நேட்டோவில் சுவீடனுக்கு முன்னர் பின்லாந்து இணைவதற்கு வாய்ப்பு: சுவீடன் பிரதமர்
14 Mar,2023
நேட்டோ அமைப்பில் சுவீடனுக்கு முன்னரே பின்லாந்து இணைவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது என சுவீடனின் பிரதமர் உல்வ் கிறிஸ்டேர்சன் இன்று கூறியுள்ளார். நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கியின் எதிர்ப்பு தொடர்வதே இதற்கான காரணம் என அவர் கூறியுள்ளார்.
'இப்படி நடக்கும் என்பதற்கான உறுதிப்படுத்தல் எம்மிடம் இல்லை. ஆனால், அண்மைக் காலத்தில் நடைபெற்ற பல பேச்சுவார்த்தைகளின் பின்னரான மதிப்பீடுகளின்படி, இப்படி நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக நாம் எண்ணுகிறோம்' என சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் செய்தியாளர்களிடம் பிரதமர் கிறிஸ்டேர்ன் கூறினார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நேட்டோவில் இணைய முடியும் என தாம் நம்புவதாக சுவீடனும் பின்லாந்தும் முன்னர் கூறியிருந்தன.
நேட்டோவில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு, தற்போது அங்கம் வகிக்கம் 30 நாடுகளும் அங்கீகாரம் அளிக்க வேண்டு;ம். சுவீடன், பின்லாந்தின் விண்ணப்பங்களை துருக்கியும், ஹங்கேரியும் மாத்திரம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
சுவீடனிலுள்ள துருக்கிய தூதரகத்துக்கு முன், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது புனித குர்ஆன் எரிக்கப்பட்டதையடுத்து, சுவீடனுடனான பேச்சுவார்த்தைகளை துருக்கி இடைநிறுத்தியது. கடந்த 9 ஆம் திகதி இப்பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகின.
ஏற்கெனவே தான் பயங்கரவாதிகள் என பிரகடனப்படுத்திய குர்;திஷ் தொழிலாளர் கட்சி அங்கத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக சுவீடன் மீது துருக்கி குற்றம் சுமத்தி வந்தது.