ஒரே நேரத்தில் பெண் போலவும், புரோக்கர் போலவும், உறவினர் போலவும் பேசிய ஒப்புதல் வாக்குமூலத்தால் நீதிபதியே அதிர்ச்சி அடைந்துள்ளார் என்பது குரிப்பிடத்தக்கது
சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகுராம்(39). நுங்கம்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் சாஃப்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
ரகுராமிற்கு திருமணம் செய்வதற்காக வீட்டில் பெண் தேடி வந்துள்ளனர். மேட்ரிமோனியல் மூலம் தன் மகனுக்கு பெற்றோர் வரன் தேடி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ரகுராமின் தந்தை பாலசுப்பிரமணியன் செல்போனிற்கு மேட்ரிமோனியல் மூலமாக ஒரு மணப்பெண் குறித்து தகவல் வந்துள்ளது. அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய பாலசுப்பிரமணியிடம், தன்னுடைய பெயர் கல்யாண ராமன் எனவும், தன்னுடைய அண்ணன் மகள் ஐஸ்வர்யா என்ற பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பாலசுப்ரமணியன் தன்னுடைய மகனின் விவரங்களை பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மீண்டும் பாலசுப்ரமணியனை தொடர்பு கொண்ட கல்யாணராமன், ரகுராமை வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டதாகவும் விரைவில் திருமணம் செய்ய நிச்சயம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து ரகுராமும் ஐஸ்வர்யாவும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ரகுராமிடம் மருத்துவ செலவிற்கு பணம் கேட்டுள்ளார். இதை நம்பிய ரகுராம் முதலில் ஜிபேயில் 8,000 பணம் அனுப்பி உள்ளார்.
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என ஐஸ்வர்யா 4 மாதங்களில் 71 முறை ரகுராமிடம் சுமார் 21 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கி உள்ளார். இந்நிலையில் ரகுராம், ஐஸ்வர்யாவிடம் திருமண ஏற்பாடுகள் குறித்து கேட்டதற்கு , கல்யாணராமனும் ஐஸ்வர்யாவும் ஏதாவது காரணம் கூறி தட்டிக் கழித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் திருமணம் வேண்டாம் என ஐஸ்வர்யா மறுத்துள்ளார்.
திருமணம் செய்ய மறுத்ததால் ரகுராம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை திரும்ப தர முடியாது என கல்யாணராமனும், ஐஸ்வர்யாவும் ரகுராமிடம் கூறியதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரகுராம் புகார் அளித்தார்.
நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தியதில் சேலத்தைச் சேர்ந்த தாத்தாத்ரி (49) என்பவர் கல்யாணராமன் என்ற பெயரிலும் ஐஸ்வர்யா என்ற பெயரிலும் புரோக்கராகவும் ஒரே நபர் மூன்று நபர்களை போல் பேசி மோசடி செய்திருப்பது போல விசாரணையில் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் மேட்ரிமோனி இணையதளத்தில் ஐஸ்வர்யா என்ற பெயரில் கணக்கு துவங்கி இணையதளத்திலிருந்து மாடலிங் பெண் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. கடந்த நான்கு மாதமாக செல்போனிலேயே பேசிக்கொண்டு ஐடி ஊழியரான ரகுராமிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
புகைப்படத்தை பார்த்துவிட்டு அழகாக இருப்பதால் ஐஸ்வர்யா கேட்கும் போதெல்லாம் ரகுராம் பணம் அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது. ஒரே நேரத்தில் பெண்ணின் உறவினர் போலவும் பெண்ணை போலவும் புரோக்கர் போலவும் மாறி மாறி பேசி ஏமாற்றியது விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
இவரது ஒப்புதல் வாக்குமூலத்தால் விசாரணை செய்த எழும்பூர் நீதிபதியே அதிர்ச்சியடைந்துள்ளார். இதுபோன்று மேட்ரிமோனியலில் பெண்கள் பெயரில் எத்தனை ஆண்களை ஏமாற்றியுள்ளார்? எவ்வளவு பணம் ஏமாற்றியுள்ளார்? என்பது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.