உதவும் வாய்ப்பு
08 Jul,2011
அன்று அந்த யாசகனுக்குக் கிடைத்தது சில நாவல் பழங்கள்தான். தன் விதியை நினைத்து நொந்துகொண்டு ஒரு மரத்தடியில் அவன் அமர்ந்திருந்தான். அவனுடைய பசிக்கு அந்த நாவல் பழங்கள் போதாதுதான். ஆனாலும் என்ன செய்வது?
திடீரென்று அங்கே மூடுபனி படர்ந்தது. அந்த இடமே ஒரே வெண்ணிறமானது. தனக்கு மிக அருகில் இருக்கும் பொருளைக்கூட அவனால் பார்க்க முடியவில்லை. வந்ததுபோலவே சட்டென்று பனி விலகியது. அப்போது, அங்கே ஒரு அழகான சிறுமி நின்றிருந்தாள். அந்த யாசகனைப் பார்த்து நேசத்துடன் சிரித்தாள் அவள். அவள் எதுவும் பேசவில்லை. புன்னகைத்தபடியே அவனைப் பார்த்துக் கை நீட்டினாள். அந்தச் சிறுமியின் அபூர்வ அழகைப் பார்த்து திகைத்துப் போன அவன் தன்னிடமிருந்த சில நாவல் பழங்களில் இரண்டை அவளது பிஞ்சுக் கரத்தில் வைத்தான்.
மிகவும் மகிழ்ச்சியுடன் அவற்றை வாங்கிக்கொண்ட அவள், அப்போதே தின்று முடித்து நன்றி சொல்லிப் போனாள். அவள் சென்று மறைந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் யாசகன். சற்று நேரத்திற்குப் பிறகு தன்னிடமிருந்த சிறு பொதியை அவிழ்த்து, தின்பதற்கு நாவல் பழங்களை எடுத்தான். பேராச்சரியம் அடைந்தான் அவன். அவனிடமிருந்த நாவல் பழங்களோடு சேர்ந்து இரண்டு தங்க நாவல் பழங்கள் இருந்தன. தான் அந்தச் சிறுமிக்குக் கொடுத்த இரண்டு நாவல் பழங்களுக்குப் பதிலாகத்தான் இந்த தங்க நாவல் பழங்கள் கிடைத்திருக்கின்றன என்று அவனுக்குப் புரிந்தது. வந்த சிறுமி சாதாரணமானவள் அல்லவென்றும், அவள் ஒரு குட்டி தேவதை என்றும் அவனுக்குப் புரிந்தது. இருந்த நாவல் பழங்கள் அனைத்தையும் அவளிடம் கொடுத்திருக்கலாமே என்று நினைத்து வருந்தினான் அவன்.
மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு நமக்குக் கிடைக்கும் வாய்ப்பை நாம் வீணாக்கிவிடக்கூடாது. தேவைப்படுபவர்களுக்கு நம்மிடமிருந்து நாம் எதைத் தர முடியுமோ, அதை நாம் மனப்பூர்வமாகத் தந்தே ஆக வேண்டும். மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதற்கு நமக்குக் கிடைக்கும் வாய்ப்பும், மற்றவர்களுக்குப் பணி செய்வதற்கு நமக்குக் கிடைக்கும் வாய்ப்பும் மிகவும் அரியவை. இந்த வாய்ப்புகள் கடவுளிடமிருந்து வருபவை