுகள் டென்மார்க் – நியூசிலாந்து முதலிடம்
இன்ரநாஷனல் ரான்ஸ்பரன்சி 2013 ம் ஆண்டுக்கான உலகளாவிய ஊழல் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள அறிக்கையில் ஊழல் இல்லாத நாடுகள் எவை என்ற தரப்படுத்தலில் டென்மார்க், நியூசிலாந்து, ஆகிய இரண்டு நாடுகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
இதில் சிறீலங்கா 91 இடத்தையும் இந்தியா 94 வது இடமும் பெற்று மோசமான ஊழல் நாடுகள் என்று மகுடம் சூட்டியுள்ளன.
சென்ற ஆண்டு 79 வது இடத்தில் இருந்த சிறீலங்கா இந்த ஆண்டு 91 வது இடத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளமை அந்த நாடு போகும் போக்கைக் காட்டுகிறது.
ஆப்கானிஸ்தான் – வடகொரியா – சோமாலியா ( கடைசி இடம் )
கடந்த 2004 ம் ஆண்டு 3ம் இடத்திலும் 2005ம் ஆண்டு 4ம் இடத்திற்கும் பின்தங்கிய டென்மார்க் இப்போது முதலிடத்தைத் தொட்டுள்ளன.
முக்கியமான நாடுகள் தரவரிசையில் :
03. பின்லாந்து – சுவீடன்
05. நோர்வே – சிங்கப்பூர்
07. சுவிற்சலாந்து
08. நெதர்லாந்து
09. அவுஸ்திரேலியா – கனடா
11. லக்சம்பேர்க்
12. ஜேர்மனி – ஐஸ்லாந்து
14. இங்கிலாந்து
15. பார்படாஸ் – பெல்ஜியம் – கொங்கொங்
18. ஜப்பான்
19. அமெரிக்கா – உருகுவே
21. அயர்லாந்து
22. பகாமாஸ் – பிரான்ஸ் – செயின்ற்லூசியா – சிலி
26. ஆஸ்திரியா – யுனைட்டட் அரபு எமிரேய்ட்ஸ்
28. எஸ்டோனியா – கட்டார்
30. பொஸ்ற்வானா
33. போத்துக்கல்
36. இஸ்ரேல்
46. தென் கொரியா
52. மொறீசியஸ்
53. மலேசியா – துருக்கி
63. கியூபா – சவுதி அரேபியா
69. இத்தாலி – குவைத் – ருமேனியா
72 பிரேசில் – தென். ஆபிரிக்கா
91. சிறீலங்கா
94. இந்தியா
116. வியட்நாம்
127. ரஸ்யா
136. பங்களாதேஷ்
144. ஈரான்
168. சிரியா
171. ஈராக்
172. லிபியா
174. சூடான்
175. ஆப்கானிஸ்தான் – வடகொரியா – சோமாலியா ( கடைசி இடம் )
பீஸா ஆய்வுகள் டென்மார்க் 15வது இடத்திற்கு வீழ்ந்தது
வருடந்தோறும் வெளியாகும் ஓ.ஈ.சி.டி நாடுகளின் மாணவர்களின் கல்வித்தரத்தை மதிப்பிடும் பீஸா ஆய்வறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
ஓ.ஈ.சி.டி நாடுகள் என்றால் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் உலக வர்த்தகத்தையும், பொருளியல் வளர்ச்சியையும் மேம்படுத்த 1948 ல் உருவாக்கப்பட்ட மாஷல் திட்டத்தில் இணைந்திருந்த ஓ.ஈ.ஈ.சி 20 நிறுவன நாடுகள், மற்றைய நாடுகளையும் சேர்த்துக்கொண்டு 1961ம் ஆண்டு உருவாக்கிய அமைப்பே ஓ.ஈ.சி.டி ஆகும், இதன் தலமைச் செயலகம் பிரான்சில் இருக்கிறது.
ஓ.ஈ.சி.டி என்றால் பொருளியல், கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு என்பது இதன் கருத்தாகும்.
உலகத்தில் உயர்ந்த வருமானம், உயர்ந்த வாழ்க்கைச் சுட்டெண் கொண்ட 34 நாடுகள் அதாவது வளர்ந்த நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றன, இந்த நாடுகளுக்குள் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மதிப்பீடு செய்யும் ஆய்வே பீஸா ஆய்வறிக்கையாகும்.
இந்த நாடுகளில் 15 வயதுடைய மாணவர்கள் கணிதம், வேதியல், மொழி ஆகிய மூன்று பாடங்களிலும் என்ன தரத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் ஆய்வாக இது இருக்கிறது.
வருடம் தோறும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சுமார் 2 மணி நேர பரீட்சை நடாத்தி மாணவர்களின் தராதரம் வெளியிடப்படும், இது மாணவர் தராதரம் என்பதைவிட ஒரு நாட்டின் தராதம்மியம் எப்படியுள்ளது என்பதைக் காட்டும் அறிக்கையாகும்.
டென்மார்க்கில் மொத்தம் 339 பாடசாலைகளில், 7481 மாணவர்கள் இந்த பாPட்சையில் பங்கேற்றார்கள்.
கடந்த 2009 ம் ஆண்டு 33 நாடுகளில் 12 வது இடத்தில் இருந்த டென்மார்க் 2012 ம் ஆண்டுக்கான அறிக்கையில் 34 நாடுகளில் 15 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
கடந்த 2009 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் டென்மார்க் 1.8 புள்ளிகள் மொத்தமாக பின்தங்கியுள்ளது, ஆகவே புதிய அரசு முன்னேற்றம் எதையும் எட்டித்தொடவில்லை என்பதையும் உணர முடிகிறது.
வாசிப்பில் டென்மார்க் 18 வது இடத்தில் இருக்கிறது. கணிதத்தில் 15 வது இடத்தில் இருக்கிறது.
வேதியலில் (பௌதிகம்) 19 வது இடத்தில் இருக்கிறது இவை மூன்றுமே ஓ.ஈ.சி.டி நாடுகளில் டென்மார்க்கின் கல்வித்தரம் நடுப்பகுதியில் இருப்பதையே காட்டுகிறது.
அதேவேளை ஓ.ஈ.சி.டிக்குள் வராத நாடுகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன, 65 நாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஒப்பீடு செய்யப்பட்டன டென்மார்க் மாணவர்கள் கணிதத்தில் வியட்நாம் மாணவரைவிட பின்தங்கியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
பீஸா அறிக்கையை வைத்து டேனிஸ் மாணவரின் திறமையை குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது, அது மட்டும் கல்வியின் தரநிலையைக் காட்டுவதற்கு போதுமானதல்ல என்கிறார் கல்வி அமைச்சர் கிறிஸ்டினா அன்ரோனிற்றி.
இதற்கான பத்திரிகையாளர் மாநாட்டில் நேரடியாக டென்மார்க் பின்தங்கியுள்ள செய்தியை சொல்லாமல் சுற்றி வளைத்து பேசி அமைச்சரும், அறிக்கையை விளக்கிய பேராசிரியரும் சமாளித்து முடிக்க பட்டபாடு பெரும்பாடாக இருந்தது.
கேட்பவர்கள் களைப்படைந்து ஓடிய பின்னர் உண்மையைச் சொல்லலாம் என்று கருதுவது போல இருந்தது அவர்களுடைய பத்திரிகையாளர் மாநாடு.
அமைச்சர் கையில் இந்த நாலு கடதாசிகளை திரும்பத்திரும்ப மேசையில் அடித்து, அடித்து அடுக்கிய காட்சி அவர் அறிக்கையைப் பார்த்து எவ்வளவு அரண்டு போயுள்ளார் என்பதைக் காட்டியது.
டென்மார்க்கை கல்வித்தரத்தில் முன்னேற்ற மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் வேண்டும் என்கிறார் அமைச்சர்.
TKS.DURAI