3 ஆண்டுகளில் 135 நாடுகளுக்கு பயணம் செய்த சொகுசுக்கப்பல்!
26 Apr,2023
Miray International என்ற பன்னாட்டு கடல் சுற்றுலா நிறுவனம், Life at Sea Cruises என்ற உலகளாவிய சொகுசுக் கப்பல் பயணத் திட்டத்தை தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி இஸ்தான்புல் நகரில் இருந்து தொடங்கும் இந்த பயணம், உலக அளவில் 7 கண்டங்களில் உள்ள 135 நாடுகளின் 375 துறைமுகங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கொண்ட இந்த சொகுசு பயணத்தில், 13 உலக அதிசயங்களுக்கும் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. சீனப் பெருஞ் சுவர், இந்திய தாஜ் மகால், பிரேசில் ரியோ நகரில் உள்ள மீட்பரான கிறித்து (Christ the Redeemer), மெக்சிகோ நாட்டில் உள்ள சிச்சென் இட்சா முதலான சுற்றுலா தளங்களும் இதில் அடங்கும்.
மேலும், மழைக்காடுகள் நிரம்பிய 103 தீவுகளுக்கு பயணம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள 375 துறைமுகங்களில், 208 இடங்களில் ஓர் இரவில் தங்கி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பயனர்கள் கூடுதல் நேரம் அங்கு செலவிட முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும் சுற்றுலா பயணிகள் பயண நாட்களின் போதே தங்கள் அலுவலக பணிகளை மேற்கொள்ளவும் வசதி மேற்கொள்ளப்பட்டுளளது. இந்த சொகுசுக் கப்பலுக்குள் 14 அலுவலகங்கள், 2 சந்திப்பு அறைகள், பிரிண்டர், மேம்படுத்தப்பட்ட இணைய வசதி, முதலான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்கமுடியாத மற்றும் ஆடம்பரமான அனுபவத்தை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன என்று அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான கட்டண விகிதம் ஆண்டு ஒன்றுக்கு, ₹24,51,300 முதல் ₹89,88,320 வரை தான் என்றும் தெரிவித்துள்ளார்.